சர்ச்சைக்குரிய யாழ். பழைய பூங்கா கட்டுமானம் குறித்து மாநகர சபை முக்கிய தீர்மானம் நிறைவேற்றம்

யாழ்ப்பாணம் பழைய பூங்கா அமைந்துள்ள பகுதியில் எந்தவிதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று யாழ்ப்பாணம் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு மாநகரசபை முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதி முதல்வர் இ.தயாளனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பிரேரணைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ தாங்கள் செயற்படப்போவதில்லை என்ற கருத்தை முன்வைத்து, தேசிய மக்கள் சக்தியின் 10 உறுப்பினர்களும் சபையிலிருந்து வெளியேறியிருந்தனர்.

தொடர்ந்து சபையில் உரையாற்றிய பிரதி முதல்வர், சிங்கள மகாவித்தியாலயத்தில் உள்ள இராணுவத்தை வெளியேற்றி அதில் உள்ளக விளையாட்டு அரங்கை அமைக்கலாம் என யோசனை ஒன்றையும் முன்வைத்தார்.
குறித்த யோசனையை சபையிலிருந்த அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.