19 ஆண்டுகள் கடந்தும் கொலையாளிகள் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றனர்: நீதி மறுக்கப்பட்ட சமூகமாக ஊடகர்கள்- சசி புண்ணியமூர்த்தி

ஊடகவியலாளர் நடேசனை படுகொலை செய்தவன் இன்று மட்டக்களப்பு மக்களின் பிரதிநிதி.

ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்) அவர்களின் 19ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்னும் சில தினங்களில் அனுஸ்டிக்கவுள்ள நிலையில் இதுவரை அவரது கொலைக்கான நீதி கிடைக்கவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை என்று தான்  கூறவேண்டும்.

மட்டக்களப்பில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை சிறிலங்கா ஒட்டுக் குழுக்களின் ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப்பற்றாளர்” ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்) அவர்களின் 19ம் ஆண்டு நினைவு வணக்கநாள். இன்றும் அவருக்கான நீதி கிடைக்கவில்ல.

2004ம் ஆண்டு வைகாசி மாதம் 31ம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்த போது இவர் ஒட்டுக் குழுக்களினால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜ.நடேசன் தொழில் நிமிர்தம் பல ஆண்டுகள் மட்டக்களப்பில் இருந்து வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.

நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடகப்பணியை செவ்வனே ஆற்றியிருந்தமை யாவரும் அறிந்த உண்மை.

இவரது ஊடகப்பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் ஒட்டுக் குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.

20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், ‘நெல்லை நடேசன்’ என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை  உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றியிருந்தார்.

தமிழர்களுடைய வரலாறுகளை மடக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.

இனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் யார் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பவராக இருந்தவர் என்பது நிதர்சனம்.

ஏதாவது ஒரு இனப் படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால் கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார்.

எதனையும் துணிகரமாக நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் காட்டும் இவரது குணாம்சம் என்பன காரணமாக பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.

பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், அவரது வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும் கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களுக்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகர்.

மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தில் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்டங்களையும் வெளிக்கொண்டு வந்தவர்.

பல இக்கட்டான காலங்களில் கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது.

நாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும்.

ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஜி.நடேசன், மாமனிதர் சிவராம், மயில்வாகன் நிமலராஜன், லசந்த விக்கிரதுங்க, டிச்சர்ட் டி சொய்சா முதல் இன்றுவரை 47 க்கும் மேற்பட்ட ஊடகர்கள் இதுவரை படுகொலை செயப்பட்டுள்ளனர்.

இவர்களைப் படுகொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்திருந்தும், அவர்கள் இன்று சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக இருந்தாலும் அவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவும் இல்லை, இழக்கப்பட்ட உயிர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவும் இல்லை.

சவால் மிகுந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் பல ஊடக ஜம்பவான்களை இழந்த இந்த மண்ணில் இன்றும் கூட அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே ஊடகர்களின் பயணங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது .

அன்று நடேசன் யாரால் சுட்டுக் கொல்லப்பட்டாரோ அதே ஒட்டுக் குழுக்கள் இன்றும் அதே பாணியில் தங்களது நடவடிக்கைகளை மட்டக்களப்பு மண்ணில் மேற்கொண்டு தான் வருகின்றார்கள்.

இன்றுவரை இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதிகள் வழங்கப்படவில்லை ஊடகவியலாளர்களை கடத்தியும், காணாமல் ஆக்கியும், படுகொலை செய்தவர்களை மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பாதுகாத்துக் கொண்டே இருக்கின்றது.

ஆகவே உயிரிழந்த ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச பொறிமுறை ஊடாக சர்வதேச ஊடக அமைப்புகள் இவற்றை கவனத்தில் எடுத்து இன்றும் கண்முன் நடமாடிக் கொண்டிருக்கும் கொலையாளிகளை சர்வதேச சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளருக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் அவர்களது குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் வடக்கிலும் கிழக்கிலும் தொடர்ச்சியாக அச்சுறுத்தப்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட வேண்டும் .

இனிமேலும் இது போன்ற படுகொலைகள் மூலம் ஊடகவியலாளர்களின் உயிர்களை இழக்காமல் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்த படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் ஆத்மா சாந்தியடையும் .

ஒரு பேனா போராளியான ஊடகவியலாளர்கள் இன்றும் பல  அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வண்ணமே இருக்கின்றது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் ஊடகம், ஊடகவியலாளர்கள் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் ஊடகவியலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் கொலையாளிகள் சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்

ஊடகத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த தந்தையை இழந்து துடிக்கும் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்து துயரப்படும் அவரது மனைவிக்கும், நல்ல ஒரு ஊடக நண்பனை இழந்து துடிக்கும் சக ஊடக நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு தடவை ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.