மீண்டும் ஏவுகணை சோதனை – தென் கொரியாவை அச்சுறுத்தும் வடகொரியா

கொரிய கடற்பகுதியில் வடகொரியா இன்று ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்கொரிய ஊடக தரப்பில் “கொரிய கடற்பகுதியில் வடகொரியா இன்று காலை ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த ஏவுகணை சோதனை பற்றிய கூடுதல் தகவல் இதுவரை தெரியவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாரத்தில் இரண்டு ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – தென்கொரிய படைகள் கொரிய தீபகற்பத்தில் கடந்த சில நாட்களாக இராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், இம்மாத இறுதியில் இரு நாடுகளும் மிகப்பெரிய இராணுவ பயிற்சிக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து வடகொரியா 10க்கும் அதிகமான ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை உலக நாடுகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை சரி செய்வதில் கவனம் செலுத்தாமல் ஏவுகணை சோதனைகளை மேம்படுத்துவதிலேயே அந்நாடு கவனம் செலுத்துவதாக ஐ.நா. கடந்த ஆண்டு கண்டித்திருந்தது. இதற்காக வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனையை தொடர்ந்து வருகிறது.