‘அரசாங்கத்தின் ஆட்கள்’ எனக் கூறி மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட வாகனத்தில் வந்த சிலர் தம்மை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முயற்சித்ததாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் காவல் துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
“நான் எனது உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி ஊடாக பழைய தபாற் கந்தோர் ஒழுங்கை ஊடாக சென்று கொண்டிருந்த போது – எங்களிற்கு பின்னால் வந்து கொண்டிருந்த மத்திய மாகாணத்தில் பதியப்பட்ட பி.பி 0595 என்ற அதி சொகுசு பிக்கப்பில் வந்த பத்து பேர் என்னை அச்சுறுத்தினார்கள்”.
தவிசாளார் தொலைபேசியில் அவசர காவல்துறை (119) இலக்கத்திற்கு முயற்சித்த போது, தாம் அரசாங்கத்தின் ஆட்கள் எனக் கூறியவாறு தவிசாளரைத் தாக்குவதற்கு கட்டிட உடைவு கல் ஒன்றினை அக் குழுவில் வந்திருந்த ஒருவர் தூக்கி வீச எத்தனித்த போது அவ்விடத்தில் மக்கள் ஒன்று கூடியவுடன் தவிசாளார் அச்சுறுத்தியவர்களை படம் பிடிக்க, தாமும் படம் பிடித்தவாறு விலகிச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடத்தில் இருந்து யாழ்ப்பாணம் காவல் நிலையம் சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் அச்சுறுத்தியவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் முறைப்பாட்டினைப் பதிவு செய்துளளார். சுற்றிவர சி.சி.டிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடமென்றில் இவ் அச்சுறுத்தல் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.