இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது என இந்தியாவின் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே தின நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொட்டகலை சி.எல்.எவ்.வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அவர்,
“இலங்கை இந்தியாவிற்கு அருகிலுள்ள நாடு, எமது சொந்தங்கள் வாழும் நாடு என இரு கோணத்தில் இந்தியா பார்க்கின்றது. அதனால்தான் நெருக்கடியான கட்டங்களில் உதவிகள் வழங்கப்படுகின்றன. உயிர் காப்பு மருந்து தேவை என்று சொன்னபோது, 107 வகையான 760 கிலோ மருந்துகளை அனுப்பி வைத்துள்ளோம். எதிர்காலத்திலும் உதவுவோம். மலையக மக்களுக்கான உதவிகளும் தொடரும். நாம் வளரும் அதேவேளை, எமது தொப்புள்கொடி உறவுகளையும் வளர வைப்போம். மலையகம் கல்வியால் உயர வேண்டும். அதற்கான உதவிகளும் தொடரும்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, நீண்டகாலத்துக்கானது அல்ல. விரைவில் நிலைமை மாற வேண்டும்.
இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் போராடிக்கொண்டிருக்கின்றது” என்றார்.
இந்நிலையில், யாழ்ப்பாணத்திற்கு இன்று (திங்கட்கிழமை) காலை பயணம் செய்த பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை நல்லூர் கோயிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
இந்த நிகழ்வில் யாழிற்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.