அதிகளவில் கண்ணிவெடிகளை புதைப்பதும் போர்க்குற்றமே – மன்னிப்புச்சபை

அதிகளவான கண்ணிவெடிகளை புதைப்பதன் மூலம் மியான்மார் அரசு போர்க்குற்றங்களை இழைத்துவருவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை கடந்த புதன்கிழமை (20) குற்றம் சுமத்தியுள்ளது.

தென்கிழக்கு பகுதியில் உள்ள கஜா என்ற கிராமத்தை சுற்றி பெருமளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. கரொனி எனப்படும் இனத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவுடனான மோதல்களை தொடர்ந்தே இவ்வாறு கண்ணிவெடிகள் புதைக்கப்படுகின்றன.

M-14 கண்ணிவெடிகள் கால்களை கணுக்காலுடன் சேதப்படுத்தக்கூடியவை, M.M-2 கண்ணிவெடிகள் கால்களை முழங்காலுக்கு கீழ் முற்றாக சேதப்படுத்தக்கூடியதுடன், ஏனைய பகுதிகளிலும் காயங்களை ஏற்படுத்த வல்லவை. இவை மியான்மாரில் தான் தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறான கண்ணிவெடிகளை பயன்படுத்துவது மிகவும் கொடுமையானது, பெருமளவான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என அனைத்துலக மன்னிப்புச்சபையின் நெருக்கடிகளுக்கான தகவல் பிரிவின் பிரதித் தலைவர் மற் வெல் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மியான்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பின் அங்கு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. போரட்டக்காரர்களுக்கு எதிரான படை நடைவடிக்கைகளில் இதுவரையில் 2000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் இருந்து கஜா என்ற கிராமத்தில் 20 இற்கு மேற்பட்டவர்கள் கண்ணிவெடிகளில் சிக்கி உயிரிழந்தும் காயமடைந்துமுள்ளனர்.