Home Blog Page 52

வடக்கு கிழக்கில் இடம்பெறவிருந்த ஹர்த்தால் திகதி மாற்றம்!

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்ட ஹர்த்தால் என்ற நிர்வாக முடக்கல் போராட்டத்திற்கான திகதி மாற்றப்பட்டுள்ளது.

இராணுவ பிரசன்னத்தை ஆட்சேபித்தும், முத்தையன்கட்டுக் குளத்தில் தமிழ் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், இலங்கை தமிழரசு கட்சியினால் நிர்வாக முடக்கல் போராட்டத்திறகு அழைப்பு விடுக்கப்பட்டது.

எதிர்வரும் 15ஆம் திகதி மன்னார் மடு தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இடம்பெறவுள்ளதுடன் இதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர் மன்னாருக்கு செல்லவுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தின் உற்சவமும் இடம்பெறுகிறது.

இந்தநிலையில் மன்னாரில் நேற்று முன் தினம்  (12) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து எதிர்வரும் 18ஆம் திகதி குறித்த நிர்வாக முடக்கல் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

பழைய நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் புதிய பெயர் பலகை வைப்பதற்கு தடை

முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் உட்பட தொல்லியல் பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் புதிய பெயர் பலகை எதனையும் நிறுவக் கூடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொக்கிளாய் பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, முல்லைத்தீவு நீதிமன்றம் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

முல்லைத்தீவு பழைய நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம்  கடந்த 11ம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் குறித்த உற்சவத்தின் இறுதியில் புதிய பெயர் பலகை ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் மன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த செயற்பாடு அந்த பகுதியில் வேறு மத வழிபாடுகளை மேற்கொள்கின்றவர்களுடன் முறுகல் நிலையினை உருவாக்கும் என்றும் அதனால் அமைதியின்மை ஏற்படும் என்றும் பொலிஸார் மன்றுரைத்துள்ளனர்.

எனவே, அங்கு புதிய பெயர் பலகை நிறுவுவதை தடுக்கும் வகையில் உத்தரவு ஒன்றை பிறப்பிப்பிக்குமாறு கொக்கிளாய் பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, நேற்றிலிருந்து 14 நாட்களுக்கு அமுலாகும் வகையில் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில்  புதன்கிழமை (13)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிந்து 16 வருடகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக என கூறி தனியார் காணிகளை கையகப்படுத்தி வைத்துள்ள இராணுவத்தினர் அதில் விவசாயம் செய்கின்றனர். காணி உரிமையாளர்கள் விவசாயம் செய்ய முடியாது வறுமையில் வாடுகின்றனர்.

தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. அது மாத்திரமின்றி மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் இராணுவத்தினர்.

எவ்வாறு விவசாயம், பண்ணனை, வியாபாரங்கள் நடாத்தி வருமானத்தை பெற முடியும்? அவ்வாறு பெறப்படும் பணம் எங்கே செல்கின்றது ? அந்த பணம் திறைசேரிக்கு அனுப்பப்படுகிறதா ? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

எனவே யுத்தம் முடிந்து 16 வருட காலமாக பாதுகாப்பு காரணம் என கூறி தனியார் காணிகளை அடத்தாக பிடித்து விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டி வருவதானல் காணி உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும்.

அதேவேளை, அவர்களின் காணிகளை உடனடியாக விடுவித்து, அவர்களை விவசாயம் செய்து அம்பது வாழ்வாதரத்தை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளை, நடந்து செல்லவோ, துவிச்சக்கர வண்டியில் செல்லவோ முடியாத நிலை காணப்படுவதுடன், இரவு 07 மணி முதல் காலை 06 மணி வரையில் போக்குவரத்துக்கு தடை போன்ற கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ள பலாலி வீதியால் மக்கள் சுதந்திரமாக போக்குவரத்து செய்வதற்கு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

இராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே, காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும், இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது

இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், “காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு. நிரந்தர போர் நிறுத்தத்துடன் இந்த போர் முடிவடைய வேண்டும். காசா மாநகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம், முன் எப்போதும் இல்லாத பேரழிவுக்கும் நிரந்தர போருக்கும் வழி வகுக்கும். இதனால், பெரிதும் பாதிக்கப்படப்போவது, இஸ்ரேலிய பணயக்கைதிகளும் காசா மக்களும்தான்.

காசாவை பாதுகாப்பதற்கான திட்டத்தை ஐநா முன்னெடுக்க வேண்டும். இதற்கான அமைப்பை, காசாவில் நிறுவ வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். இது தொடர்பாக மற்ற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது குழுக்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஐ.நா.வால் முன்மொழியப்படும் இந்த அமைப்பு, காசாவை பாதுகாப்பது, அப்பாவி மக்களை பாதுகாப்பது, பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக பணியாற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் கடந்த மாதம் அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாக, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தனக்கு உள்ள உறுதியை இம்மானுவேல் மேக்ரான் வெளிப்படுத்தி உள்ளார்.

காசாவை கைப்பற்றுவதற்கான இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, “இஸ்ரேல் தனது படைகளை நியாயமான முறையில் பயன்படுத்துகிறது. ஹாமாசின் தோல்வியை முழுமையாக்குவதைத் தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியில்லை. காசாவின் சுமார் 75% பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில், இஸ்ரேல் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மீதம் 2 கோட்டைகள் உள்ளன. ஒன்று காசா மாநகரம், மற்றொன்று அல் மவாசியில் உள்ள மத்திய முகாம்கள் பகுதி” என்று தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டமும் ! மாகாணசபை தேர்தலும்! -பா. அரியநேத்திரன்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மாகாணசபை தேர்தலை விரைவில் நடத்துவோம் என கூறியிருந்தார். ஆனால் பாராளுமன்ற தேர்தலில் 159 பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசானது, மாகாணசபை தேர்தலை இழுத்தடித்து காலம் கடத்தும் போக்கையே காட்டி வருகிறது.
மாகாணசபைகளுக்கு முழுமையாக அதிகாரங்களை பகிர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தியுள்ளார். இதேபோல், மாகாணசபை தேர்தல் தொடர்பாக சர்வகட்சி மாநாட்டை நடத்துமாறும், இலங்கை பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேம் நாத் தொலவத்த கூறியுள்ளார்.
இவ்வாறு, இரண்டு பிரதான சிங்களக் கட்சிகள் தற்போது இதனை தெரிவிக்கும் நிலையில், வடகிழக்கை மையப்படுத்தும் தமிழ் கட்சிகளும் மாகாணசபை தேர்தலை நடத்துமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசின் செல்வாக்கு, பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் சரிவு நிலைக்குச் சென்றுள்ளது. இது கடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தெரிந்தது.
மாகாணசபை முறைமை, வடகிழக்கு இனப்பிரச்சனைக்காகவே இலங்கை–இந்தியா ஒப்பந்தம் மூலம் 1987ல் கொண்டுவரப்பட்டு, இணைந்த வடகிழக்கு தேர்தல் 1988ல் நடை பெற்றது. ஓராண்டுக்குள் அது சிதைந்து போனது. இணைந்த வடகிழக்கை சட்டம் மூலம் 2006ல் ஜே.வி.பி. கட்சியால் பிரித்த பிறகு, கிழக்கில் 2008 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் மட்டும் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்பட்டன. வடமாகாணசபையில் 2013ல் மட்டும் ஒரேயொரு மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது.
மாகாணசபை அதிகாரங்கள் தற்போது ஆளுநரிடம் இருப்பதால், வடகிழக்கில் மக்கள் திருப்தியற்ற ஆட்சியே நிலவுகிறது.மாகாணசபை தேர்தல் இழுத்தடிப்புக்கு காரணம் 2015ல் நல்லாட்சி அரசாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் ஆகியோரே. 2015 முதல் 2019 வரை எல்லை நிர்ணய ஆணைக்குழு ஒன்றை நிறுவி, தேர்தலை பிற்போட்டதால், இப்போது சட்ட சிக்கலை காரணம் காட்டி தேர்தலை தாமதப்படுத்த தேசிய மக்கள் சக்தி அரசுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நல்லாட்சியில் எதிர்க்கட்சியாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், மாகாணசபை சட்டத்திருத்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பிக்கும் போது எதிர்க்கவில்லை. இதற்குக் காரணம், மாகாணசபை தேர்தலை விடவும் புதிய அரசியலமைப்பில் முழு நம்பிக்கையை வைத்திருந் ததால், மாகாணசபை சட்டத்திருத்தத் தில் அக்கறை காட்டவில்லை.
தற்போது மாகாணசபை தேர்தலை பழைய முறையில் நடத்த, பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கினால் போதும். நல்லாட்சி காலத்தில் மாகாணசபை திருத்தச் சட்டத்திற்கு மௌனமாக இருந்துவிட்டு, 2020க்கு பிறகு, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், தனிநபர் பிரேர ணையாக பழைய முறையில் தேர்தல் நடத்தும் முன்மொழிவை சமர்ப்பித்தபோதும், அது இது வரை பரிசீலிக்கப்படவில்லை.
தற்போது தேர்தல் நடத்த இரண்டு வழிகள் உள்ளன:
பழைய முறையில் தேர்தல் நடத்துவது.
திருத்தங்களுடன் ஆணைக்குழு அறிக்கையை பிரதமர் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரம் பெறுவது.
இந்த இரண்டில் ஒன்றை செய்யாமல் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை.2024 மதிப்பீட்டின்படி, கிழக்கு மாகாணத் தின் சனத்தொகை 1,782,050 ஆகும். இது இலங்கையின் மொத்த சனத்தொகையில் 8.2% ஆகும். திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர் மூன்றாம் இடத்தில் உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமே தமிழர் முன்னணியில் இருந்தாலும், 2012 புள்ளிவிபரத்துடன் ஒப்பிடும் போது குறைவடைந்துள்ளது. ஆனால் 2024 இல் இன ரீதியான கணிப்பீடு வெளியாகவில்லை. இது வெளியாகும்போது நிலைமை புரியும். கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம் பெற்றால், எந்தக் கட்சியும் அல்லது இனமும் தனியாக ஆட்சி அமைக்க முடியாத நிலையே இருக்கும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில், 49 முஸ்லீம் பெரும் பான்மையுடையவை. மீதமுள்ள 297 தமிழ் பெரும்பான்மையுடையவை. விகிதாசாரம் 6:1. 965 கிராமங்களில் சுமார் 65 முஸ்லீம் கிராமங் களாகவும், 900 தமிழ் கிராமங்களாகவும் அடை யாளப்படுத்தப்பட்டுள்ளன. சில கிராமங்களில் சிங்களரும் வாழ்கின்றனர் (விகிதாசாரம் 15:1).இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட் டத்தின் நிலப்பயன்பாடு மாவட்டத்தின் மொத்த 2,854 சதுரகிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.
இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6 வீதம். நீர்நிலைகள் 5 வீதம், சதுப்பு நிலங்கள் 2 வீதம்,  வீட்டு வசதி, வீட்டுதோட்டங்களுக்கான நிலம் 5 வீதம்.ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப் பிரயாணத்துறை விருத்திக்கானதாகும்.
உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட் டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத் தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பில் 342 உள்நாட்டு நீர்நிலைகள் உள்ளன. இதில் பத்துக்கும் குறைவானவை முஸ்லீம் பகுதிகளில்; மீதமுள்ள 330க்கும் மேற்பட்டவை தமிழ் விவசாயப்பகுதிகளில். இவை விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பில் பயன்படுகின்றன.
பட்டிருப்பு தொகுதியும், மட்டக்களப்பு மேற்குக் கரை பெரும்பாலான நிலப்பரப்பும் (99%) வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்களே. எழுவான்கரையில் சில முஸ்லீம் மற்றும் தமிழ் பகுதிகள் இணைந்து நிர்வகிக்கப்பட்டன. 1961ல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பின் ஒரு பகுதியை இழந்தது.
மட்டக்களப்பு மாவட்டம் அபிவிருத் தியடைய, மாகாணசபை அதிகாரம் பகிரப்பட்டு, அந்த மாவட்ட மக்களே முடிவெடுக்கும் வகையில் ஆட்சி அமைக்கப்பட வேண்டும். அதற்காக கிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்று, பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே உண்மை.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிராக கொழும்பில் போராட்டம்!

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்தியுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம்  (13.08.2025) பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முனபாக நடாத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்வி அமைச்சுக்கு முன்பாக   பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது. அத்துடன், கலகம் அடக்கும் படையினரும் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீர்த்தாரை பிரயோக வண்டியும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

செம்மணி புதைகுழி :குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்- அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முறையாக இடம்பெற்று வருகின்றன. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது.” – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

அத்துடன், நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்த சாணக்கியன் மற்றும் ரணிலின் விசுவாசியான சுமந்திரன் ஆகியோரின் தாளத்துக்கேற்ப ஆடுவதற்கு எமது மக்கள் கொண்டை கட்டிய சீனர்கள் அல்லர் எனவும் அமைச்சர் கூறினார்.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ்ப்பாண மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 300 பேருக்கும்   புதன்கிழமை (13.08.2025) காணி பத்திரம் வழங்கும் “உரிமை” வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கிளிநொச்சி, பளை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்,

” காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டத்தை வடக்கில் இருந்தே ஆரம்பித்துள்ளோம். வடக்கு மக்களின் வாழ்வில் என்று வசந்தம் துளிர்விடுகின்றதோ அன்றுதான் எமது வாழ்விலும் வசந்தம் ஏற்படும். ஏனெனில் இது மக்களுக்கான அரசாங்கமாகும்.

சுமந்திரனுக்கு ரணிலுடன் இருக்கும்போது நல்லம். யாழ். நூலகத்தை எரித்த பாவிகளின் பைல்களை தூக்கிக்கொண்டு திரியும்போது தமிழ் மக்களின் பிரச்சினை அவருக்கு தெரியவரவில்லை. ஆனால் இன்று அவர் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றார்.

மட்டக்களப்பில் 10, 15 பேரை அழைத்து சாணக்கியன் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துகின்றார். அவர் நாமல் ராஜபக்சவின் நீலப்படையணியில் இருந்தவர்.” – எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, கடந்தகால கொலைகள் தொடர்பில் கண்டறியப்பட வேண்டும். அதனால்தான் செம்மணி புதைகுழி தொடர்பான அகழ்வு பணி மற்றும் விசாரணைக்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

‘மன்னாரில் காற்றாலை மின்திட்டம் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளது. அங்குள்ள கனிய மணல் அகழ்வு இடம்பெறுகின்றதாம். இதனால் மக்களின் காணிகள் சூறையாடப்படபோகின்றதாம் என ரிஷாட் பதியுதீன் கூறுகின்றார். காற்றாலை மின் உற்பத்திக்கு கடந்த காலங்களில் இந்த பாவிகள்தான் காணி வழங்கினார்கள். அதற்குரிய அனுமதியையும் இந்த பாவிகளே வழங்கினர். கனிய மணல் அகழ்வுக்கும் ராஜபக்ச, ரணில் ஆட்சியில் அமைச்சராக இருந்த பாவிகள்தான் அனுமதி வழங்கினர் எனவும் அமைச்சர் சந்திரசேகர் மேலும் குறிப்பிட்டார்.

பலஸ்தீன் படுகொலைகளுக்கு எதிராக கொழும்பில் பேரணி!

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்தும் சுதந்திர பலஸ்தீன் இராச்சியம் ஒன்றை பிரகடனப்படுத்துமாறு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில்  வெள்ளிக்கிழமை (15) ஏற்பாடு செய்துள்ள பேரணியில் இலங்கையா்களாக அனைவரும் ஒன்டுபட வேண்டுமென பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தினர்.

கொழும்பு மருதானை சி.எஸ்.ஆர். கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற ஊடகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

அங்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளரும் சமூக செயற்பாட்டாளருமான மெளலவி  அர்கம் நூர் ஹாமித்  கருத்து தெரிவிக்கையில்,

பலஸ்தீனுக்கு  ஆதரவளித்துவரும் அமைப்புகள் ஒன்றிணைந்து பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் என்ற பெயரில்   வரும் வெள்ளிக்கிழமை இஸ்ரேலின் இனப்படுகொலையை கண்டித்து அமைதிப்பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது.

பொரளை மயானத்துக்கு  அருகில் இருந்து மாலை 3மணிக்கு பேரணி ஆரம்பித்து  கெம்பல் வாகன தரிப்பிடம் வரை  செல்லவுள்ளது.இந்த பேரணியில் இன, மத பேதமின்றி இலங்கையார்களாகிய எமக்கும்  இதயம் இருக்கிறது என்பதனை உலக்கு காட்டுவதற்கு  நாங்கள் அனைவரும் இதில்  கலந்கொள்ள வேண்டும்.

உலகில் மனித படுகொலைகள் இடம்பெறுவதை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும். இஸ்ரேல் எந்த  சர்வதேச சட்டத்தையும்  மதிக்காமல் அங்கு இனப்படுகொலை செய்துவருகிறது. இதுவரை 18ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

உலகில் எவருக்கு அநீதி ஏற்பட்டாலும் அதற்காக நாங்கள் எங்களால் முடிந்த வகையில் அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும். அதுதான் மனிதாபிமானமாகும். பலஸ்தீனில் யுத்தம் இடம்பெறுவதில்லை. அங்கு பாரிய அநியாயமே இடம்பெறுகிறது.

தென்னாபிரிக்க கறுப்பின மக்களின் சுதந்திரத்துக்காக போராடி வெற்றிபெற்ற நெல்சன் மண்டேலா தெரிவித்த ஒரு விடயம் தான்,  எமக்குரிய சுதந்திரம் பலஸ்தீன் இராச்சியம்  சுதந்திரமடைந்த பிறகாகும் என்றார்கள்.

பலஸ்தீனில் கடந்த இரண்டு மாதங்களாக அவர்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தடை  செய்யப்பட்டுள்ளன. அதனால் பலஸ்தீனில் இடம்பெறுவது யுத்தத்துக்கும் அப்பாலானதொரு விடயமாகும். எனவே இந்த நாட்டில் வாழக்கூடிய அனைத்தின மக்களும் அரசியலுக்கு அப்பால், பலஸ்தீன மக்களுக்காக குரல்கொடுக்க ஒன்றிணைய வேண்டும் என்றார்.

இங்கு கருத்து தெரிவித்த, சமூக செயற்பாட்டாளர் லயனல் பீரிஸ் தெரிவிக்கையில்,

பலஸ்தீனில் இடம்பெற்றுவரும் படுகொலையை கண்டித்து உலக நாடுகள் இஸடரேலுக்கு எதிராக பல தடைகளை விதித்து வருகின்றன.மக்கள் வீதிக்கிறங்கி போராட்டங்களை மேற்கொண்டு  வருகின்றன.

இலங்கையா்களாகிய நாங்களும் பலஸ்தீனுக்கு ஆதரவளித்து வரும் நாடுகளுடன் ஒன்றிணைந்து எமது ஆதரவை தெரிவிக்க வேண்டும். அதற்காக 15ஆம் திகதி இன, மத பேதமின்றி அனைவரும் இந்த பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதேநேரம் இஸ்ரேலின் செயற்பாடுகள் எமது நாட்டில் அதிகரித்துள்ளன. தற்போது இலவச வீசா வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்ரேல் மக்கள் சுற்றுலா பயணிகளாக எமது நாட்டுக்கு வருவதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால்இந்த இலவச விசா மூலம் பலஸ்தீனில்  படுகொலைகளை செய்துவரும் இஸ்ரேல் இராணுவத்தினர், தங்களின் மனு அமைதிக்கான இடமாக இலங்கையை மாற்றிக்கொண்டுள்ளனர். அவர்கள் இலங்கையில் அறுகம்பை போன்று பிரதேசங்களில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேல் இராணுவத்தினர்  குறிப்பிட்ட காலம் இலங்கையில் தங்கி இருந்து, மீண்டும் இஸ்ரேலுக்கு சென்று  படுகொலைகளில் ஈடுபடுகின்றனர். அதனால் இஸ்ரேல் இராணுவத்துக்கான அடைக்கலமாக இலங்கையை மாற்றிக்கொள்வதற்கு இடமளிக்கக்கூ்டாது என்றார்.

சுதந்திர பலஸ்தீன் அமைப்பின் ஏற்பாட்டாளர் ஹுசைன் ஷாமில், சமூக இளைஞர் குடும்ப அமைப்பாளர் எம்.,இர்ஷாத் மற்றும் சிவில் அமைப்புகளைச்சேர்ந்த பலவரும் இங்கு கலந்துகொண்டு, 15ஆம் திகதி இடம்பெறும் அமைதிப்பேரணியில் இலங்கையாளர்களாக நாங்கள் அனைவரும் கலந்துகொண்டு, பலஸ்தீன் மக்களுக்கான எமது ஆதரவை தெரிவிக்க முன்வரவேண்டும் என்றனர்.

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, யாழ். நீதவான் நீதிமன்றில் !

செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் போது, அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு மேலதிகமாக புதைகுழிகள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறியும் நோக்குடன் கடந்த வாரம்  முன்னெடுக்கப்பட்ட ஸ்கான் நடவடிக்கையின் அறிக்கை, மண் பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட சில முக்கிய அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் கடந்த 07ஆம் திகதியுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 07ஆம் திகதி வரையில் கட்டம் கட்டமாக 41 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 133 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இதுவரையில் 147 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளின் மூன்றாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் , நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறும் வழக்கு விசாரணைகளின் போது உத்தியோகபூர்வமாக திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்தையன்கட்டு சம்பவத்தை நிராகரிக்கும் இராணுவ பேச்சாளர்!

முல்லைத்தீவு  இராணுவ முகாமுக்கு அழைக்கப்பட்ட  கபில்ராஜ் என்ற இளம் குடும்பஸ்தர் முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமைக்கும் இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்படுவதை இராணுவ பேச்சாளர் வருண கமகே நிராகரித்துள்ளார்.

ஒட்டிசுட்டான் முத்தையன்கட்டு வீதியில் உள்ள முகாமில் உள்ள படையினர், ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு நபர்கள் சிலர் முகாமிற்குள் நுழைய முற்பட்டதை தடுத்து நிறுத்தினார்கள்.

படையினர் அவர்களில் ஒருவரை கைது செய்தனர். ஏனையவர்கள் தப்பியோடிவிட்டனர். நாங்கள் அவர்களை துரத்திச்செல்லவில்லை என இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமையகத்தின் உத்தரவின் பேரில் குறிப்பிட்ட இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று படையினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்,எவரும் கபில்ராஜின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

2025 ஆகஸ்ட் ஏழாம் திகதி இரவு கைதுசெய்யப்பட்டவரை பின்னர் அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்துவிட்டோம் என தெரிவித்துள்ள இராணுவ பேச்சாளர்,

பல உள்நோக்கம் கொண்ட சக்திகள் இந்த விடயத்தை பயன்படுத்த முயல்கின்றன, ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அந்த முகாமை சேர்ந்தவர்களுடன் சிறந்த உறவை பேணுகின்றனர் என தெரிவித்துள்ளார்.