Home Blog Page 45

கஞ்சா பயிரிடும் திட்டத்திற்கு இலங்கை மருத்துவ சங்கம் எதிர்ப்பு!

வெளிநாட்டவர்களுக்கு  இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் முடிவை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது.

இத்தகைய அனுமதியினால் கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்கள் ஏற்படும் என அந்த சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

மருத்துவ பயன்பாட்டுக்கு கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்று மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு முதல் மருத்துவ கஞ்சாவுக்காக உலகளாவிய தேவை குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான தோட்டங்களை பராமரிப்பது சாத்தியமற்றது என்றும், உள்ளூர் போதைப்பொருள் பயன்பாடு அதிகரிக்கும் என்றும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. மனநோய், போதை பழக்கம், நுரையீரல் நோய் மற்றும் வீதி விபத்துகள் போன்றனவும் அதிகரிக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

எனவே, இந்த நடவடிக்கை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பயனளிக்கும் என்ற போதிலும் இலங்கையர்களுக்கு சொல்ல முடியாத துயரத்தை ஏற்படுத்தும் என்றும் இலங்கை மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

மியன்மாரில் தேர்தல் திகதி அறிவிப்பு

மியான்மாரில் எதிர்வரும் டிசம்பரில் பொதுத்தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படும் என்றும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்றும் இராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியது. இதனையடுத்து ஆங் சான் சூகி உள்ளிட்ட ஆளுங்கட்சி தலைவர்கள் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மியான்மரில் எதிர்வரும் டிசம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று இராணுவ ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேசிய அளவில் போட்டியிடவுள்ள 9 கட்சிகள் உள்ளிட்ட மொத்தம் 55 கட்சிகள் தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மின் ஆங் ஹ்லைங் தலைமையிலான மியான்மர் இராணுவ நிர்வாகம், டிசம்பர் மற்றும் ஜனவரியில் தேர்தலை நடத்துவதற்குத் தயாராகும் வகையில், நாட்டின் சில பகுதிகளில் அமுலில் இருந்த அவசரகால நிலையை கடந்த மாதம் முடிவுக்கு கொண்டுவந்தது.

2021 ஆம் ஆண்டு நடந்த இராணுவப் புரட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகி தலைமையிலான அரசை நீக்கிய பின்னர், மின் ஆங் ஹ்லைங் தலைமையிலான நிர்வாகம் மியான்மரில் அவசரகால நிலையை அமுல்படுத்தியது.

ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக லீக் (National League for Democracy) உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன. இது மின் ஆங் ஹ்லைங்கின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான ஒரு போலியான நடவடிக்கை என்றும் தெரிவித்துள்ளன.

மியன்மாரில் பெரும்பாலான பகுதிகள் ஜனநாயக ஆதரவு போராளிகள் மற்றும் சிறுபான்மை கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 330 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மியான்மரில் 2020 நவம்பரில் தேர்தல் நடைபெற்றது. அதில், தேசிய ஜனநாயக லீக் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால், அந்த தேர்தலில் பரவலான மோசடிகள் இடம்பெற்றதாக இராணுவம் தெரிவித்து, ஆங் சான் சூகி மற்றும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பல தலைவர்களை கைது செய்தது. எனினும், சுதந்திரமான தேர்தல் கண்காணிப்பு குழுக்களான ஆசிய சுதந்திர தேர்தல் வலையமைப்பு (Asian Network for Free Elections) மற்றும் கார்ட்டர் மையம் (Carter Center) ஆகியவை மோசடி குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தேர்தல் முடிவுகள் பொதுமக்களின் தெரிவுடன் ஒத்திருந்ததாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு மாதத்திற்குள் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள்!

ஒரு மாதத்திற்குள் வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட மற்றும் வீதிகளில் கைவிடப்பட்ட 300 சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

அவர்களில் 26 சிறுவர்கள் கொழும்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த சிறுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவர்களின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய பாதுகாவலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் குறித்த சிறுவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் குறித்த சிறுவர்களின் பாடசாலை கல்விச் செயல்பாடுகளை முறையாகப் பராமரிக்கவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த சிறுவர்களை வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுக்க சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

தமிழீழம் கேட்டு போராடிய இனம் தமிழீழம் கேட்டு போராடிய இனம் இன்று காற்றாலையை தடுக்கப் போராடும் நிலை – பா. அரியநேத்திரன்

“எமது நிலம் எமக்கு வேண்டும்” என தமிழீழம் கேட்டு, அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் தொடர்ந்து 76 வருடங்களாகப் போராடியும் போராடிக்கொண்டுள்ள தமிழ் இனம், தற்போது மன்னார் காற்றாலையைத் தடுக்கக் கோரியும் இதே சுலோகத்தை முன்நிறுத்தி “எமது நிலம் எமக்கு வேண்டும்” எனப் போராடும் நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது.
வடகிழக்கில் உள்ள தமிழர்களின் நிலைமை, எல்லா விடயத்திற்கும் போராடியே ஆளும் தரப்புக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியவர்களாக எமது வாழ்க்கை முறை மாறிவிட்டது. கடந்த பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, வடகிழக்கில் இருந்து தெரிவான ஆளும் தரப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும், இனம் சார்ந்தோ, நிலம் சார்ந்தோ, ஆக்கிரமிப்பு சார்ந்தோ குரல் கொடுக்க முடியாத பேசா மடந்தைகளாக உள்ளனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ள போதிலும், மன்னார் தீவுப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள மற்றும் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகின்றது.
இலங்கை மின்சார வாரியத்திற்குச் சொந்தமான 30 காற்றாலை மின் உற்பத்திக் கோபுரங்கள்நி றுவப்பட்டுள்ளதுடன், மேலும் சில காற்றாலைக் கோபுரங்கள் தற்போது நிறுவப்பட்டு வருகின்றன. அத்துடன், இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்த சூழ் நிலையில், அந்தத் திட்டத்திலிருந்து தாம் வெளி யேறுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.
மன்னாரில் அமைக்கப்படவுள்ள இலங்கையின் முதலாவது பெரிய அளவிலான காற்றாலைப் பண்ணை, மன்னார் தீவின் தெற்குக் கரையில் அமைந்துள்ள மன்னார் காற்றாலை மின்வலுப் பண்ணையாகும். முதலாவது படியாக, 100 மெகாவாட் காற்றாலை மின்சக்தி வளர்ச்சி செய்யப்படும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அங்குள்ள மக்களின் விருப்பம், புவியியல் இயற்கைச் சூழல், காலநிலை என்பவற்றைக் கணக்கில் எடுத்து, மன்னார் மாவட்ட மக்களின் ஆதரவு இன்றி இந்தத் திட்டம் ஏற்படுவதை முழுமையாக மக்கள் எதிர்க்கின்றனர்.
இது தொடர்பாக, மன்னார் மாவட்ட மக்களின் கருத்து: “மன்னார் தீவில் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள காற்றாலைகளால் நாம் பல்வேறு இன்னல்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றோம். வெள்ளத்தால் பெண்களின் வீட்டுத் தோட்டங்கள் நாசமடைந்து போனது. அபிவிருத்தித் திட்டங்கள் எமது சமூக, பொருளாதார, மனித உரிமைகளைப் பாதிக்கும் விதத்தில் இருக்கின்றன” எனக் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஐக்கிய நாடுகள் புலம்பெயர் உயிரினங்க ளைப் பாதுகாப்பது தொடர்பான பேரவையின் பிரதான நாடாக இலங்கை விளங்கு கிறது. இதற்கான காரணம், ஆண்டுதோறும் 30க்கு மேற்பட்ட நாடுகளில் இருந்து 250க்கும் அதிகமான பறவை இனங்கள் இலங்கைக்குப் புலம்பெயர்வதனாலாகும். வருடந்தோறும் இலங்கைக்கு 15 இலட்சம் பறவைகள் வருவதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் பிரதேசத் திற்கு மாத்திரம் 10 இலட்சம் பறவைகள் வருகை தருகின்றன.
இவ்வாறு வருகின்ற பறவைகளின் பயணப் பாதையும் இருப்பிடங்களும் பாதிப் படைவதாகவும், காற்றாலைகளின் இயக்கத் தால் பறவைகள் உயிரிழப்பதாகவும், சூழலியல் நீதிக் கான நிலையத்தின் நிறை வேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்தியா வின் அதானி நிறுவனத்தின் திட்டத்தில் பறவைகளுக்கான தாழ்வாரப் பகுதிகள் ஒதுக் கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவை பெயர ளவிலானதுமட்டுமே.
பொதுமக்கள் ஏன் எதிர்க்கின்றனர். என் பதை   ஆராயப்பட வேண்டும். “அபிவிருத்தியின் பெயரால் மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இத்திட்டங்களை நிறுத்த வேண்டும்” என்பது அவர்களின் கோரிக்கை. இலங்கையின் மீன்பிடித் தொழில், பறவைகளின் பாதுகாப்பு சரணாலயம், இயற்கைக் காற்றின் வலு முதலானவற்றிற்குப் பெயர் பெற்ற இடமாக மன்னார் விளங்குகிறது. மன்னார் பல பொருளாதார வளங்களைக் கொண்ட ஒரு பிரதேசம்.
இந்த நிலையில், ஏகபோக இராட்சத பன்னாட்டுக் கம்பெனிகளின் இலாப வேட்டை யாலும், இலங்கை அரசாங்கங்களின் கையாலாகாத் தன்மையாலும், அழிவை எதிர்நோக்கி உள்ளது மன்னார் தீவு.
ஏற்கனவே உள்ள காற்றாலைகளால்:
மீன் கரைக்கு வருவது குறைந்துவிட்டது. மீன் இனப்பெருக்கம் குன்றிவிட்டது. காற்றாலைகளின் அமைப்பால் தரையில் ஏற் பட்ட மாறுதல்கள், வடிகால் அமைப்பை மாற்றி வெள்ளப் பெருக்கையும், நிலத்தடி நீர் உவர்ப்புத்தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
காற்றாலைகளின் இரைச்சலால், மன்னாருக்கு வரும் வலசைப் பறவைகளின் வருகையைத் தடுக்கவும், பாதையை மாற்றவும் அவை காற்றாடிகளால் இறக்கும் நிலையையும் ஏற் படுத்தியுள்ளது. மக்களின் வாழ்விலும், காற்றாலைகளின் ஒலி மாசு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், மன்னார் மண்ணின் கீழ் இருக்கும் இல்மனைட், தோரியம் போன்ற கனிம வளங்கள், இன்றைய நவீன விஞ்ஞான உபகரணங்கள் மற்றும் இராணுவத் தேவைகளுக்காக உலக நாடுகளுக்குத் தேவைப்படுகின்றன. இதில் முதலீடு செய்வது பெரும் லாபம் தரும் என்பதால், பன்னாட்டு நிறுவனங்கள் முண்டியடிக்கின்றன. எனவே, மன்னாரில் நடைபெற இருக்கும் இந்த அகழ்வாராய்ச்சி, மன்னார் தீவையே மனித வாழ்வுக்கு உகந்ததாக இல்லாமல் செய்துவிடும் அளவிற்கு ஆபத்தானது. இந்தக் காற்றாலை மற்றும் கனிம அகழ்வு, நாட்டின் தேவைக்கானதன்றி, பன்னாட்டுக் கம்பெனிகளின் இலாபக் குவிப்புக்கா னதே என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். இத்தனை காரணங்களும் உண்மையா னவை. இதை உணராமல், எங்கள் நிலத்தின் வளங்களை அழிக்கவும், எதிர்காலத்தில் மன்னார் தீவின் இயற்கை எழிலைச் சூறையாடவும் இந்த நாசகாரக் காற்றாலைத் திட்டம் வழிவகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.
மன்னாரில் ஆரம்பித்த போராட்டம், வவுனியாவில் மனிதச் சங்கிலிப் போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் வாதிகளுக்கு அப்பால், மதத் தலைவர்களும் இதைத் தடுக்கப் போராடும் நிலையைக் காண முடிகிறது.
“தமிழீழம் கேட்டு அகிம்சையாகவும், ஆயுதமாகவும் போராடி அதைப் பெறவில்லை. இப்போது, தாயக மண்ணில் நடக்கும் அபகரிப்பு, வளங்களை அழிக்கும் நடவடிக்கை, திட்டமிட்ட பௌத்தமயமாக்கல், காணாமல் ஆக்கப்பட்டவர் களுக்கான நீதி வேண்டிய போராட்டங்கள் என, தொடர்கதையாகவே இப்போது தினமும் மாறிவிட்டது.”
தனிமனித இறப்பு: கடந்த வாரம் முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால குளத்தில் இராணுவம் கொலை செய்ததாகக் கூறி, எதிர்வரும் 18ம் தேதி இலங்கைத் தமிழரசுக் கட்சியால் வடகிழக்கு சார்ந்து முன்னெடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு, எதற்கும் ஏதோ ஒரு கவன ஈர்ப்புப் போராட்டமே வாழ்க்கையாக மாறியுள் ளது. வடகிழக்கில் தமிழர்கள் போராடியே சகல விடயங்களுக்கும் தீர்வைப் பெற வேண்டும் என்ற நிலைமையே உள்ளதே தவிர, ஆட்சியாளர்களுடன் பேசி எதையும் தீர்க்க முடியாத நிலை, கடந்த 16 வருடங்களாகத் தொடர்வதையே, தற்போதைய மன்னார் காற்றாலையைத் தடுக்கும் போராட்டமும் வெளிப்படுத்தியுள்ளது.
அதற்கு நல்ல உதாரணம்: போராடியதால் தான் தற்போது மன்னார் காற்றாலை அமைக்கும் பணி ஒருமாதம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.

இராமேஸ்வர கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது…

எல்லைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி 8வது நாளாக இன்றும் (19) இராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இன்று மாலை 4 மணியளவில் இராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு இரயிலை தங்கச்சிமடத்தில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, தங்கச்சிமடத்தில் 859 பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மத்திய அரசு அசமந்த போக்கை காட்டுவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் குற்றம் சுமத்தினர்.அத்துடன், இன்று வரை முன்னெடுத்துள்ள போராட்டங்களுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் அனைத்து கடற்றொழிலாளர்களையும், ஒன்றிணைத்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் பாரியளவான போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி, மன்னார் மறைமாவட்ட ஆயருடன் கலந்துரையாடல்

மன்னார் காற்றாலை திட்டம் மற்றும் கனியமணல் அகழ்வு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக மறைமாவட்ட ஆயர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. இதன்போது, மறைமாவட்ட ஆயரினால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவை தொடர்பில் உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து  நேற்று (19) 17ஆவது நாளாகவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அதன்போது எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு குறித்த திட்டத்தை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. எனினும், தமக்கான உரிய தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்து, மன்னார் மக்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு கிழக்கு நிர்வாக முடக்கல் போராட்டத்தால் பாதிப்பில்லை: அரசாங்கம் கருத்து

இலங்கை தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்டு, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் நடவடிக்கை, அரசுக்கு எவ்விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில்   முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனைத் தெரிவித்தார். இதன்படி, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் போராட்டம் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கை அரசுக்கும் அரசாங்கத்துக்கும் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தமக்கு தகவல்கள் கிடைத்தாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனால், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட நிர்வாக முடக்கல் குறித்து நேற்றைய அமைச்சரவையில் பேச வேண்டிய தேவை இருக்கவில்லை என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மனித உரிமை விவகாரம்: ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறையின் அதிகாரிகளை நாட்டுக்குள் அனுமதியுங்கள் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும் ஜனாதிபதி  அநுரகுமார திஸாநாயக்காவின் அரசாங்கம், யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிக்காட்டும் வகையில் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை எனக்கூறியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களைச் சந்திப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என  வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மிகமோசமான சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கும், நம்பகரமான உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறை எதுவும் அமுலில் இல்லாத நிலையில் நீதியை அடைந்துகொள்வதற்குப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது இலங்கை விடயத்தில் பேரவைக்கும், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கும் வழங்கப்பட்டிருக்கும் ஆணை மேலும் இரு வருடங்களுக்குப் புதுப்பிக்கப்படவேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சிபீடமேறி சுமார் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்கிறது. இலங்கையின் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருக்கின்ற போதிலும், கரிசனைக்குரிய முக்கிய மனித உரிமைகள் விவகாரங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது. அதேபோன்று மிகப்பாரதூரமான அட்டூழியங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைப் பொறுத்தமட்டில் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு இன்னமும் தொடர்கிறது.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரை நாட்டுக்கு வருகைதருமாறு கடந்த ஜுன் மாதம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அழைப்புவிடுத்திருந்தது. இருப்பினும் உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதிலும், பொருளாதார சவால்களை எதிர்கொள்வதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாடு கு;திரம் ஜனாதிபதி உரையாடினாரே தவிர, பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளை வெளிப்படையாக ஆதரிப்பதற்குத் தவறியிருந்தார்.

அதேவேளை உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் நாட்டுக்கு வருகைதந்திருந்தபோது, இலங்கையில் தொடரும் ‘தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு’ எனும் பொறி குறித்து எச்சரித்ததுடன் நீதியை நிலைநாட்டப்படாமையானது வலுவான சமாதானத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியிருந்தார். இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதில் தடையேற்படுத்தியதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் துன்பத்தை மேலும் ஆழப்படுத்தின. அவ்வரசாங்கங்கள் தாம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குத் தவறியதன் காரணமாக உண்மை, நீதி மற்றும் இழப்பீடு வழங்கலை உறுதிப்படுத்தவேண்டிய நிலை மனித உரிமைகள் பேரவைக்கு ஏற்பட்டது. அதுமாத்திரமன்றி நீண்டகாலக் காத்திருப்பும், அக்காலப்பகுதியில் முகங்கொடுத்த கசப்பான அனுபவங்களும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகக் கட்டமைப்புக்களிலும், பொறிமுறைகளிலும் நம்பிக்கை இழப்பதற்கு வழிகோலியிருக்கின்றன. எனவே தற்போதைய அரசாங்கத்தின்கீழும் தொடரும் ஒடுக்குமுறை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துடன் தொடர்புகளைப் பேணிவருகின்றனர்.

ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டது முதல் ‘நல்லிணக்கம்’ தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க பலமுறை பேசியிருந்தார். ஆனல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும் அவரது அரசாங்கம் யுத்தகாலப்பகுதியில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வெளிக்காட்டும் வகையில் எந்தவொரு நகர்வையும் மேற்கொள்ளவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்ட அதிகாரிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும், விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் சாட்சியங்களைச் சந்திப்பதற்கும் அரசாங்கம் இடமளிக்கவேண்டும். அத்தோடு ஜனாதிபதித்தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டவாறு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து வேறுபட்டவகையில் பொதுக் குற்றவியல் தாக்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய செயன்முறை அறிமுகப்படுத்தப்படவேண்டும்.

மேலும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தைப் பொறுத்தமட்டில், நாடளாவிய ரீதியில் மனிதப்புதைகுழிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவிகளை அனுமதிக்கவேண்டும். அத்தோடு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடியவகையில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மறுசீரமைக்கவோ அல்லது பதிலீடு செய்யவோ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு CID அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இது அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணை ஆகும்.

இந்தப் பயணம் 2023 ஆண்டு, செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் பத்து பேர் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் சாண்ட்ரா பெரேரா ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுத் துறை முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இருந்து இலங்கையின் அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகள் தொடர்பில் விசேட அவதானம்

தமிழகத்தில் இருந்து இலங்கையின் அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகள் தொடர்பில் இராஜதந்திர முனைப்புக்களுக்கு, ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தயாராகி வருகிறது.

தமிழகத்தில் இருந்து அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை நிறுத்தி வைப்பதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் முன்னதாக அறிவித்திருந்தது.

தாம் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால், கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாகக் கூறுகின்றவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான வசதியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த உயர்ஸ்தானிகரகம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் இலங்கைக்குத் திரும்பிச் சென்ற நிலையில் குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு அகதிகள், அண்மைக்காலங்களில் தடுத்து வைக்கப்பட்டதாக வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.