Home Blog Page 38

விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது? – மு.திருநாவுக்கரசு

“உன்னை நீ கைவிட்டு விட்டால் உன்னைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது” என்று ஒரு பிரெஞ்சு பழமொழி உண்டு. உன்னை நோக்கிப் பிறரைத் திரும்பிப் பார்க்கச் செய்ய வேண்டுமேயாயினும், நீயே சத்தமிட வேண்டும். ஒரு பச்சைக் குழந்தை கூட தன்னருகே யாரும் துணையில்லை என்றால் அழுது, கத்தி யாரையும் தன்பால் ஈர்த்துவிடும்.
இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்கள், கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலாகப் போராடாதிருக்கும் நிலையில், உரியவனும் பாரான்; அடுத்தவனும் பாரான்; அண்டை நாடும் பாராது; வெளிநாடுகளும் பாராது. உனக்கு யாரும் கை கொடுக்க வேண்டுமாயின், நீயே கை தூக்க வேண்டும். ஆதலால், களத்தில் போராடுவதன் மூலம் மட்டுமே உள்ளும் புறமும் கவனத்தை ஈர்த்துப் போர்க் கொடியைச் சர்வதேசத் தளத்தில் நிறுத்த முடியும்.
“Only the fittest will survive” (“தக்கன மட்டுமே உயிர் வாழும்”) – அதாவது, இங்கு காணப்படும் சூழலுடன் தன்னையும் இணைத்துத் தனக்குப் பொருத்தமாகக் கையாளத் தெரிந்தவை மட்டுமே உயிர் வாழும் என்பதே இதன் முழுமுதற் பொருள்.
இந்த உயிரியல் டார்வினிசத்தைச் சமூக அல்லது அரசியல் டார்வினிசமாகக் கையாளும் போது, அதை அதிகம் தலைமைத்துவப் பண்புடன் கூடிய வகையில் கையாள வேண்டும். உயிரியல் டார்வினிசத்தில், அந்த உயிருக்குச் சுயநல உயிரியல் மரபணு (selfish gene) இயல்பாக இயற்கைத் தேர்வின் படி தத்துவத்தை வழங்குகிறது.
மனிதனும் உயிர் என்ற வகையில் சுயநல மரபணுவைக் கொண்டவனேயானாலும், ஒரு சமூகமாக இருந்தபோது, அங்கு மேலதிகமாகத் தலைமைத்துவ ஆளுமை தேவைப்படுகிறது. இந்த வகையில், உயிரியல் டார்வினிசத்திலிருந்து சமூகவியல் டார்வினிசம் குறிப்பிடத்தக்க அளவுக் குத் தெளிவான ஆளுமைப் பரிமாண வேறுபாட் டைக் கொண்டுள்ளது.
சமூகப் பரிமாணத்தைக் கட்டமைப்புச் செய்து முன்னெடுக்கும் விதத்தில் தவறுகள் இழைக்கப்பட்டால், அந்தச் சமூகம் தக்க தேர்வின்றித் தேய்ந்து போய் அல்லது அழிந்து போய்விடும். அதாவது, உயிரிகளில் காணப்படும் வரையறுக்கப்பட்ட உயிர்களின் தலைமைத்துவத் திற்கப்பால், மனிதச் சமூகத்தில் நுண்ணறிவும் முன்னறிவும் கொண்ட அளவாற் பெரிய ஓரினம் (சிங்கள இனம்), அளவாற் சிறிய இனங்களின் மீது அதிக தலைமைத்துவ ஆதிக்கத்தைச் செலுத்துவதன் மூலம், சிறிய இனங்களின் தெரிவு சுருங்கும், பாதிப்புக்குள்ளாகும், சீரழிவுக்கு உள்ளாகும்.
இந்த வகையில், ஈழத் தமிழர்கள் அதிகம் தலைமைத்துவப் பண்புடனும் முனைப்புடனும் செயல்பட்டால் மட்டுமே, காணப்படும் சமூகச் சூழல் யதார்த்தத்தில் தம்மைத் தக்கவைக்க முடியும்.
மனிதனும் ஏனைய பிராணிகளைப் போல ஓர் உயிர் என்பதால், உயிரியல் டார்வி னிசத்திலுள்ள பொதுத்தன்மைகள் மனிதனுக்கும் உண்டேயானாலும், உயிரினங்களில் அதிக நுண்ணறிவு கொண்டு மனிதன் சமூகமாகத் தன்னைக் கட்டமைப்பதில் வேறுபட்ட ஆளுமை அளவுகளைப் பிரயோகிக்க முடிகிறது.
அரசுள்ள அளவாற் பெரிய சிங்கள சமூகத்தோடு, அரசற்ற அளவாற் சிறிய தமிழ்ச் சமூகம், தலைமைத்துவ ஆளுமையில் தக்க முனைப்பைக் காட்டத் தவறினால், அந்தச் சமூகம் தன் வாழ்நிலையை இழந்துபோக நேரும்.
இந்நிலையில், ஈழத் தமிழர்கள் தம்மைத் தமிழர் என்ற உட்சமூக ரீதியாகவும், இலங்கை என்ற உள்நாட்டு ரீதியாகவும், அண்டை நாடு, வெளிநாடுகள், சர்வதேச சமூகம், உலகளாவிய அரசியல் நிலை போன்ற காணப்படும் அனைத்துப் புறநிலை மாற்றங்களுக்கும் பொருத்தமாக, தமக்கான தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும்.
அந்த வகையில், முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான கடந்த ஒன்றரை தசாப்தங்களுக்கு மேலான அரசியற் சூழலில், ஈழத் தமிழர் நிலையானது “கூழ்முட்டை” (Rotten egg) நிலை யையே கொண்டுள்ளது. மேற்படி நடப்புநிலை, உள்ளூர், உள்நாட்டு, வெளிநாட்டு, உலகளாவிய யதார்த்தத்தை உள்வாங்கி, இப்போது ஒரு புதிய வகையில் தமிழ்த் தலைமைத்துவத்தை முன்னெடுக்க வேண்டும் என்று இக்கட்டுரை வேண்டி நிற்கின்றது.
ஏறக்குறைய 1970களின் பிற்பகுதியளவில், ஒற்றை உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஆரம்பமான ஆயுதப் போராட்டம், தரைப்படை, கடற்படை, பீரங்கிப்படை, விமானப்படை, சர்வதேச சரக்குக் கப்பல் அணியென வளர்ந்த நிலையில், கோட்டை கொத்தளங்களெல்லாம் அழிந்தவாறு, குண்டூசிகூட இல்லாத நிலையை ஆயுதப் போராட் டம் அடைந்துள்ளது.
ஆனால், 1979 ஆண்டு 10 ஆயிரத்துக்குட்பட்ட படையினருடன் ஒரு பிரிகேடியரைத் தலைமைத் தளபதியாகக் கொண்டிருந்த இலங்கை இராணுவம், இன்று அதிநவீன ஆயுதங்களு டன் கூடிய வகையில் 3 லட்சத்து 46 ஆயிரம் படையினருடன் காணப்படுகிறது. நாடாளுமன்ற அரசியலில் 21 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று சிதைந்து, சுக்குநூறாகி, தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களையும், சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஒரு உறுப்பினரையும், இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஒரு உறுப்பினரையும் பாதிக்குமேல் சுருங்கிக் கிடக்கிறது. மேலும், சனநாயகப் பண்பற்றுச் சீரழிந்து சின்னாபின்னப்பட்டுக் கிடக்கிறது.
2001 ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீதான தாக்குதல், உலகெங்கும் ஆயுதப் போராட்ட அமைப்புக்களின் முது கெலும்பை உடைக்க வழிவகுத்த போதிலும், அதுவே உலகெங்கும் மக்கள் போராட்ட அலைகள் எழும்புவதற்கு ஏதுவாகவும் அமைந்தது. எனவே, “மக்கள் போராட்ட அலை” எனும் ஓராயுதம் உலக அரங்கில் முதன்மை பெறத் தொடங்கியது. பறிக்கப்பட்ட வெடிகுண்டு, துப்பாக்கி ஆயுதத்துக்குப் பதிலாக, மக்கள் திரளெனும் ஓராயுதம், மக்கள் சனநாயகக் கிளர்ச்சியாய் வடிவம் பெற்றது.
முள்ளிவாய்க்காலில் இராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைப் படுகொலை செய்ததோடு முடிந்துவிடவில்லை. அங்கு, அரச இராணுவம் தனது இராணுவச் சூளையில், “இனப்படுகொலை” என்னும் மிகக் கூரியதோர் ஆயுதத்தை உற்பத்தி செய்தது. எனவே, முள்ளிவாய்க்காலில் பறிபோன துப்பாக்கி, வெடிகுண்டு ஆயுதங்களுக்குப் பதிலாக, மக்கள் காட்டுமிராண்டித்தனமாகக் கொல்லப்பட்டதன் வாயிலாக, “இனப்படுகொலை” என்னும் ஆயுதம் தமிழ் மக்கள் கைக்குக் கிடைத்தது.
இந்த வகையில், “இனப்படுகொலை” என்ற ஆயுதத்தை முதலீடாகக் கொண்டு, தமிழ்மக்கள் தமது அரசியற் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று, 2016 ஆம் ஆண்டு இக்கட்டுரையாசிரியரால் எழுதப்பட்ட “டொனமூர் முதல் சிறிசேன வரையான உத்தேச அரசியல் யாப்பு” என்ற நூலில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அந்நூல் வெளியிட்டு விழா வில், தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள் உட்பட, பல்வேறு அரசியற் தலைவர்களும், பல்கலைக்கழக அறிஞர்க ளும், ஊடகவியலாளர்களும் உரையாற்றினர் என்ப தும் குறிப்பிடத்தக்கது.
இப்போது, ஈழத் தமிழர்களின் குறைந்த பட்ச உரிமைக்கான போராட்டங்களைக் கூட இந்த இடத்திலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டியுள் ளது. முதலாவதாக, இலங்கையில் நடைமுறை யிலுள்ள நாடாளுமன்ற மரபு அரசியற் பாதை, இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதை வளர்க்கவே உதவியுள்ளது என்பதை, 1833 ஆண்டு நடைமுறைக்கு வந்த “கோல்புரூக் யாப்பு” நடைமுறையிலிருந்து, இன்றைய (2025) ஆட்சியாளர்களின் யாப்பு நடைமுறை வரை, வெள்ளிடை மலையெனத் தெரிகிறது.
தமிழ்த் தலைவர்கள், குறிப்பாக “சோல்பரி அரசியல் யாப்பு” ஒட்டிய காலத்தில், 14 மணி நேரம் மூச்சுவிடாமற் பேசியும் பயனில்லை. தற்போது நாடாளுமன்றத்தில், திரைப்படப் பாணியில் 14 நிமிடங்கள் அங்கிங்குமாய்க் காலை, கையை உயர்த்தி, முதுகை வளைத்து, கண்ணை உருட்டி, சொண்டைப் பிதுக்கிப் பேசியும் எந்தப் பயனுமில்லை.
நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தமக்கான மக்கள் ஆதரவை உள்ளும் புறமும் நிரூபிப்பது சரி. ஆனால், நாடாளுமன்றத்தில் பேச்சுப் போட்டி நடத்தி எதனையும் சாதிக்க முடியாது. மாறாக, நாடாளுமன்றத்தை உள்ளும் புறமும் போர்க்களமாக மாற்றவல்ல திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்து, அதற்கூடாகப் போராட்டத்தை நாடாளுமன்றத்துக்குள்ளும், புறமும், உலக அரங்கிலும் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான வியூகங்கள் வகுக்கப் பல வழிகளுண்டு. இதற்கான வியூகங்களைப் பின்பொரு தனிக் கட்டுரையில் ஆராய்வோம்.
இப்போது, போராட்டத்துக்கான முதற் திட்டத்தை வரையறை செய்வோம்: 
ஆயுதப் போராட்டத்திலிருந்து மக்கள் போராட் டத்துக்கு:
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடு தலைப் புலிகள் அமைப்பு, உள்ளும் புறமும் தடை செய்யப்பட்டிருக்கிறது. இலங்கை, இந் தியா தவிர, மேலும் 31 நாடுகளில் அந்தத் தடைப் பட்டியல் நீள்கிறது. ஆயுதப் போராட்டம் என்ற பேச்சுக்கே உள்ளும் புறமும் இடமில்லை. ஆனால், “இனப்படுகொலைக்கெதிரான குரலை” மனிதநேயத்தின் அடிப்படையில் உலகெங்கும் முன்னெடுக்க முடியும்.
அதனைத் தமிழகத்திலும் முன்னெடுக்கலாம்.
முழு இந்தியாவிலும் முன்னெடுக்கலாம்.
அமெரிக்காவிலும் முன்னெடுக்கலாம்.
ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் முன்னெடுக் கலாம்.
உலகின் ஏனைய நாடுகளிலும் முன்னெடுக் கலாம்.
இது எதிரிக்கும், தமிழர் உரிமைகளை எதிர்க் கவல்ல வேறு சக்திகளுக்கும் எதிரான ஒரு பலம் வாய்ந்த ஆயுதம். செம்மணிப் புதைகுழியும் இதற்கு அரணமாகிறது. குறிப்பாக, 1958 ஆம் ஆண்டிலிருந்து கறுப்பு யூலை வரையும், அதன் பின்பும் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான அனைத்து மனிதப் படுகொலைகளும் தொடர்பான நீதி நிர்வாக நடவடிக்கைகளும் இவற்றுக்கு அணிசேர்க் கின்றன.
2. போராட்ட முன்னுரிமைகள்:
முதலாவதாக,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
இசைப்பிரியா மீதான பாலியல் வன்முறை, படுகொலை
சிறுவன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை
என்பனவற்றை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, அதற்கான போராட்டத்தை உள்நாட்டு அரங்கிலும், தமிழகத்திலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுக்க வேண்டும்.
3. பொது செயற்குழு அமைப்பு:
இதற்கு வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டும் தளமாகக் கொண்டிருக்க வேண்டிய தில்லை. தமிழ்ச் சமூகம் ஒன்றுதிரண்டு, நடைபெற்ற அநீதிகளுக்கு நீதி கோரிப் போராடுவதற்கான ஒரு “பொது செயற்குழு”வை உருவாக்க வேண்டும்.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு வகிக்கலாம்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் பங்குவகிக்கலாம்.
சிவில் சமூக உறுப்பினர்கள், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், ஓய்வுபெற்ற அதிகாரி கள், மூத்த குடிமக்கள் உள்ளடக்கிய 30 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு “செயல் குழு”வை உருவாக்கி, பிரச்சினையைக் கையாளு வதற்கு அதற்கு அனைத்து அதிகாரங்களையும் தமிழ் மக்கள் வழங்க வேண்டும்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதுவே தமிழ் மக்களால் உள்ளும் புறமும் ஏற்றுக்கொள் ளப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்.
அதுவே எம்மத்தியில் ஏற்பட்டுள்ள உள் உடைவுகளைச் சரிசெய்வதற்கும், புதிய செயல் பூர்வமான ஒரு பாதையை வடிவமைக்கவும் வழிகோலும். “An idle mind is the devil’s workshop” (“வெறும் மனம் பிசாசின் பட்டறை”) என்பதற்கிணங்க, போராடாது தேங்கி வரண்டு கிடக்கும் ஒரு சமூகத்தின் மனதில் பிசாசுகள் குடிகொண்டு, அதனைத் தங்கள் பட்டறையாக மாற்றிவிடும். இப்போது தமிழினத்தின் அரசியலும் அப்படித்தானுள்ளது. எனவே, “இனப்படுகொலை” என்ற ஆயுதத்தைக் கையிலேந்தி, அதற்காகப் போராட வல்ல ஒரு அமைப்பைச் சனநாயகப் பூர்வமாக வடிவமைத்து, வெற்றிடங்களை நிரப்பிப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். சர்வதேச நாடுகளும் தமிழரின் தலையில் கொண்டையும் கட்டி, கொண்டையில் பூவும் கட்டி, அதற்கப்பால் தலையில் குருவி கூடும் கட்டிச் செல்லும்.
உலகெங்கும் சிதறி வாழும் ஈழத் தமிழர்களே!
ஈழத்தமிழ் மண், இந்து மாகடலின் மையத்தில் இந்தியாவின் வாசற்படியாக இருக்க வல்ல, அதன் கேந்திர அமைவிடத்தின் நிமித்தம், அது உலகப் பெரும் வல்லரசுகளையெல்லாம் ஈர்க்கவல்ல புள்ளியிலுள்ளது. சர்வதேச கவனத்தை ஈர்க்கக்கூடிய புள்ளியிலுள்ளதால், அதனை ஒரு முதலீடாகக் கொண்டு, அறிவாற்றலுடனும், ஆளு மைத் திறனுடனும் தமிழ்த் தலைவர்கள் செயல்பட வேண்டும்.

காஸாவில் மேலும் 5 பத்திரிகையாளர்கள் படுகொலை

தெற்கு காஸா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சர்வதேச ஊடகங்களில் பணிபுரியும் நான்கு பத்திரிகையாளர்கள் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

நாசர் மருத்துவமனையில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் ஒரு அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகையாளர் ஆகியோர் அடங்குவர். மற்ற இரண்டு பத்திரிகையாளர்களும் அல் ஜசீரா மற்றும் என்பிசி நிறுவனங்களில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

முதல் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர், மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றபோது நடந்த இரண்டாவது தாக்குதலில் மற்றவர்கள் கொல்லப்பட்டனர் என்று ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் தங்களின் ஒளிப்பதிவாளர் ஹுசாம் அல்-மஸ்ரியும் ஒருவர் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் சுயாதீன பத்திரிகையாளரான மரியம் டாகாவும் கொல்லப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் தெரிவித்துள்ளது. 33 வயதான அந்த நபரின் மரணத்தால் “அதிர்ச்சியும் வருத்தமும்” அடைந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்றவர்கள் அல் ஜசீராவில் பணிபுரியும் முகமது சலாமே மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி சேனலான NBCயில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர் முவாத் அபு தாஹா என்று கூறப்படுகிறது.

சிவில் பாதுகாப்புத் துறையின் உறுப்பினர் ஒருவர் உட்பட 15 பேர் கொல்லப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடரும் சர்வதேச நீதி கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்!

unnamed 3 தொடரும் சர்வதேச நீதி கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம்!

தமிழ் இன அழிப்பிற்கான சர்வதேச நீதியைக் கோரும் மக்கள் கையெழுத்துப் போராட்டம் தொடர்கிறது.

சர்வதேச நீதி கோரும் போராட்டமான நீதியின் ஓலம் (VOICE OF JUSTICE) எனும் தொனிப்பொருளுடனான பொதுமக்கள் கையெழுத்து சேகரிக்கும் போராட்டமானது நேற்றுமுன்தினம் (23.08.2025) வடகிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எட்டு மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர மத்தியில் ஸ்ரீ அம்பலத்தடி பிள்ளையார் ஆலயம் முன்பாக இக்கையெழுத்து சேகரிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இது இரண்டாவது நாள் 24.08.2025 நாவிதன்வெளி பிரதேசத்திலும் நேற்று (25.08.2025) மூன்றாவது நாள் காரைதீவிலும் முன்னெடுக்கப்பட்டது

இன்றைய கையெழுத்து சேகரிக்கும் பணியில் பலர் ஆர்வத்துடன் வந்து தமது ஆதரவுகளையும் வழங்கித் தமது கையொப்பங்களையும் இட்டதுடன் அங்கு கலந்து கொண்டிருந்த காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரும் பிரதேச சபை உறுப்பினருமான திரு.கி.ஜெயசிறில் தனது கருத்துகளையும் ஊடகங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இன்றைய நிகழ்வில் இந்த நிகழ்வை ஒருங்கமைத்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர் காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்ததோடு பொதுமக்கள்,இளைஞர்கள், மாணவர்களிடமும் இக்கையெழுத்துப் போராட்டத்தின் நோக்கம் பற்றியும் தமது மக்கள் எதிர்நோக்கிய இன்னல்கள்,பாதிப்புகள் பற்றியும் அதற்காக தாம் கோரும் சர்வதேச நீதி தொடர்பிலும் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

குருக்கள் மடம் மனிதப் புதை குழியை தோண்டுவதற்கு நீதிமன்றம் உத்தரவு!

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பம் சார்பில் AMM. ரவூப் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்நிலையில் நீதிபதி ஜே.பீ ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. இதன்போது நீதிமன்றம், சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடக் சம்பவ இடமான குருக்கள்மடம் கடற்கரை வீதியை சந்தேகிக்கப்படும் இடமாக அடையாளம் காட்டி, பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், வழக்கு  இன்று காலை 9.30 மணிக்கு மீள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம்!

செம்மணி புதை ஒழிக்கு நீதி கோரி எதிர்வரும் 29ஆம் திகதி முதல் வடக்கு கிழக்கில் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் இணைத்தளவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வராசா கஜேந்திரன், முருகேசு சந்திரகுமார், மற்றும் எம்.ஏ.சுமந்திரன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளி கட்சியின் பிரதிநிதி வேந்தன் ஆகியோர்கலந்து கொண்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது  சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் வடகிழக்கில் இருக்கின்ற அனைவரிடமும் கையெழுத்துக்களை பெற்று சர்வதேச நீதி விசாரணை என்பது தேவை என்பதை வலியுறுத்தி சொல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் ஐநா சபைக்கு பல்வேறுபட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களின் கோரிக்கைகளாக நாங்கள் இந்த விடயத்தினை முன்வைக்க விரும்புகின்றோம்.

அத்துடன், ஆரம்ப கட்டமாக ஒரு கையெழுத்து போராட்டம் ஒன்றினை வடகிழக்கில் மேற்கொள்வதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது.

அதுபோல இலங்கை தமிழரசு கட்சியிடமும், தமிழர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் பேசியிருந்தோம் அவர்கள் அதற்கு ஆதரவளித்திருக்கின்றார்கள்.

எனவே அனைவரும் இணைந்து ஒரு பொதுவான தமிழ் மக்கள் சம்பந்தமான பிரச்சினை என்ற விடயத்தில் ஒன்று திரண்டு போராட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது

அதேபோல முன்னணியினரும் சில திருத்தங்களுடன் கையெழுத்துப் போராட்டத்தில் இணைவதாக தெரிவித்துள்ளார்கள்.

எனவே எதிர்வரும் பத்து நாட்களுக்குள் இந்த கையெழுத்து போராட்டத்தை மேற்கொண்டு மக்களிடம் வையொப்பங்களை பெற்று உரிய தரப்பிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் தெரிவித்தார்

மன்னாரில் 23 வது நாளாக தொடரும் போராட்டம்!

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் திங்கட்கிழமை (25) 23 வது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இசைமாலை தாழ்வு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திறண்டு ஆதரவை வழங்கியுள்ளனர்.

25ஆம் திகதி திங்கட்கிழமை காலை மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் இசைமாலை தாழ்வு கிராம பெண்கள் அமைப்பு  உள்ளடங்களாக இசைமாலை தாழ்வு கிராமத்தை சேர்ந்த அனேகமானோர் வருகை தந்து கலந்து கொண்டு தமது எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டம் இன்றைய தினம் திங்கட்கிழமை 23 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த போராட்டமானது காலத்தின் தேவை கருதி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில்,குறித்த போராட்டத்தின் உண்மை நிலையை அறிந்து கொண்டு தாம் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும்,தொடர்ந்தும் தமது ஆதரவு இப்போராட்ட குழுவிற்கு கிடைக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தவே ரணில் கைது : ஜி.எல்.பீரிஸ் சாடல்

அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்வதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டார்.கைது செய்வதற்குரிய நியாயமான காரணிகள் ஏதும் இருக்கவில்லை. இந்த கைதுக்கு அரசாங்கம் நிச்சயம் சட்டத்தின் ஊடாக பதிலளிக்க நேரிடும் என முன்னாள் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது  இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீதிமன்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மீதான குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும்.

முறையான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படவில்லை.நிறைவேற்றுத்துறையின் ஒரு பகுதியாக செயற்படும் பொலிஸாரின் பிரதான நோக்கம் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்வதாகவே அமைந்தது.

வாக்குமூலம் பெறுவதற்காகவே ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டார்.சாட்சியாளர்களுக்கு  அச்சமூட்டல் அல்லது சாட்சியங்களை இல்லாதொழித்தல் போன்ற சந்தேகம் காணப்படுமாயின் ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்திருக்கலாம்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் 33 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் சொலிசிட்டர் ஜெனரால் நீதிமன்றத்துக்கு குறிப்பிட்டுள்ளார்.அவ்வாறாயின் சாட்சியாளர்களுக்கு ரணில் விக்கிரமசிங்கவினால் எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என்பது தெளிவாகுகிறது.

குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். அரசாங்கத்தை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை அச்சமடைய செய்யும் செயற்பாடாகவே இதனை கருதுகிறோம் என்றார்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளில் நீதிக்காகக் குரல் கொடுக்க வருமாறு அழைப்பு

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் நாளில் நீதிக்காகக் குரல் கொடுக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்.

சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான ஆகஸ்ட் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் எழுச்சியுடன் இடம்பெற இருக்கின்ற வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி போராட்டம் வடக்கில் சங்கிலியன் பூங்காவில் இருந்து செம்மணி வரை ஊர்வலமாக  சென்று செம்மணியில் போராட்டம் இடம்பெறும் எனவும், அதேபோன்று கிழக்கில் கல்லடி பாலத்தில் இருந்து பேரணியாக சென்று காந்தி பூங்காவில் போராட்டம் இடம்பெறும் எனவும் இப் போராட்டத்திற்கு பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்,கட்சி பதமின்றி அரசியல்வாதிகள், இளைஞர்கள், யுவதிகள், கழகங்கள், இளைஞர் கழகங்கள், ஆலயங்கள், வர்த்தகர் சங்கத்தினர்,மீனவர் சங்கத்தினர், ஆட்டோ சங்கத்தினர் என இன மத மொழி அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவரும் கலந்து கொண்டு இப்போராட்டத்திற்கு வழமையாகக் கலந்து கொள்வது போன்று இம்முறையும் கலந்த கொண்டு வலு சேர்க்குமாறு அறைகூவல் விடுத்துள்ளனர் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர்.

ரணிலை 40 ஆண்டுகளுக்கு முன்பே கைது செய்திருக்க வேண்டும் – பிமல் தெரிவிப்பு

40 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளுக்காக நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய ஒருவர், இப்போது எங்கள் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே விசாரிக்கப்படுகிறார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில்   நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் பல தமிழ் இளைஞர்கள் யுவதிகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை, படுகொலைகள் செய்யப்பட்டமை, தமிழர்களின் நூலகம் எரிக்கப்பட்டமை, தமிழர்களுக்கு எதிரான கலவரங்களுக்கு காரணமான ஒருவரை கைது செய்திருப்பது தவறு என சுமந்திரன் கூறுகிறார்.

அவர் ரணிலுடன் நெருக்கமானவர், சிலவேளைகளில் ரணிலின் வீட்டில் இருந்து கூட அந்த கருத்தை சொல்லி இருக்கலாம்.

1980களின் முற்பகுதியில் நடந்த முக்கிய சம்பவங்கள், 1981ல் யாழ்ப்பாண நூலகம் எரிப்பு மற்றும் ஜூலை 1983 கலவரம் உள்ளிட்டவற்றின் போது அமைச்சரவையில் ரணில் விக்கிரமசிங்க வகித்த பங்கிற்கு அவர் பொறுப்புக்கூற வேண்டியிருந்தது என்று அமைச்சர் கூறினார்.

1987 மற்றும் 1990 க்கு இடையில், அவரது அரசாங்கத்தின் கீழ் 60,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அவர் படலந்த சித்திரவதை கூடம் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார், இதற்காக சட்டமா அதிபர் மூலம் இன்னும் விசாரணைகள் நடந்து வருகின்றன. இதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை,” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

2015 ஆம் ஆண்டு பிணைமுறி மோசடியில் ரணில் விக்ரமசிங்கவின் தொடர்பு தெளிவாகத் தெரிந்தாலும், அந்த வழக்கிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.

கறுப்பு ஜுலைக் கலவரம், யாழ்ப்பாண நூலக எரிப்பு, படுகொலைகள் உட்பட பல சம்பவங்களுக்குப் பொறுப்பு கூறவேண்டியவர்.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க மட்டும் அல்ல, எப்படியான நபரும் சட்டத்துக்குக் கட்டுப்பட்டே செயற்பட வேண்டும் என்றும் இந்த விடயத்தில் எவரும் விதி விலக்கல்ல என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

செம்மணிக்கு நீதி கோரி ஓரணியில் திரளும் தமிழ் கட்சிகள்!

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையொழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் , ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் , சமத்துவ கட்சியின் பொது செயலாளர் முருகேசு சந்திரகுமார், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோருடன் தமிழரசு கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நடாத்திய ஊடக சந்திப்பின் போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பல்வேறு இடங்களில் மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலான புதைகுழிகள் வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன.  அவற்றுக்கு என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது என்று ஊடக சந்திப்பை நடத்திய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது செம்மணி மனித புதைகுழிகளில் அகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் 140க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 90 வீதமானவை ஆடைகள் அற்ற நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குழந்தைகளின் எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அவற்றுக்கு சர்வதேச விசாரணைகள் கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பில் அகழ்வு பணிகள் முன்னெக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுமே இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.