Home Blog Page 138

இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரி வட்டிக்கடை ஜீவன் போராட்டம்

இலங்கை தமிழ் அரசு கட்சி மீதான வழக்குகளை மீளப்பெறக்கோரி கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் தெரிவை தொடர்ந்து ஏற்பட்ட சரச்சைகளை அடுத்து, கட்சி உறுப்பினர்கள் சிலரால் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.

வழக்கு தொடர்ந்தவர்கள் சுமந்திரன் அணியினர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. எனினும், பகிரங்க மேடைகளில் சுமந்திரன் அதை மறுத்து வருகிறார். இந்தநிலையில், கிளிநொச்சியை சேர்ந்த முன்னாள் பிரதேசசபை உறுப்பினரான ஜீவராசா (வட்டிக்கடை ஜீவன்) இன்று (05) யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவிடத்தின் முன்பாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வட்டிக்கடை ஜீவன், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அணியை சேர்ந்தவர்.

இதேவேளை இந்த வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நேற்று (04) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜாவின் மறைவுக்குப் பின்னர் அவருக்குப் பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அவரை இந்த வழக்கிலே முதலாவது எதிராளியாக பதிலீடு செய்துகொள்வதற்கே நேற்றைய தினம் குறித்த வழக்கு அழைக்கப்பட்டிருந்தது.
அதற்கான ஆவணங்களை வழக்காளி, மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றார் என்று பிரதிவாதிகள் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புதிய தலைவர் சி.வி.கே.சிவஞானத்திற்கு இந்த வழக்கு தொடர்பான அறிவித்தல் கொடுத்து எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தன்னுடைய பதிலியை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என வழக்கிலே நீதிமன்றால் உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் முன்வைப்பு

மன்னார் சதோச மனித புதைகுழி தொடர்பில் சில தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.
மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்று(5) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இன்றைய வழக்கு விசாரணை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் சில முக்கிய தீர்மானங்கள் எட்டப்பட்டதாக தெரிவித்தார். இதன்போது ஏற்கனவே அழைக்கப்பட்ட சட்டத்தரணிகள் பிரசன்னமாகி இருந்த நிலையில், மன்னார் நீதிமன்ற நீதவான் மற்றும் அழைக்கப்பட்ட நிறுவனத்தினரும் குறித்த சதோச மனித புதைகுழி பகுதியை இன்று காலை நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.
‘இதன் போது சில தீர்மானங்களுக்கு அவர்கள் முன்வந்தார்கள்’.

குறித்த புதைகுழி பிரதேசத்தை சுத்தப்படுத்துவதாகவும், நிறம்பியுள்ள நீரை அகற்றுவதற்கும் நகர சபை இணங்கிக்கொண்டுள்ளதன் அடிப்படையில், குறித்த நீரை அகற்றுவது என்றும், குறித்த புதைகுழியை பகுதி அளவில் மூடுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது என்று சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

அத்துடன் ஏற்கனவே எடுக்கப்பட்ட மண் சதோச நிறுவனத்திடம் காணப்படுகின்றதா?,அது எங்கே இருக்கிறது போன்ற விடயங்களை பொலிஸார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தால் தனிநபர் பிரேரணையாக மாகாண சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் இன்று (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் நிஷாம் காரியப்பர் வழிமொழிந்தார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி கடந்த மே 22 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் 2017ஆம் ஆண்டில் செப்டம்பர் 21 ஆம் திகதி வலுவிலிருந்த 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் ஏற்பாடுகள் திருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட மூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்படுமாயின் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தியாகி பொன் சிவகுமாரனின் 51வது நினைவேந்தல்…

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த முதல் தியாகி பொன் சிவகுமாரனின் 51வது நினைவுதினம் இன்று (5) நடைபெற்றது.

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் அமைந்துள்ள பொன் சிவகுமாரனின் நினைவுத்தூபியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது சுடர் ஏற்றப்பட்டு, பொன் சிவகுமாரனின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை, தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. பொன் சிவகுமாரன், தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்திப் போராடியவர் ஆவார்.

அதனால்  காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த இவர் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்டபோது சயனைட் உட்கொண்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் உட்கொண்டு உயிர் நீத்தவர் பொன் சிவகுமாரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய நினைவு நாளையே தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மியான்மர் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் செல்லத் தடை

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி 12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரிட்ரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அதேபோல, புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகிய ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப் கையெழுத்திட்ட பிரகடனத்தில், “எனது முதல் நிர்வாகத்தின் போது, ​​வெளிநாட்டினர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைவதை நான் தடை செய்தேன். இது தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நமது எல்லைகளை அடைவதை வெற்றிகரமாகத் தடுத்தது.

ஜனவரி 20, 2025 இன் நிர்வாக ஆணை 14161 (வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்) மூலமாக , நமது தேசிய பாதுகாப்பை அச்சுறுத்த குடியேற்றச் சட்டங்களைப் பயன்படுத்த விரும்பும் வெளிநாட்டினரிடமிருந்து நமது குடிமக்களைப் பாதுகாப்பது அமெரிக்காவின் கொள்கை என்று நான் குறிப்பிட்டேன்.

அதன்படி, அமெரிக்காவில் நுழைய அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டினர் அமெரிக்கர்களுக்கோ அல்லது அமெரிக்காவின் தேசிய நலன்களுக்கோ தீங்கு விளைவிக்க விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்த விசா வழங்கும் செயல்முறையின் போது அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும். அமெரிக்காவில் ஏற்கனவே இருக்கும் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டினர், நமது குடிமக்கள், கலாச்சாரம், அரசாங்கம், நிறுவனங்கள் அல்லது ஸ்தாபகக் கொள்கைகள் மீது விரோத மனப்பான்மையைக் கொண்டிருக்கவில்லை என்பதையும், நியமிக்கப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதிகள் அல்லது அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஆதரிக்கவோ, உதவவோ கூடாது என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். எனவே அமெரிக்காவிற்கு ஏற்படும் அபாயங்களை மதிப்பிடுவதற்கு போதுமான தகவல்கள் இல்லாத வெளிநாட்டினரின் நுழைவை தடுக்க பிரகடனத்தால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அவசியம்’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதிக வெப்பம் நிலவும் நாடாக இலங்கை: உலக வங்கி தகவல்

நாளொன்றுக்கு சராசரியாக ஆறு மணிநேரம் பொது வெளியில் பாதுகாப்பாக வேலை செய்ய முடியாத அளவுக்கு அதிக வெப்பநிலையைக் கொண்ட தெற்காசிய நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

இந்த நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளும் அடங்கும். 2050 ஆம் ஆண்டுக்குள் நாளொன்றுக்கு எட்டு முதல் ஒன்பது மணிநேரமாக அதிகரிக்கலாம் என உலக வங்கியின் ‘ஆபத்திலிருந்து மீள் எழுச்சி தன்மைக்கு தெற்காசியாவில் மக்கள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவுதல்’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தெற்காசியாவில் தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. 2030 ஆம் ஆண்டில் சுமார்  90 சதவீத மக்கள் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட நேரிடும் எனவும், ஐந்து பேரில் ஒருவருக்கும் அதிகமானோர் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொது வரவு செலவு திட்டம் அழுத்தத்தில் இருப்பதால், பெரும்பாலான மாற்றங்களுக்கான முயற்சிகளை தனியார் துறை முன்னெடுக்க முன் வர வேண்டும். அடிக்கடி மாற்றம் ஏற்படும் மற்றும் சேதத்தை விளைவிக்கும் வானிலை நிகழ்வுகளுக்கு ஏற்ப வீடுகள் மற்றும் நிறுவனங்களை மாற்றியமைக்க உதவும் கொள்கை சீர்திருத்தங்களுக்கான புதிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வகுத்துள்ளது.

இந்த தீவிர வானிலை நிகழ்வுகளால் தெற்காசியாவின் வளர்ந்து வரும் சந்தை மற்றும் பொருளாதாரங்களில் (EMDEs) மிகவும் பாதிக்கப்படக்கூடியது.

கடந்த இரண்டு தசாப்தங்களில் வெள்ளம் மற்றும் வெப்பநிலை அதிகரிப்பு  நிகழ்வுகளின் அதிக அதிர்வெண் காணப்படுவதால் இது மிகவும் சாதாரணமான ஒன்றாகவுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல், தெற்காசியாவில் சராசரியாக ஆண்டுக்கு 67 மில்லியன் மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் வெள்ளத்தால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், தீவிர வெப்பநிலையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தால் விவசாயம் பெரும் ஆபத்தை சந்திக்கும் என இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

“காலநிலை மாற்றம் பிராந்தியத்தின் விவசாய முறைகளுக்கு ஆபத்தை விளைவிக்கும். அதில்  வெப்பநிலை அதிகரிப்பு, நீர் பற்றாக்குறை,  பருவம் மாறி மழை பெய்தல் மற்றும் வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளும் அடங்கும்” என குறிப்பிட்ப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையாகும் சிறுவர்கள்: புனர்வாழ்வு நிலையத்தை அமைக்க பணிப்புரை

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் வகையில் புனர்வாழ்வு நிலையத்தை நிரந்தரமாக அமைக்கும் வரையில், இந்த மாத இறுதிக்குள் கைவிடப்பட்ட அரச கட்டடத்தில் தற்காலிகமாக அதனை ஆரம்பிக்குமாறு வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (5) நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த போதே ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரம் வட மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்கள ஆணையாளர் குறிப்பிடுகையில், 15 – 18 வரையிலான வயதுடைய 36 சிறுவர்கள் உயிர்க்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையாகி நீதிமன்றத்தால் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றார். அவர்களில் சிறுமிகளும் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கூறுகையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி செ.பிரணவன், மாணவர்களிடையே உயிர்க்கொல்லி போதை மாத்திரையின் பயன்பாடு அதிகரித்துள்ளது எனச் சுட்டிக்காட்டினார். சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு உயிர்க்கொல்லி போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் செம்மணி மனித புதைகுழி விவகாரம்: சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி போராட்டம்

Unknown 1 3 யாழ் செம்மணி மனித புதைகுழி விவகாரம்: சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி போராட்டம்

யாழ் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியை சர்வதேச கண்காணிப்பின் கீழ் அகழ்வு செய்ய வலியுறுத்தி செம்மணியில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்  யாழ் நகர நுழைவாயில் – நாவற்குழி பகுதியில் நடைபெற்றுள்ளது.

புதைகுழி அகழ்வு நடவடிக்கையில் வெளிப்படைதன்மையை உறுதிசெய்யுமாறு கோரி இப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

Unknown 7 யாழ் செம்மணி மனித புதைகுழி விவகாரம்: சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை தாங்கி “செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும், மறைக்காதே மறைக்காதே புதை குழிக்குளை மறைக்காதே, எங்கே எங்கே உறவுகள் எங்கே, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட மக்கள்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இப்புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு : நீதி கேட்டு தொடரும் போராட்டம்

Unknown 1 2 மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு : நீதி கேட்டு தொடரும் போராட்டம்

திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் வைத்து மீனவர் ஒருவர் கடற்படையினரால் சுடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து  திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று (05) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Unknown 2 1 மீனவர் மீது கடற்படை துப்பாக்கிச்சூடு : நீதி கேட்டு தொடரும் போராட்டம்

குச்சவெளி கடற்பரப்பில்  கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இதன்போது குச்சவெளி ஜாயாநகரைச் சேர்ந்த  23 வயதுடைய மீனவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

‘எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்: தாய்மொழி ஆசிரியர் சங்கம் போராட்டம்

தேசிய இடமாற்றக் கொள்கையை நடைமுறைப்படுத்தக்கோரி இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தினரால் யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ‘எங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்!’, ‘வெளிமாகாணம் என்ன வேறு ‘நாடா!’, ‘ஆசிரியர் இடமாற்றம் மூலம் குடும்பத்தை சிதைக்காதே!’, ‘சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தில் ஆசிரியர்களின் அவர்களின் உறவினர்களின் மருத்துவ சான்றிதழைக் கருத்தில் கொள்!’, ‘இடமாற்றக் கடிதத்தில் காலத்தை வரையறை செய்!’ ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம் சார்பாக ஆறு பிரதிநிதிகள் ஆளுநரைச் சந்தித்து மனுவொன்றைக் கையளித்தனர் .