Home Blog Page 2382

தனியார் கல்வி நிலையம் முற்றுகை;வழக்கும் பதிவுசெய்யப்பட்டது

மட்டக்களப்பு மாநகர சபையின் தீர்மானத்தினை மீறி வகுப்புகளை நடாத்திய மட்டக்களப்பின் பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில், கல்வி அமைச்சானது மாணவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பாடாசாலைகளை மூடி இந்நோய்த் தொற்று ஏற்படாமால் தடுக்க மாணவர்களுக்கு விடுமுறையளித்துள்ளது.

இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் நோக்கோடும், மாநகருக்குள் வதியும் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் இயங்கும் அனைத்து தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இடைநிறுத்தப்பட வேண்டும் எனும் தீர்மானத்தினை மாநகர சபையானது நிறைவேற்றியதுடன்ää அதற்குரிய அறிவிப்புகளும் விடுக்கப்படிருந்தன.

இந்நிலையில் மேற்படித் தீர்மானத்தினை மீறி மட்டக்களப்பு அரசடிப் பகுதியில் வகுப்புகளை நடாத்திகொண்டிருந்த பிரபல தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினை மட்டக்களப்பு பொலிஸார், சுகாதார சேவைகள் திணைக்கள அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், மற்றும் மாநகரசபை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் முற்றுகையிட்டதுடன் வழக்குத் தாக்கலும் செய்துள்ளனர்.

மாணவர்களுக்கு நோய்த் தொற்றினை பரப்பக்கூடிய வகையில் செயற்பட்டமை மற்றும் அரச சட்டதிட்டங்களை மீறி நடந்து கொண்டமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுத் தேர்தலின்போது உயிராபத்துகள் ஏற்பட்டால் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற்கொள்ளாது பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அதன் மூலம் உயிராபத்துகள் ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் தற்பேதைய அரசாங்கம் உள்ளிட்ட சகல அரசில் தலைவர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான செயற்முறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவல் குறித்து இதுவரை எவரும் ஆழ்ந்து சிந்திக்கவில்லை என கூறிய அவர், அரசியல்வாதிகளை விடவும் நாட்டு மக்கள் அதன் பாரதூரதன்மையை அறிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியால் இது குறித்து உறுதியான தீர்மானம் ஒன்று எட்டப்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஏதேனும் உயிராபத்துகள் ஏற்படுமாயின் அதற்கான அனைத்து பொறுப்புகளையும் அரசியவாதிகள் ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.

அனைவருக்கும் தேர்தல் ஒன்றின் தேவை உள்ளதாக தெரிவித்த அவர் உயிராபத்துகள் ஏற்பட்டால் பொது மக்கள் அரசியல்வாதிகள் மீது குற்றச்சாட்டை முன்வைக்க வேண்டும் எனவும் கூறினார்.

யாழ் விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் சேவைகள் இடம்பெறும்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுவதாக கூறப்பட்டபோதும் உள்ளூர் விமான சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று (திங்கட்கிழமை) வழமைபோன்று விமானம் காலை 7.30 மணிக்கு இரத்மலானையில் இருந்து பயணிகளுடன் புறப்பட்டு யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.

இதன்பின்னர் மீண்டும் காலை 9.20 மணிக்கு பயணிகளுடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும் சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவரை கொரோனா பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் அதிரடி நடவடிக்கை

வவுனியா- இரேசேந்திரகுளம் பகுதியில் வெளிநாட்டில் இருந்து வருகைதந்து, உறவினர் வீட்டில் தங்கியிருந்த குடும்பத்தை, கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வைத்திய பரிசோதனைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர்

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘வவுனியா- இராசேந்திரகுளத்திலுள்ள வீடொன்றில்,  வெளிநாட்டிலிருந்து  வருகை தந்தவர்கள் தங்கியிருப்பதாக, பொலிஸாருக்கு பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த இடத்திற்கு இன்று (திங்கட்கிழமை) காலை 11 மணியளவில் சென்ற வவுனியா பொலிஸார் விசாரணையினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த  விசாரணையின் பின்னர், அந்த குடும்பத்தினருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்தனர்.

பெல்ஜியத்தில் இருந்து நேற்றையதினம் இலங்கை வருகைதந்த கணவனும் கடந்தமாத இறுதியில் வருகை தந்திருந்த மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுமே கொரோனோ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுத்தேர்தலினை ஒத்திவைக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை!

நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இவ் அறிக்கையானது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி தலைவர்களின் கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்படுகின்றது.

நாட்டிலே தற்போது நிலவுகின்ற COVID 19 வைரஸ் பரவுகின்ற அபாயம் சம்பந்தமாக அரசாங்கம் தகுந்த உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக எடுக்க வேண்டும்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுக்கின்றது.

இவ்விடயத்தில் முற்றுமுழுதாக எமது பங்களிப்பினை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம்.

மக்களுடைய பாதுகாப்பிற்கு அதியுச்ச கரிசனை வழங்கப்பட வேண்டும் என்பதாலும் இவ் அசாதாரண சூழ்நிலையில் ஜனநாயக நடவடிக்கைகளை முழுமையாக செயற்படுத்த முடியாத காரணத்தாலும் ஏப்ரல் 25ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை பிற்போடுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) – மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்

உலக சுகாதார அமைப்பின்(WHO) மத்திய கிழக்கு பிராந்திய பொது பொது சுகாதார மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன் அவர்கள் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி வழங்கிய நேர்காணல்

கேள்வி-கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் தாக்கியுள்ளதுடன் அதுவே இன்றைய உலகளாவிய பேசுபொருளாகி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பு தரும் தற்போதைய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?

உலக சுகாதார நிறுவனம் தினசரி உலகெங்கும் நடைபெறும் கொரோனா வைரசு தாக்கம் பற்றி நிகழ்வுகளை சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு அமைய உத்தியோக பூர்வமாக வெளிக்கொணரும் பொறுப்பினை கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலே சீனாவில் பரவிய நோயானது, பின்னர் ஏனைய நாடுகளுக்கும் பரவியது.

14ம் திகதி மார்ச் 2020 வரை வரை உலக சுகாதார நிறுவனத்தினரின் பதிவுகளின் படி 142,320 நபர்கள் 129 நாடுகளில் இந்நோயின் தக்கத்துக்கு உள்ளாகியுள்ளது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது, இறப்புக்களின் எண்ணிக்கை 5321ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 2020 மார்ச் மதம் 11ம் திகதி இந்த நோயை உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய மக்களிடையே பரவிய நோயாக அறிவித்திருக்கின்றது.WhatsApp Image 2020 03 16 at 08.10.05 கோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) - மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்

இது 2009ஆம் ஆண்டு ஏற்பட்ட H1N1 நோய்த் தாக்கத்திற்குப் பதினொரு ஆண்டுகளின் பின்னர் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்திய நோயாக அறிவிக்கப்பட்ட வைரஸ் நோயாகும். ஆனால் பொதுவாக ஆண்டுதோறும் ஏற்படும் வைரசு காய்ச்சலின் தாக்கத்தை விட இதன் தாக்கம் குறைவானது. இந்நோய் புதிதாக மனிதர்களிடையே தோன்றிய நோய் எனும் வகையில் இதன் தாக்கம் பயத்தையும் பீதியையும் உருவாக்கி வருகிறது.

இந்த நோய் தாக்கமானது இன்னும் ஒருசில மாதங்களுக்கு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பதும் இன்றைய எதிர்வு கூறலாக உள்ளது.

கேள்வி- இந்த வைரஸ் தாக்கமானது குறைவதற்குஎவ்வளவு காலம் எடுக்கும்?

உலகளாவிய ரீதியில் இதன் பரம்பலைப் பொறுத்தவரை இதன் முதலாவது அலை உச்சம் பெற்று வருகின்றது. இந்த முதலாவது உலகளாவிய அலையின் போது மார்ச் 13 அன்று அதி கூடியதாக 11,600 புதிய நோயாளர்கள் உலகெங்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளனர் வெளிப்படையான அறிகுறிகளின்றி சாதாரணமான அதிகமாக வெளித்தெரியாத வறட்டு இருமல், தொண்டை நோவு, மெல்லிய காய்ச்சல் என வெளித்தெரிய ஆரம்பிப்பதுதான் பலரில் தொற்றின் பின்னர் அறிகுறிகளின்றி கடந்துசெல்வது அவதானிக்கப்பட்டுள்ளது.CHART FIX AGAIN கோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) - மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்

இதனால் இவ்வகை நோய்கள் ஓரளவு பரவுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது. இவ்வாறான வைரசு நோய்கள் பொதுவாக மக்களிடையே பரவி பெருகி பின்னர் மக்களிடையே ஏற்படும் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக அதன் தாக்கமும் தொற்று எண்ணிக்கையும் குறையும். இந்த நோயைப் பொறுத்தவரையில் அவ்வாறான ஒரு சூழ்நிலை ஏற்படும். நாங்கள் மிகவும் கவனமாக செயற்பட்டால், இந்நோயின் தாக்கத்தை ஓரிரு மாதங்களில் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

கேள்வி – கவனமாக செயற்படுதல் என்பது தற்சுகாதாரம் பேணல் என கொள்ளலாமா?

தற்சுகாதாரம் பேணலுடன் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும். இது முக்கியம். இன்று தொற்றிற்கு உள்ளானவர்கள், உள்ளாகாதவர்கள் என்று இனங்காண முடியாத ஒரு சூழ்நிலையில் பொது இடங்களுக்கு போவதை தவிர்ப்பதன் கூடாக இதனை கட்டுப்படுத்த முடியும். இன்று பல நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.BB111ith கோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) - மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்

பொது நிகழ்வுகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அத்தியாவசிய தேவைகள் இருந்தால் அன்றி பொது இடங்களுக்கு போவதை தவிர்த்துக் கொள்ளல், அலுவலகங்கள், பொருட்கள் கொள்முதல் செய்யும் இடங்களில் நபர்கள் இடையேயான இடைவெளிகளை பேணுதலூடாக நாங்கள் இதை தவிர்த்துக் கொள்ளலாம். மேலும் சுகாதார திணைக்களத்தினரின் துரித செயற்பாடும் அவர்களின் ஆலோசனையை ஏற்று நடத்தல் பூரண ஒத்துழைப்பு வழங்குதல் அசண்டையீனம் இல்லாது சமூக பொறுப்புடன் நடந்த கொள்ளல் என்பனவும் அனைவரதும் கடமை.

கேள்வி-இதுவரை இந்நோயின் தாக்கத்திலிருந்து குணமடைந்தவர்களின் விபரங்கள் எமக்கு எவ்வகையில் எமது மக்களுக்கு பயனுள்ளதாக அமைகின்றன ?

சீனாவில் பெப்ரவரி 11ம் திகதிவரை சிகிச்சை பெற்ற 72,314 நோயாளர்களின் குறிப்புகளை ஆய்வுக்குட்படுத்தி பெறப்பட்ட முடிவுகளின் படி, 1.2 வீதமானோர் அறிகுறிகளின்றியும், 81 வீதமானவர்கள் நலிவான நோய்தாக்கத்திற்கும், 13 வீதமானோர் தீவிர தாக்கத்திற்கும், 5 வீதமானோர் அதி தீவிர தாக்கத்திற்கும் உள்ளாகியிருந்தமை தெரிய வந்தது. இவர்களில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அவ்வாறனவர்களில் தான் அதி தீவிர தாக்கமும் அதிக இறப்பும் நிகழ்கின்றது.

அத்தோடு வேறு நீண்டகால, நோயெதிர்ப்பு குறைபாட்டை ஏற்படுத்தக்கூடிய சலரோகம், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்கள் உடையவர்களும் அதி தீவிர தாக்கத்திற்குள்ளானமை தெரிய வந்துள்ளது. சிறுவர்கள், இளையோர், நடுத்தர வயதுடையோர் தொற்றுக்குள்ளான போதும் அவர்கள் மீதான நோயின் தாக்கம் மட்டுப் படுத்தப் பட்டதாகவே காணப்பட்டுள்ளது. பெண்களை விட ஆண்களில் சற்று அதிகம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.hqdefault கோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) - மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்

இந்நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபட்டவர்கள் நோய்த் தாக்கத்திற்கு சிகிச்சை பெற்று அவர்கள் திடகாத்திரமாக இருந்தாலும், நோய்த் தாக்கம் குறைந்து குணமடைந்தவர்களில் சிலரில் வைரசுக்கள் தொடர்ந்தும் இருந்தமை இனங்காணப்பட்டது, இது இந்நோய்க்கான உடலின் நோயெதிர்ப்பு சக்தி வைரசுக்களை முற்றாக அழிக்க தேவைப்படும் காலம் நீண்டதாக இருக்கலாம் எனும் அவதானிப்பை மருத்துவ உலகிற்கு வழங்கியிருக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி விருத்தியடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையும் போது இது மீண்டும் மீண்டும் தாக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு.

கேள்வி – இந்நோய்க்கான தடுப்பு மருந்துகள், பிரத்தியேக சிகிச்சைக்கான மருந்துகள் என்பன இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என அறிகிறோம், இந்நிலையில் அவ்வாறான முயற்சிகள் எந்தளவில் உள்ளன?

இவ்வகை வைரசுக்களின் தாக்கத்திலிருந்து விடுபட மருந்து தயாரிப்பு என்பதை விட தடுப்பு மருந்து தயாரிப்பு என்பதே பொருத்தமானதாக அமையும். அவ்வகையில் ஒரு சில நிறுவனங்கள் ஆரம்ப கட்ட பரிசோதனைகள் வெற்றியளித்துள்ளதாக அறிவித்துள்ளன. அவற்றை மனிதர்களில் பரிசீலிக்கப்பட்டு விளைவுகள் ஆய்வு செய்யப்பட்டு சந்தைக்கு மருந்துகள் வருவதற்கு சில காலங்கள் எடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை உடல் தானாக உருவாக்கிக் கொள்ளும் காலப்பகுதி கூடுதலாக காணப்படுவது, சாதாரண தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பு, பரிசோதிப்பு மற்றும் உற்பத்தி காலத்தைவிட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தயாரிப்பில் சற்று கூடுதலானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேள்வி -ஒரு மனிதரிடமிருந்து இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் எப்படி பரவுகின்றது?

மனிதர்களின் சுவாசப் பாதைகளிலிருந்து வெளிப்படும் துணிக்கைகள் ஊடாகவே இந்த வைரஸ் பரவும். ஆனால் பெருமளவானவர்களிடம் இந்த வைரஸ் காணப்படுகின்ற போது. இருமல், தும்மல் மட்டுமல்ல சாதாரணமாக பேசும் போதுகூட தெறிக்கும் துளிகள் நாங்கள் இருக்கும் சூழலில் இருக்கும் மேற்பரப்புகளில் படியும் வாய்ப்பு இருக்கின்றது. இந்த மேற்பரப்புகளை நாங்கள் தொடுகின்ற போது அந்த வைரஸ்கள் எங்கள் கைகளில் வரும்.

அத்துடன் இம்மேற்பரப்புகளில் சில நாட்கள் வரை தங்கியிருக்க கூடிய வைரசுக்கள் எம்முடைகளிலும் ஒட்டிக்கொள்ளலாம், அம்மேற்பரப்புக்களையோ, உடைகள் மற்றும் பாவனை பொருட்களையோ நாம் அழையும் போது கைகளுக்கும், பின்பு முகம் மூக்கு, வாய் போன்ற உறுப்புக்கள் ஊடாக எமது சுவாசப்பாதையை சென்றடைந்து பெருகி நோயை ஏற்படுத்த வாய்ப்பாக அமைகிறது. அதனாலேயே பொது இடங்ளிலுள்ள பிற பொருட்களை கையாண்டதன் பின் கைகளை நாங்கள் அடிக்கடி கழுவிக் கொள்ளுவோமாக இருந்தால் எமக்கு இந்த நோய் தொற்றுவதை குறைக்க முடியும்.

கேள்வி-முகக் கவசங்கள் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா வைரஸ்தொற்றிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியுமா ?

எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை, சாதாரண முகக்கவசங்கள் முழுமையாக சுவாச துணிக்கைகளை தடுக்காது, மேலும் துணிக்கைகள் எமது மூக்கையும் வாயையும் நோக்கி மட்டும் தெறிக்காது, கண்களூடாகவும் தொற்றும் வாய்ப்புள்ளது. முன்னர் குறிப்பிட்டது போல துணிக்கைகள் கீழ் நோக்கி சென்று பவ்வணை பொருட்களிலும் மேற்பரப்புகளிலுமே படியும் அங்கிருந்து தொடுகை மூலமே அதிகம் பரவும்.

நாம் முககவசத்தை அணைத்த பின் அதிகம் முகத்தை தொற்றுக்குள்ளான கைகளால் தொடுவோம் இது தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஆனால் நோயின் தாக்க அறிகுறிகள் கொண்டவர்கள் கட்டாயமாக முகக்கவசம் பயன்படுத்த வேண்டும்.5e2b73fb24306a7c4f011fe3 கோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) - மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்

எந்தவொரு சுவாச தொற்றுக்கு உள்ளானவர்களும் நோய் இனங்காணப்பட்டு சிகிச்சை முடிவுறும் வரை முகக்கவசம் பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களை பராமரிப்பவர்கள் நிச்சயமாக தடுப்பு முறைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவர்கள், ஆய்வுகூட பணியாளர்கள், அவர்களின் மாதிரிகளை பரிசோதிப்பவர்கள். அவர்களை பாதுகாத்துக் கொள்ள பாதுகாப்பு உடைகளையும் அணிய வேண்டும்.

தும்மல், இருமல், மற்றும் உரையாடல்களின் போது சுமார் ஒரு மீட்டர் தூரம் வரை சுவாசத்துளிகள் பரவும் வாய்ப்புகள் உள்ளன எனவே நாம் நெரிசலை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி-தும்மல், இருமல், மற்றும் உரையாடல்களின் போது துணிக்கைகள் மேற்பரப்புகளில் படிந்து இருந்தால் அங்கு வைரசுக்கள் எவ்வளவு காலம் உயிர்ப்புடன் இருக்கும் ?

இது தொடர்பாக முழுமையான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ள படவில்லை. குளிர் பிரதேசங்களில் சில நாட்கள் இருக்கும் எனக் கூறப்படுகின்றது. எல்லா வெட்ப தட்ப நிலைமைகளில் இந்த கிருமிகள் எவ்வளவு நாட்கள் இருக்கும் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் உலோகப் பொருட்களில் இது கூடிய காலம் இருக்கும் என்றும், அங்கிருந்து அவை இலகுவாக பரவும் என்றும் கூறப்படுகின்றது. உடைகளைப் பொறுத்தவரையில் பருத்தி உடைகளில் அவை ஈரப்பதனை உறுஞ்சும் தன்மை கொண்டதனால் அவற்றில் அதிக காலம் வைரசுக்கள் உயிப்புடன் இருக்கும் வாய்ப்பு குறைவு ஆனால் செயற்கையான துணிவகைகள், தோல்பொருட்கள் பொலியஸ்டர் போன்ற உடைகளில் சில நாட்கள் வைரசுக்கள் உயிப்புடன் இருக்கும் வாய்ப்பு அதிகம்.

கேள்வி-அதிகமான நாடுகளில் அதிக மக்கள் கொரோனா வைரசால் தாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கின்றார்கள். அப்படி தாக்கினால் எவ்வளவு மக்கள் இறப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனாவைப் பொறுத்தளவில் கிட்டத்தட்ட 1.7 பில்லியன் மக்கள் வாழுகின்ற ஒரு பிரதேசம். 81,000 பேருக்கு மட்டும் தான் தாக்கம் ஏற்பட்டிருக்கின்றது. இது 0.05 வீதம் தான் இது மிகக் குறைந்தளவு. ஆகவே இது பெரியளவு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை. அது மிகப் பெரிய ஒரு எடுத்துக்காட்டு.29VIRUS REINFECT1 mediumSquareAt3X கோவிட்-19 ஒரு கொடிய நோயல்ல (நேர்காணல்) - மருத்துவ கலாநிதி விக்னேஸ்வரன்

அத்துடன் அபாரத் தொற்று ஏற்பட்டு இறப்பது என்பது இன்றைக்கு உலகளவிலே தொற்று ஏற்பட்டவர்களில் நூற்றிற்கு மூன்று பேர் என்ற அளவிலேயே உள்ளது. இந்த இறப்பு வீதமானது மிகமிகக் குறைவானதாகவே காணப்படுகின்றது. இருந்தாலும் கவனமாக இருப்பது நல்லது. இது ஒரு புதிய நோய். அதனுடைய முழுமையான தாக்க விபரங்கள் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் கவனமாக இருக்க வேண்டுமே அன்றி பயப்படவோ பீதியடையவோ தேவையில்லை.

எங்களை நாங்கள் தற்காத்துக் கொள்ள வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இன்று இருக்கும் ஊடகங்கள் ஊடாக மக்கள் தெளிவாக உள்ளனர். அந்த வகையில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக சிறுவர்கள், முதியோர்கள், நோயின் தாக்கத்திற்குள்ளானவர்களை கவனமாக பராமரிப்பது மிகமிக முக்கியம்.

உலகத்தை தாக்க இருக்கும் இன்னொரு பேரபாயம்

ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக உருகுவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது. புவி வெப்பமயமாதலால் 1992 – 2017 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகி உள்ளன.

இதன் காரணமாக 17.8 மி.மீ அளவுக்குக் கடல்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த நிலை தொடருமானால் 2100ஆம் ஆண்டுக்குள் 40 கோடி மக்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும் என இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஐஸ் ஷீட் மாஸ் பேலன்ஸ் இன்டர்கம்பரிசன் திட்டம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

மூன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒரே நாளில் 494 பேர் சாவு

ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 494 உயிரிழந்துள்ளனர். ஐரோப்பியஒன்றியத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் இந்த அளவுக்கு சாவு நிகழ்வது இதுவே முதல்முறை,.

இத்தாலியில் 368 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதை அடுத்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதுபோல ஸ்பெயினில் நேற்று 97 பேர் பலியாகியதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்ந்துள்ளது. பிரான்ஸில் 29 பேர் பலியானதை அடுத்து அங்கு மரணித்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டனிலும் ஒரே நாளில் 14 பேர் பலியானதை அடுத்து அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35-ஆக மாறி உள்ளது.

தமிழர் பகுதிகளில் மேலும் கொரோனா மத்திய நிலையங்கள்

நாட்டுக்கு வரும் பயணிகளை கண்காணிப்பதற்காக நாடாளாவிய ரீதியில் 12 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

பம்மைமடு, கந்தக்காடு, பனிச்சங்கேணி, மயிலன்குளம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு படை முகாம்களில் இந்த நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், பொரவெள, கல்கந்த, கஹகொல்ல, தியத்தலாவை இராணுவ மருத்துவமனை மற்றும் தியத்தலாவை இராணுவ முகாமிலும் இந்த மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவம்கூறியுள்ளது.

குறித்த மத்திய நிலையங்களில் இதுவரை 8 வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 723 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து வடக்குக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் பணிப்பு

வெளிநாடுகளில் இருந்து வடமாகாணத்துக்கு வந்தவர்கள் தொடர்பில் விபரங்களை திரட்டுமாறு வடமாகாண ஆளுநர் அரசாங்க திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அதிபர்களுக்கு பணித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நமது நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக நமது அரசாங்கம் பல்வேறு நடைமுறைகளை அமூல்படுத்தி வருகிறது குறிப்பாக வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து இந்நோய் பரவுகின்ற தன்மை அவதானிக்கபட்டிருப்பதால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயனிகள் தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் அமூல்படுத்தி வருகிறது.

வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் பரம்பலை கட்டுபடுத்தும் நோக்கில் தேசிய கொள்கைக்கு அமைவாக சில நடைமுறைகளை உரியமுறையில் நடைமுறைப்படுத்தும் படி வடமாகாண ஆளுநர் சகல தரப்பினருக்கும் பணித்துள்ளார்.

சுற்றுலா மற்றும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இவ்வருடம் பெப்ரவரியில் இருந்து வருகை தந்த, வருகை தருகின்ற பயணிகள் தொடர்பாக விபரங்களை கிராம சேவகர்கள் ஊடாக பெற்றுகொள்ளும் நடைமுறையை விரைவாக மேற்கொள்ளுமாறும் பிரதேச செயலாளர்களூடாக இவற்றை உரிய முறையில் நடைமுறை படுத்தும் படியும் வடமாகாண அரச அதிபர்களுக்கு வடமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் பணித்துள்ளார்.

இவ் ஒழுங்குமுறை தொடர்பில் யாரும் வீணாக குழப்பமடைய தேவையில்லை என்றும், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து வடக்கு மாகாண மக்களை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தின் தேசிய திட்டமிடல்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையே இதுவென்றும், அனைத்து தரப்பினருக்கும் இதற்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் வடமாகாண ஆளுநர் பொதுமக்களை கேட்டுகொண்டுள்ளார்.