Home Blog Page 85

ஐந்தாண்டுகளில் 2000 மெகா வோல்ட் சூரிய மின் சக்தி உற்பத்திக்கு எதிர்பார்ப்பு – அமைச்சர் குமார ஜெயக்கொடி

அடுத்த 5 வருடங்களில் நாம் 2000 மெகா வோல்ட் சூரிய சக்தி மின்சாரத்தினை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம் என்று வலுச்கதி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாட்டின் புதன்கிழமை (16) இரண்டாம் நாள் அமர்வுகளின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சூரிய சக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டங்களும் எமக்குள்ளன. சூரியசக்தி தொடர்பில் எமது கொள்கையானது நிலையானது என்பதோடு பிராந்திய, சர்வதேச ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராகவுள்ளோம்.

சர்வதேச நாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதனால் தொழில்நுட்பத்தினை மேம்படுத்திக்கொள்வதோடு முதலீடுகளையும், நிதி உள்வருகைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

தொழில்வாய்ப்புக்களை மேம்படுத்தவும், புதிய சந்தை அனுகல்களை அடையவும் உள்நாட்டு கைத்தொழில்துறை மேம்பாட்டுக்கும் சூரியசக்தியால் நன்மைகள் உள்ள நிலையில் அது தொடர்பில் நாம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளோம்.

இயற்கை வளங்களின் ஊடாக பெறப்படும் மின்சாரத்தின் மொத்த அளவில் 13 சதவீதமானது சூரிய சக்தியினால் பெறப்படும் மின்சாரமாக காணப்பபடுகிறது.  அத்துடன் அடுத்த 5 வருடங்களில் நாம் 2,000 மெகா வோல்ட் சூரிய சக்தி மின்சாரத்தினை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம். அந்த இலக்கை நாம் விரைவாகவே அடைவோம் என்ற நம்பிக்கையும் உள்ளது.

சூரியஒளி அதிகமாகவுள்ள காரணங்களில் விசேடமாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருப்பதால் நுகர்ச்சியை விடவும் அதிகமான சூரிய மின்சக்தி கிடைக்கிறது. இலங்கையைப் பொறுத்தவரையில் 1400 மெகா வோல்ட்டுக்கும் அதிகமான சூரிய சக்தி கிடைகின்றது. ஆகவே அதனை சேமித்து வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம். மின்கலங்கள் அல்லது ஹைட்டோ ஊடாக சேமிப்பதற்கு நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் நிறுவனத்தின் மகிழ்ச்சி தகவல்!

20250222 122722 நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் கப்பல் நிறுவனத்தின் மகிழ்ச்சி தகவல்!

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர்  சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு இருவழி கட்டணமாக 28 ஆயிரத்து முந்நூறு ரூபாவும், காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் செல்வதற்கு ஒருவழி கட்டணமாக 12 ஆயிரத்து முந்நூறு ரூபாவும், நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வருவதற்கு ஒருவழி கட்டணமாக 16 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகிறது.

இதேவேளை நல்லூர் பெருந்திருவிழாவினை முன்னிட்டு எமது பயணிகளுக்காக விசேட சலுகைகளை வழங்கவுள்ளோம். அந்த சலுகைகள் தொடர்பாக விரைவில் அறிவிப்போம்.

எமது கப்பல் சேவையானது வழமை போல செவ்வாய் கிழமை தவிர்ந்த ஆறு நாட்களும் சிறப்பான சேவையில் ஈடுபட்டு வருகின்றது. கப்பல் சேவையில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமிடத்து அவை குறித்து நாங்கள் முற்கூட்டிய அறிவிப்பு வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கைக்கு உதவி தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் உதவுவோம்”: சீனா தெரிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கம் மானியமாக வழங்கியுள்ளது.

பிரதமர் ஹரணி அமரசூரியவிடம் இலங்கைக்கான சீனத் தூதர் Qi Zhenhong இந்த சீருடைகளை நேற்று கல்வி அமைச்சில் வழங்கினார்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதமர், “இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே இருந்து வருவது ஒத்துழைப்புடன் கூடிய நீண்டகால நட்பாகும். எமது நாட்டின் பாடசாலை மாணவர்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த சீருடையும் அந்த நீண்டகால நட்பின் ஓர் அங்கம் ஆகும்.

2023 – 2024 ஆண்டுகளிலும் சீன அரசு எமது பாடசாலை சீருடைத் தேவையில் கணிசமான பகுதியைக் கொடுத்துள்ளதோடு, 2025 ஆம் ஆண்டின் முழு சீருடைத் தேவையையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இலங்கை மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் இருந்தபோது, எமது மாணவர் சமுதாயத்தின் கல்வியை முன்னெடுப்பதற்காக சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற அந்த நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த இலங்கைக்கான சீனத் தூதர் Qi Zhenhong,

“இலங்கைக்கு உதவி தேவைப்படும் சகல சந்தர்ப்பங்களிலும் சீனா உங்களது நம்பிக்கைக்குரிய சகோதரனாகவும் உதவியாளனாகவும் செயல்படும். இலங்கையின் குழந்தைகள் இந்த நாட்டின் எதிர்காலம் மட்டுமல்ல, சீன இலங்கை நட்பின் வாரிசுகளும் ஆவர்.

அவர்களின் சீருடையிலுள்ள ஒவ்வொரு தையலிலும், பழமையான நமது இரு நாட்டு நாகரிகங்களுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பின் கதையும் பின்னிப் பிணைந்திருக்கும். பிரதமர் ஹரினி அமரசூரிய கொடுக்கும் பங்களிப்பையும் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பையும் நான் மிகவும் பாராட்டுகிறேன்,” எனத் தெரிவித்தார்.

இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்

இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை இளைஞர்களுடனான கலந்துரையாடல்களில், பங்கேற்றவர்களில் பெரும்பாலோர் ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்புவதாகக் கூறினர், ஆனால் பொருளாதார சிக்கல்கள் இதற்கு தடையாக இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் இலங்கையில் வாழ்க்கைச் செலவு இரட்டிப்பாகியுள்ளது என்றுஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதி கூலி அடெனியி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக, வீட்டுவசதி மற்றும் உணவுக்கான செலவும் அதிகரித்துள்ளது, மேலும் ஒரு குடும்பத்தைத் தொடங்க நினைத்த இளைஞர்கள் அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் குழந்தை பிறக்கும் வயதுடையவர்களில் சுமார் 20 வீதம் பேர் தாங்கள் விரும்பும் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பெற முடியாது என்று நம்புவதாக ஐ.நா. அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

ஐ. நா. விசேட அறிக்கையாளருக்கு எதிரான அமெரிக்காவின் தடை: மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

ஐக்கியநாடுகளின் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிக்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை குறித்து கவலை தெரிவித்து இலங்கை உட்பட  நாடுகள் சில ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை பேரவையின் தற்போதைய தலைவர் ஐநா அறிக்கையாளருக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் குறித்து வெளியிட்டுள்ள கவலையை நாங்கள் எதிரொலிக்கின்றோம் என மனித உரிமை ஆணையாளருக்கு  எழுதியுள்ள கடிதத்தில் இலங்கை பொலிவியா பிரேசில் சிலி சீனா கியுபா தென்னாபிரிக்கா ஸ்பெய்ன் பாலஸ்தீனம் உட்பட பல நாடுகள் தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகமும் ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்களும் சுயாதீன ஐக்கியள நாடுகள் நிபுணர்கள் பணியாளர்கள் மற்றும் விசேட முகவர் அமைப்புகளிற்கு  எதிராக சமூக  ஊடகங்களில் தொடர்ச்சியாகவும் தீவிரமாகவும் முன்னெடுக்கப்படும் தாக்குதல் குறித்து கவலை வெளியிட்டிருந்தன என இந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

Gv ஐ. நா. விசேட அறிக்கையாளருக்கு எதிரான அமெரிக்காவின் தடை: மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கும் இந்த தேவையற்ற நியாயமற்ற தாக்குதல்கள் ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர்களின் நியாயபூர்வதன்மை மற்றும் நம்பகதன்மையை குறைமதி;ப்பிற்கு உட்படுத்த முயல்கின்றன என தெரிவித்துள்ள இந்த நாடுகள் குறிப்பாக சர்வதேச சட்டங்கள் பாரியளவில் மீறப்படுவதை அம்பலப்படுத்துபவர்கள் இவ்வாறான சமூக ஊடக தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர் என குறிப்பிட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நியமித்த சுயாதீன நிபுணர்கள் என்ற அடிப்படையில் விசேட அறிக்கையாளர்கள் அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் பழிவாங்கல்கள் இன்றி தங்கள் பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்படவேண்டும் என இந்த நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன.

1967ம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளிற்காக ஐநாவின் விசேட அறிக்கையாளருக்கான ஆணைக்கான எங்கள் ஆதரவை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகின்றோம் யூத எதிர்ப்பு,வன்முறை பயங்கரவாதம் போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நிராகரிக்கின்றோம் இந்த நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கான கடிதத்தில் தெரிவித்துள்ளன.

 

இலங்கையின் விசேட தூதுக்குழு, இந்திய வெளியுறவுச் செயலாளர் இடையே சந்திப்பு

24 பேர் கொண்ட இலங்கை தூதுக்குழு இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இரு தரப்புக்கும் இடையிலான ஆழமான உறவுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.  14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 பேர் கொண்ட இலங்கை தூதுக்குழு இரண்டு வார கால விஜயம் மேற்கொண்டு நேற்று (15) இந்தியாவை சென்றடைந்தது.

இந்திய – இலங்கை கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பை இந்திய வெளியுறவுச் செயலாளர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார். அத்துடன் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட பிராந்திய புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி நகரில் 40 வீதத்திற்கும் அதிகமான காணிகளை படையினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்துள்ளதாக சிறிதரன் சாடல்

கிளிநொச்சி நகரில் 40 வீதத்திற்கும் அதிகமான காணிகளை படையினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று (16) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் நீண்ட காலமாக மக்கள் பயன்படுத்திய காணிகள் படையினர் மற்றும் வனவள திணைக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

குறிப்பாக ஆனைவிழுந்தான் குளத்தின் கீழான வயல் காணிகள், பள்ளிக்குடா பகுதியில் உள்ள காணிகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. யுத்தம் நிறைவுபெற்று இத்தனை வருடங்கள் கடந்துள்ள போதிலும் இராணுவம் இவ்வாறு காணிகளை ஆக்கிரமித்து வைத்திருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கிளிநொச்சி மகா வித்தியாலய மைதானத்திற்கு செல்லும் பாதை உள்ளிட்ட பெருந்தொகையான காணிகளை இராணுவத்தினர் வைத்துள்ளதாகவும் இதனால் அபிவிருத்தியோ அல்லது நல்லிணக்கமோ ஏற்படாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், குறித்த காணிகள் தொடர்பில் இராணுவ தரப்பிலிருந்து விளக்க கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இந்தநிலையில் பாதுகாப்பு செயலாளருடனும், இராணுவ உயரதிகாரிகளுடனும் மீண்டும் கலந்துரையாடி குறித்த பாடசாலை காணியை விடுவிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசுகளுடனான உறவுகளும், ஈழத் தமிழர் போராட்டமும் (பகுதி 1) மு. திருநாவுக்கரசு 

அரசற்ற ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டமானது, அடிப்படையில் உள் நாட்டு தன்மைவாய்ந்ததாயினும்,  போராட்டத் திற்கான கட்டுமானமானது பெரிதும் வெளிநாட்டு பரிமாணங்களை கொண்டது.
மிகச் சரியான, துல்லியமான வெளிநாட்டு பார்வையின்றி, சர்வதேசப் பார்வையின்றி மேற் படி வகையிலான ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை வெற்றிக்குரியதாக்குவது சாத்தியமில்லை.
இந்த வகையில் அடிப்படை யிலுமாக அரசு, வெளிநாடு, சர்வ தேசம் பற்றிய ஒரு கணிப்பீடு போராடும் ஈழத்தமிழர் மத்தியில் சரிவர அமைய வேண்டும்.
பொதுவாக தமிழீழப் போராட்டத்தை முன்னெடுக்கும் பல்வேறு சக்திகள்மத்தியிலும் அதற்கான கணிப்பீடு மிகவும் பல வீனமாக உள்ளது.
ஈழத்தமிழர் மத்தியில் புராண, இதிகாச, காப்பிய கலாச்சாரங்களின் பின் னணியினால் தூய்மைவாதமும், கற்பனாவாதக் கருத்தோட்டமும், சிந்தனைப்போக்கும் மேலோங்கியுள்ளன.யதார்த்தத்திற்குப் புறம்பான, நடைமுறைக் கொவ்வாத இத்தகைய கருத்துமண்டலத்துள் சிக்குண்டு, இரத்தமும் தசையுமான நவீன சர்வதேச அரசியலை மனவேகக் கற்பனைகளினால் தலையிற் தூக்கி, காலிற் போட்டுடைக்கும் ஒரு பரிதா பகரமான போக்கை தமிழரசியல் கொண்டுள்ளது.
அந்த வகையில், அரசு, வெளிநாடு, சர்வ தேசம், சர்வதேச அரசுகள் அல்லது வெளிநாட்டு அரசுகள் என்பன பற்றிய ஓர் அறிவார்ந்த கணிப்பீட்டைச் செய்யும் முயற்சியாக இக்கட்டுரை அமைகிறது.
ஐநா சபைக்கான அங்கத்துவ அடிப் படையில் அங்கீகரிக்கப்பட்ட 196 முழு அரசுகள் இந்த பூமியில் உள்ளன.
தனக்கென சொந்த அரசமைத்து, அரசுடன் கூடிய தேசிய விடுதலைக்காக போராடும் அரசு அற்ற ஈழத்தமிழ் தேசிய இனம், மேற்படி அரசுகள் நிறைந்த இந்த உலகில், அவ்வாறு காணப்படும் அரசுகளை கையாளும் வித்தையை சரிவர கையி லெடுக்க வேண்டும்.அதற்கும் முன் நிபந்தனையாக அரசுகள் பற்றிய அடிப்படை இயல்பை, அதற்குரிய செயல்பாட்டை, அதற்கான யதார்த்தத்தை சரிவர எடைபோட்டு, அதற்கேற்ப அவற்றை கையாள வேண்டும்.
அரசை, முடியரசு, மக்கள்அரசு, அந்நியஅரசு, இனஆதிக்கஅரசு, தன்னினஅரசு, 21ஆம் நூற்றா ண்டுக்குரிய பூகோள வளர்ச்சிக்குட்பட்ட அரசு என, அவை அவர்களுக்கு உரிய பரிமாண வேறுபாடுகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
அதேவேளை, “அரசு” என்ற நிறுவனத்திற்கு இருக்கக்கூடிய பொதுஇயல்பை அடிப்படையாகக் கொண்டு, அரசநடத்தைகளையும் அவை மேற்கொள்ளும் அரசுகளுக்கிடையேயான உறவுகளை யும் சீர்தூக்கி அணுகவும், கையாளவும் வேண்டும்.
இவற்றை யதார்த்தபூர்வமான, நடைமுறை சாத்தியத்திற்குரிய, விஞ்ஞானபூர்வமான அணுகு முறைக்குப் பின்பற்றியே அணுக வேண்டும்.விருப்பங்களினாலோ, இலட்சிய வேட்கை களினாலோ, தூய எண்ணங்களினாலோ அணுக முற்பட்டால், அழிவுகளை தான் தலையில் சுமக்க வேண்டி வரும்.
ஆதலால், முதலிலே இங்கு “அரசு” பற்றிய அதன் நிறுவனத் தன்மையை விருப்பு–வெறுப்பு களுக்கு இடமின்றி, நடைமுறை சார்ந்த வகையில், அதற்கே உரிய விஞ்ஞானபூர்வ அளவீட்டுடன் எடைபோடுவோம்.
ஒரு தேசிய இனப் பிரச்சினை என்பது எப்பொழுதும் ஒரு சர்வதேசப் பிரச்சினையாகும்.எந்தவொரு தேசிய இனப் பிரச்சினையும் சர்வதேசக் கண் கொண்டே தான் பார்க்கப்பட வேண்டும்.
அதனை சர்வதேச பரிமாணங்களுக் கூடாகத்தான் அணுக வேண்டும். ஆதலால், தேசிய யுகத்தில் ஒரு தேசிய இனப் பிரச்சினை என்பது ஒருபோதும் வெறும் உள்நாட்டு பிரச்சினையல்ல; அது ஒரு சர்வதேச பரிமாணம் கொண்ட பிரச்சனையாகும்.
ஜெரிமி பென்தாம் (Jeremy Bentham) என்பவரால் எழுதப்பட்டு 1789 ஆம் ஆண்டு வெளியான “An Introduction to the Principles of Morals and Legislation” என்ற நூலில்தான் “சர்வதேசம்” — “International” என்ற பதம் முதன்முறையாகப் பயன் படுத்தப்பட்டது.அதாவது, புவிப்பரப்பில் முதன்முறையாக தேசியப் புரட்சிகள் தோன்றியதையடுத்துதான் இப்பதம் பயன்பாட்டுக்கு வந்தது.
1776 ஆம் ஆண்டு அமெரிக்க விடுதலையும், 1789 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சியும் நிகழ்த்திய பின்னணியில், தேசிய அரசுகள் உருவாகவே, தேசங்களுக்கிடையேயான உறவுகள் என்ற அர்த்தத்தில் “சர்வதேசம்” என்ற பதம் உருவாக வேண்டிய வரலாற்றுத் தேவை ஏற்பட்டது.அதாவது நாடுகளுக்கிடையேயான அல்லது அரசுகளுக்கிடையேயான உறவுகள் என்பன புவிப்பரபில் அரசுகள் தோன்றியதை உடனடுத்த காலத்திலேயே ( சுமாராக கிமு 2500 ஆண்டுகளை ஒட்டி) தோன்றியுள்ளன. ஆனால் சர்வதேச உறவுகள் என்பது கிபி 18 ஆம் நூற்றாண் டின் பிற்பகுதியில் தேசிய அரசுகள் தோன்றியதைத் தொடர்ந்தே தோன்றின.
ஆனால் நடைமுறையில் தேசங்களுக் கிடையேயான உறவுகள் என்று சொல்வதை விடவும், அரசுகளுக்கிடையேயான உறவுகளா கவே அவை மேலோங்கியுள்ளன. தேசியம், சர்வதேசம் என்பன அரச கட்டமைப்பின் மீது கட்டி எழுப்பப்பட்டுள்ளதால் அரசவாதமே பலம் பொருந்தியதாயுள்ளது.
அரசு” என்பது அதிகார மையத்தை குறிக் கும். இத்தகைய அதிகார மையங்கள் நீர்வாழ், நிலம் வாழ்ப்  பிராணிகள், மனிதப் பிராணி, பறவைகள் வரை ஏதோ ஒரு வகையில் ஆங்காங்கே உள்ளன. உதாரணமாக யானைக் கூட்டத்திற்கு முன் மாதிரி யானை அல்லது தலைவி யானை (The matriarch), என்ற பெண் தலைமைத்துவமுண்டு. சிங்கக் கூட்டத்திற்கு மேலாண்மை ஆண் சிங்கம் (The dominant male) என்ற ஆண் தலைமைத்துவமுண்டு. சிம் பாஞ்சி ( chimpanzee) கூட்டத்திற்கு The Alpha male என்ற ஆண் தலை மைத்துவமுண்டு. அப்படியே குரங் குக் கூட்டத்திற்கும் The Alpha male என்ற ஆண் தலைமைத்துவம் உண்டு. கடல்வாழ் உயிரினங்களில் ஆர்காஸ் திமிங்கிலத்திற்கு (Orcas -Killer Whales) matriarch என்று அழைக்கப்படும் மூத்த பெண் திமிங்கலத்தின் பெண் தலைமைத்துவ முண்டு.
அவ்வாறே பறவைகளில் வானில் பறக்கும் பறவைக் கூட்டங்களுக்கு நிரந்தரமற்ற ஆனால் அவ்வப்போது பறக்கும்போது வழிகாட்டுகின்ற, உணவை அடையாளம் காண்கின்ற கூட்டுத் தலைமைத்துவம் இருக்கும். இத்தலைமைத்துவம் அவ்வப்போதைய திறமையின், வல்லமையின், ஆளுமையின் அடிப்படையில் அமையும். இப் படியே வான்கோழி, கோழி என்பனவற்றின் மத்தியிலும் தலைமைத்துவம் உண்டு.
இந்த வகையில் அரசு என்பது பொதுவான உயிர் வாழ்தலில் மிகக் குறிப்பாக மனித வாழ்வில் வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் வளங்க ளைத் திரட்டுவதில் முகாமைத்துவங்களை மேற் கொள்வதில் இயற்கை மற்றும் அனர்த்தங்களில் மனித ஆதிக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்கு அரசு என்ற நிறுவனம் வரலாற்றில் எப்போதும் இன்றியமையாததாய் இருக்கிறது . அதற்காக அரசு என்பது ஒரு தூய்மையான, புனிதமான, மகிமைக்குரிய நிறுவனமல்ல. அரசு என்ற நிறு வனத்தின் இன்றியமையாமையை ஒருபுறமும் அது புனிதமானதல்ல என்பதை மறுபுறமுமென ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் புரிந்து கொள்வதிலிருந்து அரசை அணுக வேண்டும்.
அரசானது அதிகாரத்தை உயிர் மூச்சாகக் கொண்டது. அது தன் அதிகாரத்தால் ஒன்றை அணைத்தும் பெறவல்லது அல்லது அடித்தும் பெறவல்லது கூடவே ஒன்றை அழித்தும் பெற வல்லது. பெறுதல் மட்டுமே இலட்சியம் ஒன்றைப் பெறுதலே குறிக்கோள். அதன் நலன் அல்லது தேவையே அதன் இலக்கு. அதில் மகிமை, தூய்மை என்ற எதுவும் இருக்காது. தன் தேவையை அடைவதற்கான வழிவகைகள் எதுவோ, அதுவே அதற்கு நியாயம். அது கூறும் நியாயமும், நீதியும் அதற்குரிய நலம் சார்ந்த பக்கத்திலிருந்தே இருந்தே எழும்.
சிங்கம், புலி என்பனவற்றிற்கு மாமிசம் தேவை. அந்த இலக்கை அடைவதற்கான வழிவகை கள் நடைமுறையில் அதற்குப் புனிதமானவை.
இவ்வகையில் அரசானது தனது தேவைக் காக எத்தகைய அநியாயங்களையும், புனிதப் பிரசங்கங்களினாலும், புனித வார்த்தைகளினாலும் பூசை செய்து அலங்கரிக்கும். அது தன் இலக்கை அடைவதற்கு எதிரி களை வெற்றி கொள்வதையே மூல மந்திரமாய்க் கொண்டிருக்கும். “ “வெற்றி.”… “வெற்றி” ….” வெற்றி” இதுவே அதன் மூல உச்சாடனமும், ஒரே இலக்கும். அதிகாரத்தை உயர்ந்த நிலையில் வைத்துக் கொண்டு எதிரியை அணைத்து வெற்றி பெற வேண்டுமோ அவ்வாறு வெற்றி பெறுவது அதன் முதல் முயற்சி.
தொடரும்…

மனித புதைகுழி விவகாரம்: நீதிமன்றத்தின் அனுமதியுடனே காவல்துறை நடவடிக்கை எடுக்கும்!

மனித புதைகுழிகள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்தால்  காவல்துறை அது குறித்து குறிப்பிட்ட நீதிமன்றத்தை தொடர்புகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பமைச்சர் ஆனந்த விஜயபால  தெரிவித்துள்ளார்.

மனிதபுதைகுழி அகழ்வு குறித்த நடவடினக்கைகளிற்கு  பாதுகாப்பளிப்பதே காவல்துறையினரின் கடமை  தாங்களாகவே அகழ்வில் ஈடுபடுவதல்ல என தெரிவித்துள்ள அமைச்சர் காவல்துறை மனித புதைகுழிகளை அகழும் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியதில்லை அது நீதியமைச்சின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

நாங்கள் தேவையான பாதுகாப்பை மாத்திரம் வழங்குகின்றோம்,எனினும் மனிதபுதைகுழி குறித்து முறைப்பாடு காணப்பட்டால் காவல்துறை அது குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவித்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அகழ்வு உட்பட ஏனைய நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மனித புதைகுழிகுறித்து கருத்து தெரிவிக்கும் பலர் அதிகாரத்திலிருந்தவர்கள் அவர்களிற்கு நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரமிருந்தது என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சிலர் நீதியமைச்சர் பதவி போன்ற முக்கியமான பதவிகளை வகித்தனர் அவர்கள் இந்த விடயம் குறித்து உண்மையான அக்கறை கொண்டிருந்திருந்தால் அப்போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

“கறுப்பு ஜூலை நினைவேந்தல்” – குரலற்றவர்கள் குரல் அமைப்பு போராட்டத்திற்கு அழைப்பு

கறுப்பு ஜூலை ‘பொது  நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்” குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினால் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில்,  குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பபாளர் மு.கோமகன் யாழ் . ஊடக அமையத்தில் புதன்கிழமை (16)  நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்,

இதுவரை காலமும் இலங்கையின் கொடூர சிறைக்கூடங்களுக்குள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட  தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதி நியாயத்தை கோருகின்ற ‘பொது நினைவேந்தலும்’ 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலையின்றி சிறைகளுக்குள் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நூதன கவனயீர்ப்புப் போராட்டமும்’ மக்களது ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

இவ்வாறான அறப் பணிகளை தொடர்ந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பட்சத்திலேயே,  சமூகத்தின் பெயரில் சிறைவாடும் எமது உறவுகளான ‘தமிழ் அரசியல் கைதிகளுக்கு’  நீதி நியாயமும் விடுதலையும் கிடைக்கப்பெறும் எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மனிதநேயம் கொண்ட நல்லுள்ளங்கள் ஒருங்கிணைந்து முன்னெடுப்புகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையிலான உதவிகளை, ” விடுதலைக்கான திறவுகோல்களை கனதியாக்குவோம் ” என்கின்ற ‘உண்டியல் திட்டத்தின் ஊடாக’  மனமுவந்து நல்க வேண்டுமென அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம்.

இந்தப் பொதுவெளி கவனயீஈர்ப்புப் போராட்டத்தில்,  இன மத மொழி கடந்து,  வயது பால் வேறுபாடின்றி,  கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைவோம். சமூகநீதி சமூகநியாயத்தும் விடுதலைப் பயணம் நோக்கிய செயற்பாடுகளை பலப்படுத்தி முன்நகர்வோம்.

நல்லெண்ணமும் கருணை உள்ளமும் கொண்ட அனைவரும் சிரமம் பாராது வந்து கலந்து கொள்வதன் மூலமே, இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் ஒரு திரட்சிமிகு அழுத்தத்தை கொடுத்து  அன்புக்குரிய எமது சிறையுறவுகளை உயிர்ப்புடன் விடுவிக்க முடியும்.

அனைவரும்  “ஒன்றிணைந்து குரல் கொடுத்து உறவுகளை சிறை மீட்போம்  வாருங்கள்”  என ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினராகிய நாம் எமது மக்களை நோக்கி உரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.