மத்திய கிழக்கு போர்: 1,100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் போர், மத்திய கிழக்கு முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு பேரழிவு தரும் நிலையை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்ற யுனிசெஃப் (UNICEF) அமைப்பு கூறுகிறது.

பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் இதுவரையில் இடம்பெற்ற வன்முறைச் செயல்களால் 1,100 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உயிரிழந்து அல்லது காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கையிடப்பட்டுள்ளபடி, உயிரிழந்த சிறுவர்களில் ஈரானில் 200 பேரும், லெபனானில் 91 பேரும், இஸ்ரேலில் நால்வரும் மற்றும் குவைத் நாட்டில் ஒருவரும் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தம் மேலும் தீவிரமடைந்து வருவதால், இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும் என யுனிசெஃப் அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த நெருக்கடி காரணமாக மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு கல்வி பறிபோயுள்ளதுடன், இடைவிடாது நடத்தப்படும் குண்டுத் தாக்குதல்கள் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

“குழந்தைகளின் உயிர்களைப் பறிப்பது, அவர்களை ஊனமுற்ற நிலைக்கு ஆளாக்குவது அல்லது குழந்தைகள் தங்கியிருக்கும் அத்தியாவசிய சேவைகளை அழிப்பதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது” எனவும் அந்த அமைப்பு கூறுகிறது.