இலங்கைக்கு கடன் உதவி கொடுக்கும் போது இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்; ராமதாஸ்

இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும்
இலங்கைக்கு ரூ.18,090 கோடி கடன் வழங்கும் இந்தியா நிபந்தனை விதிக்க வேண்டும் என வலியறுத்தியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் எஸ்.ராமதாஸ், அதற்கான சில வுிடயங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பில் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

“வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வாங்குவதற்காக ரூ.18,090 கோடி கடன் வசதியை இந்திய அரசு வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவு இராஜதந்திர நடவடிக்கை என்றாலும் கூட, இலங்கை அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இதை இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீனாவின் பக்கம் சாய்ந்து கொண்டிருந்த இலங்கை அரசை இந்தியாவின் பக்கம் திருப்புவதற்கான இராஜதந்திர நடவடிக்கையாகவே இந்த கடனுதவி பார்க்கப்படுகிறது. ஆனால், கச்சத்தீவு உள்ளிட்ட நிலப்பரப்பையும், கோடிக்கணக்கில் நிதியுதவியையும் பெற்றுக் கொண்டு, பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு, இம்முறையாவது நமது உதவியை பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்குமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இந்தியாவின் பாதுகாப்பு சார்ந்த இந்த அம்சத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கையை சீனாவிடம் இருந்து பிரிக்கும் நோக்குடன் கடனுதவி வழங்கும் அதே நேரத்தில், இந்தியாவுக்கு ஆதரவான இலங்கைத் தமிழர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்” எனவும் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

Tamil News