இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய கடற்படையின் போர்கப்பல் ‘INS UDAYGIRI’!

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இன்றைய தினம் (2026 செப்டம்பர் 08) நாட்டை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் குறித்த கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர்.

இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்துள்ள, 149.02 மீற்றர் நீளமுடைய Frigate வகையைச் சேர்ந்த ‘INS UDAYGIRI’ போர்க்கப்பலின் கட்டளை அதிகாரியான  கெப்டன் Vikas Sood மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பொன்று கட்டளைத் தலைமையகத்தில் இடம்பெற்றதுடன், கெப்டன் Vikas Sood, இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக 2020 ஆம் ஆண்டு ஜூலை முதல் 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை கடமையாற்றியுள்ளார்.
மேலும், ‘INS UDAYGIRI’ போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அதன் அங்கத்தவர்கள் இருநாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளதுடன், நாட்டின் முக்கிய இடங்களைப் பார்வையிடுவதற்காக நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

அத்துடன், இப் போர்க்கப்பலின் செயல்பாடுகளைப் பார்வையிடுவதற்கும், அது தொடர்பான தொழில்முறை அறிவைப் பரிமாறிக்கொள்வதற்கும் இலங்கை கடற்படை வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவுள்ளதுடன், இலங்கை கடற்படையினரால் கப்பலினுள் பயிற்சித் திட்டங்களை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.