IMF மீளாய்வு ஒப்புதல் குறித்து இன்று இயக்குநர் சபை ஆலோசனை

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆராய்வதற்கு புதன்கிழமை (27) நாணய நிதியத்தின் இயக்குநர் சபை கூடுகிறது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ, கடந்த சில ஆண்டுகளில் பெரும்பாகப் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதிலும், வெளிநாட்டுக்கையிருப்பு மட்டத்தை வலுப்படுத்துவதிலும், சந்தை மீதான நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்புவதிலும் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு அதிகாரிகளின் இந்தத் தொடர்ச்சியான முயற்சிகளின் ஊடாக பொதுமக்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் மத்தியிலான நம்பிக்கை வலுப்படுத்தப்பட்டிருப்பதாகவும், அதனூடாக நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அண்மையகாலத்தில் பதிவாகியிருக்கும் உலகளாவிய போக்குகள் நாட்டின் பொருளாதாரம் மீது புதிய அழுத்தங்களைத் தோற்றுவித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், எனினும் இலங்கையின் கொள்கைசார் கட்டமைப்பு கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் தற்போது முன்னேற்றகரமான நிலையில் இருப்பதாகப் பாராட்டு வெளியிட்டுள்ளார்.

அதேவேளை நாணய நிதியத்தின் இயக்குநர் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கிடைக்கப்பெறும் நிதியின் ஊடாக நாட்டின் கையிருப்பின் பெறுமதியை வலுவான மட்டத்தில் பேணமுடியும் என இலங்கை மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.