Home Blog Page 133

பொசன் தினம்: இனவாதத்தைத் தூண்ட முயற்சி-காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு கருத்து

பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம் என காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக மேலும் விரிவுபடுத்தப்பட்ட ஆலயம் குறித்த விபரங்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என நினைக்கின்றோம். இன்று பொசன் தினம் தென்பகுதியின் சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனவாதத்தினை தூண்ட முயல்வதாக அறிகின்றோம்.

தையிட்டியில் வசிக்கும் மக்களிற்கு அந்த ஆலயம் குறித்தோ தேசம் குறித்தோ எந்த பிரச்சினையுமில்லை. தங்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட நிலத்தை தருமாறு மாத்திரம் அவர்கள் கோருகின்றனர்.

காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு என்ற அடிப்படையில் இந்த விடயம் குறித்து எழவுள்ள குரோதகருத்துக்களையும், புரிந்துணர்வின்மையையும் தவிர்த்துவிட்டு, இந்த பிரச்சினையின் உண்மையான தன்மையை மக்களிடம் கொண்டு செல்ல உதவுங்கள்.

சட்டவிரோதமாக கட்டப்பட்டு விஸ்தரிக்கப்பட்டு காணி உரித்துக்கள் உள்ள மக்களிடமிருந்து பலவந்தமாக பறிக்கப்பட்ட ஆலயம் குறித்து தையிட்டியில் காணப்படும் உண்மையான பிரச்சினையை நீங்கள் அறிவீர்கள் என நான் நாங்கள் கருதுகின்றோம்.

பொசன் தினத்தன்று சில இனவாத குழுக்கள் அங்கு சென்று இனப்பதற்றத்தை தூண்ட முயல்வதாக அறிகின்றோம்.

பேச்சுச் சுதந்திரம் உண்மையில் அவசியமா? (பகுதி-03 (இறுதிப் பகுதி) – தமிழில்: ஜெயந்திரன்

பேச்சுச் சுதந்திரம் அவசியம் என்பதற்கு நாம் முன்வைக்கின்ற மூன்றாவது வாதம் என்னவென்றால், நாம் விரும்பும் கலை மற்றும் திரைப்பட இலக்கியங்களை நாம் வாசிக்க, பார்க்க, கேட்க எமக்கிருக்கும் சுதந்திரமாகும். 1970 இன் நடுப்பகுதியில் உயர்தரப் பாடசாலையில் நான் கல்விகற்றுக்கொண்டிருந்த பொழுது, ஒரு நாள் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த பொழுது, டி.எச்.லோறன்ஸ் (D.H. Lawrence) என்ற எழுத்தாளரின் ‘Sons and Lovers’ என்ற புத்தகத்தைக் கையில் வைத்திருந்தேன். எனது தந்தை என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, நான் இளைஞனாக இருந்த பொழுது உந்தப் புத்தகத்தை வாசிக்க எங்களுக்கு அனுமதி இருக்கவில்லை என்றார்.
அதற்கான காரணம் என்னவென்று தெரியுமா? அந்தக் காலத்தில் அப்புத்தகம் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டிருந்தது. இருப்பினும் அக்காலத்தில் இரகசியமாக அந்தப் புத்தகத்தின் சில பகுதிகளைப் பெறக்கூடியதாக விருந்தது. புத்தகத்தின் முக்கிய பகுதிகள் அகற்றப் பட்டிருந்தன. பின்னர் நீதிமன்றம் அவ்வாறான புத்தகங்களை வாசிக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால் 50 களுக்கும் 60 களுக்கும் முன்னர், கூட்டாட்சி அரசின் ஆயப்பகுதியினர் தங்களது துறைமுகங்களுக்கு யாராவது டி.எச்.லோறன்சின் நாவலைக் கொண்டு வந்தால் அதனைப் பறிமுதல் செய்தார்கள். உயர்ந்த வகையைச் சேர்ந்த புத்தகம் எது என்று ஒரு ஆயப்பகுதி அதிகாரியைக் கேட்ட பொழுது அவர் “ ஒருவர் எனக்குத் தெரியாமல் கடத்த முயலும் ஒரு கூடாத புத்தகம்” என்று பதிலளித்திருந்தார். உயர்ந்த எழுத்தாளர்கள் என்று யாரெல்லாம் கணிக்கப்பட்டார்களோ அவர்களது புத்தகங்கள் அனைத்துமே தடைசெய்யப்பட்டிருந்தன. ஹெமிங்வே (Hemingway), ஜொய்ஸ் (Joyce), வோக்னர் (Faulkner) , லோறன்ஸ் போன்ற உன்னத எழுத் தாளர்களின் ஆக்கங்கள் அனைத்துமே தடை செய்யப்பட்டிருந்தன.
திரைப்படத்துறையைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! இலத்திரனியல் வகையைச் சார்ந்தபொழுதுபோக்குகள் வரத் தொடங்கியதன் பின்னர் nickelodeons போன்ற படங்கள் வந்தன. ஆரம்பத்தில் மௌனப் படங்களும் பின்னர் பேசும் படங்களும் அறிமுகம் செய்யப்பட்டன. திரையில் எதனைக் காட்டமுடியும் என்பது தொடர்பாக ஒவ்வொரு மாநிலமும் சட்டங்களை அறிமுகப்படுத்தின. உண்மையில் இந்தச் சட்டங்களை வாசித்தால் முசுப்பாத்தியாகத் தான் இருக்கும். இந்தச் சட்டம் மேரிலாண்ட் மாநிலத்தால் இயற்றப்பட்டது: சிலேடை நகைச்சுவை விடயங்கள், இரகசியக் காதல் அல்லது காதல் உணர்வுகளை வெளிப் படுத்தும் காட்சிகள் போன்றவற்றைத் திரையில் காட்ட முடியாது என்றது அந்தச் சட்டம். விபச் சாரத்தில் வாழும் ஆண்கள், பெண்கள். மதுவைக் குடிக்கும் மற்றும் சூதாட்டக் காட்சிகள், அல்லது தாய்மை தொடர்பான காட்சிகள் இவ்வாறான காட்சிகளைத் திரையில் காட்ட அந்தச் சட்டம் அனுமதிக்கவில்லை.
மேலும் இனவெறுப்பைத் தூண்டக்கூடிய தலைப்புகள், தொழிலாளர் மற்றும் முதலாளிகள் இடையே எதிர்ப்புணர்வுள்ள உறவுகள் போன்றவை அந்தச் சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட்டிருந்தன. உண்மையில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய எல்லாமே தடைசெய்யப்பட்டது. பாலியல், வன்முறை, அரசியல் எல்லாமே தடைசெய்யப்பட்டிருந்தது. ஒரு முறை ஒரு திரைப்படத்தில் குழந்தைக்கு பாலூட்டும் காட்சி தணிக்கைசெய்யப்பட்டது. ஒரு முறை மெம்பிஸ் (Memphis) நகரத்தில், வெள்ளை, கறுப்பு ஆகிய இரு இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்கும்  ஒரு வகுப்பை ஒரு திரைப்படம் காட்டிய பொழுது, அங்குள்ள தணிக்கைக் குழு அந்தக்காட்சிக்குத் தடைவிதித்தது, அதாவது தெற்கிலுள்ள மக்களின் உணர்வுகளை அது பாதிக்கும் என்ற காரணம் சொல்லப்பட்டது. உண்மையில் அது தெற்கிலுள்ள வெள்ளை இனத்தைச் சேர்ந்த மக்களையே குறித்தது. அது உண்மையா? ஆம் அது உண்மை தான்! அர்த்தமுள்ள எந்த விடயமும் மற்றவர்களைப் பாதிக்கும். ஒரு விடயம் பார்ப்பவர்களைப் பாதிக்காது விட்டால் அது அர்த்தமற்றது என்பது தான் பொருள்.
பேச்சு சுதந்திரம் தொடர்பாக நாங்கள் இறுதியாக முன்வைக்கும் வாதம் என்னவென்றால், பாடசாலையில் நாங்கள் கதைக்க விரும்பும் விடயங்களைச் சுதந்திரமாகக் கதைக்கக்கூடியதாக இருப்பதற்குப் பேச்சுச் சுதந்திரம் தான் அடித்தளம். அமெரிக்காவின் வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பார்க்கும் போது, நீண்டகாலமாக அந்தச் சுதந்திரம் பாடசாலைகளில் இருக்கவில்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் சுதந்திரமாகப் பேசும் உரிமை முன்னர் இருக்கவில்லை. இனத்துவ நீதிப் போராட்டங்கள் தொடங்கியதன் பின்னர் தான் அவ்வாறான உரிமைகள் வழங்கப்பட்டன. 1960 களின் தொடக்கத்தில், “ஒருவர், ஒரு வாக்கு”  (One man one vote) என்ற சுலோகம் பொறித்த பட்டனை அணிந்து மாணவர்கள் பாடசாலை சென்றனர். அது உண்மையில் குடியுரிமைப் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு அமைப்பினால் முன்வைக்கப்பட்டது. அந்தச் சுலோகத்தை அணிந்து பாடசாலை சென்ற மாணவர்கள் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்கள். ‘இவ்வாறான செயற்பாடுகள் கற்றல் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்காத பட்சத்தில் அவை அனுமதிக் கப்படலாம்’ என்று பின்னர் நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது. மேரி பெத் ரிங்கரின் (Mary Beth Tinker) வழக்குக்கு அது தான் அடித்தளமாக அமைந்தது. மேரி பெத் குடும்பம் கூட குடியுரிமை இயக்கத்திலிருந்து வந்த ஒரு குடும்பம் தான். அவளது தந்தை ஒரு குடியுரிமைப் போராளியாக இருந்தார். இரு இனங்களையும் சேர்ந்தவர்களை அனுமதிக்கக்கூடிய நீச்சல் தடாகத்துக்காகப் போராடியதற்காக, ஒரு போதகரான அவர் தனது ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். கடைசியாக மேரி பெத் ரிங்கர் தான் சொல்ல விரும்பிய விடயத்தைச் சொல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அந்த முடிவு வர ஓரிரு ஆண்டுகள் தேவைப்பட்டன. பாடசாலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் தாம் பேச விரும்பிய விடயங்களைப் பேச முடியாத ஒரு காலத்திலேயே அவர்கள் வாழ்ந்தார்கள்.
விமர்சனம்மிக்க இனத்துவ கோட்பாடு (critical race theory)  தொடர்பாக ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கோட்பாடு சொல்வது என்னவென்றால் இனவேற்றுமை என்பது மேற்குலகின் ஒழுங்கமைப்பின் ஒரு பகுதியாக இருக்கிறது. ‘இந்தக் கோட்பாட்டுக்கு பாடசாலைகளில் தடைவிதிக்க வேண்டும்’ என்ற குரல்கள் அண்மைக்காலமாக எழுந்துகொண்டிருக்கின்றன. ஆட் ஸ்பீகல்மானின் மேஉஸ் (Art Spigelman – Maus) என்ற நூலைப் பாருங்கள். ரோணி மொறிசன் (Toni Morrison) எழுதிய பிலவட் (Beloved) என்ற நூலைப் பாருங்கள். இவ்வாறான விடயங்கள் சமூகத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்ற காரணத்தையே இவர்கள் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். இந்த எண்ணங்கள், இந்தப் படங்கள் எமக்குத் தீங்கு விளைவிக்கும். இது தான் அவர்கள் சொல்கின்ற காரணம். இவற்றை நாங்கள் பார்க்கக்கூடாது. இளையோர் இவற்றைப் பார்க்க நாங்கள் அனுமதிக்க முடியாது. நான் குறிப்பிட்ட தணிக்கை முயற்சிகளில் அதிகமானவை குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவை. ஆனால் இரண்டு கட்சிகளிலும் இவ்வாறான மனப்பாங்கை நிச்சயம் காணலாம்.
மாக் ற்வெய்ன் (Mark Twain) எழுதிய ஹக் வின் (Huck Finn) என்ற புத்தகமும் To Kill a Mockingbird என்ற  Harper Lee இன் புத்தகமும் அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் தடைசெய்யப்பட்ட இரண்டு புத்தகங்கள். இந்தத் தடைகள் இடதுசாரிகளிடமிருந்து தான் வந்தன. அவர்கள் சொல்லும் காரணம் ஒன்றே தான். இந்தப் புத்தகங்களில் உள்ள சொற்களும் படங்களும் வார்த்தைப் பிரயோகங்களும் எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். அவை வெறுப்புக்குரியவை. அவற்றை நாங்கள் வாசிக்க முடியாது. அவை எங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த முதல் அவற்றைத் தூக்கி எறியுங்கள். உண்மையில் பேச்சு நோவை ஏற்படுத்தக்கூடியது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கோம்ஸ் ஏன் அதனைத் தடைசெய்ய விழைந்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் பேசும் விடயத்துக்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டுமே ஒழிய ஒருவரது பேச்சை நாம் தடைசெய்யக்கூடாது.
இனத்துவேசமான ஒருவரது பேச்சை விமர்சிப்பது கூட ஒருவகை பேச்சுச் சுதந்திரம் தான். ஆனால் ஒருவர் பேசுவதற்கான சுதந்திரத்தைப் பறிப்பதிலிருந்து அது வித்தியாசமானது. அது நல்ல விடயம் அல்ல. உண்மையில் சனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கைக்கு அது கேடு விளைவிக்கிறது. எங்களை நாங்களே ஆளலாம் என்ற விடயத்தில் எங்களுக்கு நம்பிக்கை இருக்குமாயின், எல்லோரும் பேசுவதற்கு நாங்கள் அனுமதிக்க வேண்டும். எல்லோரையும் பேச அனுமதிப்பதன் ஊடாகத் தான், நீதியான ஒரு சமூகத்தை நாங்கள் கட்டியெழுப்ப முடியும். ஒருவர் தனது கருத்தைச் சொல்லும் உரிமை எப்போது பறிக்கப்படுகின்றதோ, அப்போது சுதந்திரம் அர்த்தமற்றதாகி விடுகிறது என்று பிறெடெறிக் டக்ளஸ் (Frederick Douglas) ஒருமுறை கூறினார்.
டக்ளஸ் அடிமைத் தளையினின்று விடுதலை பெற்ற ஒருவர். பல அமெரிக்கர்கள் அறிந்திராத கொடுமைகளை தனது அடிமை வாழ்க்கையில் அனுபவித்தவர். ஆனால் எமது சமூகத்தின் அநீதிகளை நாம் நீக்க வேண்டுமாயின், எமக்குள்ள பேச்சுச் சுதந்திரத்தை நாம் ஒருபோதுமே இழந்துவிட முடியாது. நீதிக்காக உரத்துக் குரல்கொடுத்த தைரியம் மிக்க ஆண்களையும் பெண்களையும் நாம் மறந்துவிட முடியாது. பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நாங்கள் எல்லோ ருமே குரல் கொடுக்க வேண்டும். எம்மைச் சுற்றி
யிருக்கும் அநீதிகளிலிருந்து எம்மை நாம் விடுவிக்க வேண்டுமாயின் பேச்சுச் சுதந்திரத்தை என்ன விலை கொடுத்தும் நாம் காப்பாற்றியாக வேண்டும். வாழ்க பேச்சுச்சுதந்திரம். மிக்க நன்றி
நன்றி: TED Talks

தமிழ்த் தேசிய அபிலாசைக்காகவா? ஆட்சி அதிகாரத்திற்காகவா? ஒன்றிணைதல் முக்கியத்துவம்! -பா. அரியநேத்திரன்

தமிழ் தேசிய பேரவைக்கும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்குமிடையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு்கடந்த  02/06/2025ம் திகதி இரு தரப்புக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதை அனைவராலும் பாராட்டப்படுகிறது.
உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப் பதற்கான பேச்சில் இலங்கை தமிழ் அரசு கட்சி எடுத்த புத்திசாதுரியமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து, தற்போது தமிழ் தேசிய பேரவை- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிகளுக்கிடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கடந்த 2024ல் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் பெற்ற செல்வாக்கின் அடிப்படையில் வடகிழக்கு தமிழ்தேசிய கட்சிகளை விழிப்படைய செய்ததன் நிமிர்த்தம் கடந்த 2025 உள்ளூராட்சி சபை தேர்தலில் சகல தமிழ்தேசிய கட்சிகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மேற்கொண்ட பிரசாரத்தால் எதிர்பார்த்த வெற்றி தேசிய மக்கள்சக்திக்கு கிடைக்கவில்லை.
இதற்கு பின்னரான ஒரு மக்களின் அழுத்த மாகவே தமிழ்தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் தேசிய பேரவையாக செயல்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைந்து புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துள்ளதை பார்க்கலாம்.
ஆனால் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி உள்ளூராட்சி சபைகளில் யாழ்பாண மாவட்டத்தில் எந்த ஒரு சபையையும் அறுதிப்பெரும்பான்மை பெறாதநிலையில் ஏற்கனவே ஜனநாய தமிழ்தேசிய கூட்டணியுடன் எந்த ஒரு பதவிகளையும் வழங் காமல் தமக்கு ஆதரவு வழங்குவார்கள் என தப்புக் கணக்கு போட்டனர்.
தமிழரசுக்கட்சி தமக்கு எந்த சபைகளிலும் தவிசாளர், பிரதி தவிசாளர் பதவிகள் வழங்க சம்மதிக்காத நிலையில் தற்போது தமிழ்தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர்.
இது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதி காரத்தை மட்டும் பெறும் ஒரு கூட்டாக இல்லாமல் கொள்கைரீதியாகதொடர்ந்து அரசியல் தீர்வுக்கான வேலைத்திட்டங்களை முன்எடுக்கும் ஒரு கூட்டாக செயல்படுவதாகவே அவர்களுடைய புரிந்துணர்வு உடன்படிக்கை உள்ளது.
தேர்தல் கூட்டுகளுக்கு அப்பால் சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் கொள்கை அளவில் இணைந்து செயல்படவேண்டும் என்பதே சகல தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.தற்போது உடன்பாடு காணப்பட்ட தமிழ்தேசிய கட்சிகளின் கூட்டுக்களை போன்று ஏற்கனவே தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்
தில் 2001, அக்டோபர்,20ல் தமிழ்தேசிய கூட்ட மைப்பு எனும் பெயரில் தமிழர் விடுதலை கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய நான்கு கட்சிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேர்தல் கூட்டாக மட்டும் ஆரம்பிக்கப்பட்டு 2001, டிசம்பர், 05ல் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 15, ஆசனங்களை பெற்றது, அந்த 15, பாராளுமன்ற உறுப்பினர்களில் 14, பேர் விடுதலைப்புலிகளை ஏகபிரதிநிதிகளாக ஏற்றனர். கிளிநொச்சியில் இருந்து தெரிவான ஆனந்தசங்கரி மட்டும் அதனை ஏற்காமல் முரண்டுபிடித்தமையால் ஏற்பட்ட முரண்பாட்டால் 2004,  பெப்ரவரியில் அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளி யேற்றப்பட்டார். அதனால் அவர் அங்கம் வகித்த தமிழர் விடுதலைக்கூட்டணியையும் நீதிமன்றில் நிறுத்தியதால் அந்த கட்சியும் அவரும் தொடர்ந்து தமிழ்தேசிய கூட்டமைப்பில் செயல்பட வில்லை ஆனந்தசங்கரிதான் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய முதலாவது கட்சியும் நபருமாகும்.
ஆனால் தமிழர் விடுதலை கூட்டணியில் இருந்த சம்பந்தன், மாவை சேனாதிராசா, ஜோசப்
பரராசசிங்கம், ரவிராஜ், போன்ற முக்கிய உறுப் பினர்கள் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியின் உறுப்பினர்களாகவும் இருந்தனர் என்ற அடிப் படையில் அவர்கள் தொடர்ந்தும் தமிழ்தேசிய கூட்டமைப்பாக செயல்பட்டனர்.
இதனால் 2004, பொதுத்தேர்தலில் தேர்தல் கட்சியாக இலங்கை தமிழ் அரசுக்கட்சியும், அதன் வீட்டுச்சின்னத்திலும் தேர்தலில் போட்டியிட விடு தலைப்புலிகளின் தலைமை கட்டளை இட்டது.
2004, ஏப்ரல், 08, பொதுத்தேர்தலில் 22, பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கில் தெரி வாகி  2010, வரை எந்த முரண் பாடுகளும் இன்றி தொடர்ந்தன.
2009, மே,18ல் முள்ளிவாய்கால் மௌனத் திற்கு பின்னர் 2010, ஜனவரி,26ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்ட மைப்பில் இருந்து இரண்டாவதாக பிழவு ஏற் பட்டது.தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர்  தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்தனர் அது 2010, ல் இருந்து இன்றுவரையும் அவர்கள் சைக்கிள் சின்னத்தில் தேர்தல் அரசியலை தொடர்கின்றனர்.
2011,யூலை,22ல் வடமாகாண உள்ளூராட்சி சபைகளின் தேர்தலில்தான் தமிழ் மக்கள் விடுதலை கழகம் (புளட்) தர்மலிங்கம் சித்தாத்தன் கட்சியும், மீண்டும் தமிழர் விடுதலை கூட்டணி ஆனந்தசங்கரியும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் இணைந்தனர். ஆனால் 2013, செப்டம்பர், 21ல் வடமாகாண சபை தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஆனந்தசங்கரி போட்டியிட்டு தோல்வியடைந்து அதனோடு மீண்டும் தமிழ்தேசிய கூட்டமைப்பில் செயல்படவில்லை.
2011, தொடக்கம் 2020, வரை தமிழ்தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி, ரெலோ, ஈபிஆர்எல்எவ், புளட் ஆகிய நான்கு கட்சிகளும் சேர்ந்து இயங்கின. 2020, ஆகஷ்ட்,20ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஈபிஆர்எல்எவ் சுரேஷ் பிரமச்சந்திரன் கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகியது.
எஞ்சிய தமிழரசுகட்சி, ரெலோ, புளட் 2020, தேர்தலில் போட்டியிட்டு 10, பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவானார்கள். 2023ல் உள்ளூராட்சி சபை தேர்தல் அறி விப்பு வந்தபோது தமிழரசுக்கட்சி மத்தியகுழு தேர்தல் முறையினை காரணம் காட்டி தனித் தனியாக போட்டியிட்டு சபை ஆட்சிகளை சேர்ந்து அமைக்கலாம் என்ற முடிவை எடுத்தபோது அதனை ஏற்காமல் புளட், ரெலோ வெளியேறி ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி என்ற பெயரில்  ஈபிஆர்எல்எவ்வும் உள்வாங்கி இயங்குகின்றனர்.
தமிழ்த்தேசிய கட்சிகள் கடந்த காலங்க ளில் இவ்வாறுதான் தேர்தல் காலங்களில் ஒற்று மையின்றி வேற்றுமையாக செயல்பட்டன.இந்த வேற்றுமையின் பிரதிபலிப்பு 2024, பொதுத்தேர்தலிலும், 2025, உள்ளுராட்சி சபை தேர்தல்களிலும் கற்றுத்தந்த பாடங்கள்தான் தற்போதைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசியமக்கள்முன்னணி, மற்றும் அவர்களுடன் இணைந்த தமிழ்தேசிய பேரவை என்பன ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணியுடன் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கடந்த 02/06/2024ல் ஏற்படக்காரணமாகியுள்ளது.
இனியும் பிரிவுகள், பிழவுகள் ஏற்படாமல் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியும் இவர்களுடன் இணைந்து ஒரு குரலில் தமிழ்த்தேசிய அரசியலை சர்வதேசரீதியாக செயல்பட வேண்டும் என்பதே உலகத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் எல்லோரின் எதிர்பார்ப்பு.
ஆனால் சபைகளை கைப்பற்றும் பதவிக்காக தமிழரசுக்கட்சி ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் பேசுவது அரசியல் கொள்கையா? ஆட்சிக்கொள்கையா? என்பது சிந்திக்கவேண்டியது, பிள்ளையானைப்போன்ற ஒருவராகவே தமிழ்தேசிய அரசியல் பரப்பில் உள்ளவர் டக்ளஸ் என்பதை மறுதலிக்கமுடியாது.
ஆட்சி அதிகாரங்களுக்காக பழையவைகளை மறக்கும் காலமாக தமிழ்தேசிய அரசியல் உள்ளது. அதில் ஒன்றாக தமிழர் விடுதலை கூட்டணியில் தமிழரசுக்கட்சிக்காறர்கள் எல்லோரும் வாருங்கள் தமது கட்சியை அப்படியே தருகிறோம் என கடந்த வாரம் ஆனந்தசங்கரி கூறியதையும் நோக்க வேண்டும்.

தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்த படகுகளை கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் திட்டம்: அமைச்சர் சந்திரசேகரன்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைப்பற்றப்பட்ட இந்திய மீன்பிடி படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் எடுத்து வருகின்றது என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சர்வதேச ஊடகமான பிபிசி தமிழுக்கு தெரிவித்த்துள்ளார்.

மேலும் அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்த்துள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 123ற்கும் அதிகமான படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கைகளின் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைப்பற்றப்பட்ட படகுகள் இருவேறு பகுதிகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்திய படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் உள்ளுர் மீனவர்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், குறித்த படகுகளை கடலில் மூழ்கடிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் குறிப்பிடுகின்றார்.

இந்தியாவில் இந்த படகுகள் பதிவு செய்யப்பட்டுள்ளமையினால், இந்த படகுகளை உள்ளுர் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த முடியாது என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அத்துடன், அரசுடமையாக்கப்பட்டுள்ள இந்த படகுகளை உரிமையாளர்களிடம் கையளிக்க முடியாது என கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக ட்ரம்ப் நடவடிக்கை: தீவிரமடையும் போராட்டம்

லாஸ் ஏஞ்சல்ஸில் (Los Angeles) குடியேற்ற சோதனைக்கு எதிரான கலவரத்தை ஒடுக்க அமெரிக்க அதிபர்  ட்ரம்ப் தேசிய இராணுவத்தை நிறுத்தியதைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக போராட்டம் தீவிரமடைந்தது.  வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து, ஒரு பெரிய நெடுஞ்சாலையை போராட்டக்காரர்கள் மூடியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. எனினும், அமெரிக்க காவல் துறையின் நடவடிக்கையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகின்றது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கு எதிராக அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்படி, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பல்வேறு இடங்களில் குடியேற்றம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த 6-ம் திகதி சோதனை நடத்தினர். இதில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து  இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் போராட்டக்காரர்களுக்கும் எல்லை  சுற்றுக்காவல் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையில் முடிந்தது. இதையடுத்து, போராட்டத்தை மாகாண அரசு ஒடுக்கவில்லை என குற்றம் சாட்டிய அதிபர்   ட்ரம்ப், சுமார் 2,000 இராணுவ வீரர்களை (தேசிய படையினர்) போராட்டத்தை ஒடுக்கும் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “கலிபோர்னியா மாகாண ஆளுநர் கவின் நியூஸ்கம் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் கரென் பாஸ் ஆகியோருக்கு போராட்டத்தை ஒடுக்கும் திறன் இல்லை. பிறரின் தூண்டுதலின் பேரிலும் பணம் வாங்கிக் கொண்டும் நடைபெறும் போராட்டங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் முகக் கவசம் அணிய தடை விதிக்கப்படுகிறது” என கூறியுள்ளார்.

போராட்டத்தை ஒடுக்க இராணுவத்தை ஈடுபடுத்தியதற்கு கலிபோர்னியா ஆளுநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என குற்றம் சாட்டினார். மேலும் அவருடைய நடவடிக்கை மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

இலங்கையில் இருந்து 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தனுஷ்கோடிக்கு அகதிகளாக  தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இலங்கையில் உள்ள கண்டி மாவட்டம், கம்பளை பகுதியைச் சேர்ந்த முகம்மது கியாஸ் (43), மனைவி பாத்திமா பர்ஹானா (34) இவர்களின் குழந்தைகள் முகம்மது யஹ்யா (12), அலிஷா (4), அமிரா (4) ஆகிய 5 பேர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியில் இன்று (ஜூன் 9) அதிகாலை  சென்றடைந்துள்ளனர்.

இந்த 5 பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், முகம்மது கியாஸ் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அங்கு பலரிடம் கடன் பெற்று திருப்பி கொடுக்க முடியாததால் வாழ வழியின்றி தமிழகத்துக்கு குடும்பத்தோடு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளார்.

விசாரணைக்கு பின்னர், 5 இலங்கை தமிழர்களும் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு  சென்ற அகதிகளின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது.

சிஐடியில் ஆஜராகவுள்ளார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் புதன்கிழமை (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தரமற்ற  தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார்.

யாழ். மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி நம்பிக்கை

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சிசபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது என்றும் அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம் என்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ். காங்கேசன்துறையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ‘தற்போது பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் தீர்மானம் மிக்க சக்தியாக தேசிய மக்கள் சக்தி உள்ளது’.

‘ஆட்சியமைப்பது தொடர்பில் பல்வேறு தரப்புகள் எங்களோடு உரையாடுகின்றார்கள்’. ‘இதுவரைகாலமும் எங்களுக்கு எதிராக ஓரணியில் திரண்டு தூற்றியவர்கள் இன்று எங்களைக் காதலுடன் பார்க்கின்றார்கள்’ என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

‘யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உருவாக்கப்படவுள்ள எந்தவொரு உள்ளூராட்சி சபை நிர்வாகங்களுக்கும் இடையூறாக நாங்கள் இருக்கமாட்டோம்’. ‘கடந்த காலங்களில் எங்களைத் தூற்றி இனவாத ரீதியாக தங்களின் இருப்பைத் தக்கவைத்துக்கொண்ட எந்தவொரு அணியுடனும் சேரப்போவதில்லை’ என்றும் அவர் கூறியுள்ளார்.

‘யாழ். மாவட்டத்தின் ஒரு சில உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பதற்கான சூழல் ஏற்பட்டிருக்கின்றது. அதற்கான முயற்சிகளை நாங்கள் கண்டிப்பாக மேற்கொள்வோம்’ என்று கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவிற்கு பல்வேறு கோரிக்கைகள்!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள குழுவிற்கு பல்வேறு தரப்பினர் தங்கள் சமர்ப்பிப்புகளை அனுப்பியுள்ளனர்.

இதன்மூலம் தற்போதுள்ள ‘கொடூரமான’ பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். சிறை கைதிகளிடமிருந்தும் பல சமர்ப்பிப்புகள் பெறப்பட்டதாக நீதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அடுத்த கட்ட சமர்ப்பிப்புகளை மதிப்பாய்வு செய்தல் உட்பட இந்த பணிகளை நிறைவு செய்ய இரண்டு முதல் மூன்று மாதங்கள் வரை ஆகலாம். அதே நேரம் பதிய சட்டத்துக்கு சில வரையறை காணப்பட வேண்டும், கடந்த காலங்களை போன்று அமைதி போராட்டங்களை கட்டுப்படுத்த அந்த சட்டத்துக்கு இடமளிக்க கூடாது போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டம் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்க வேண்டும் என்று சில தரப்பு வலியுறுத்தியுள்ளது.எனினும் மாற்றீடாக வேறு சட்டம் கொண்டு வரப்பட கூடாது என்றும் கோரப்பட்டுள்ளது.

இருப்பினும் பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக மாற்று சட்டம் ஒன்று கொண்டு வரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் மோசடி : சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பணியிடை நீக்கம்

சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம் செய்ய இன்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நிதி மோசடிக்காக அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் சிறைதண்டனை விதிக்கப்பட்ட ஒருவரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்தமை தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் மோசடியாக ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவித்தமை தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

அநுராதபுரம் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதி மே 12 ஆம் திகதி வெசாக் நாளில் விடுவிக்கப்பட்டதாக அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள் எழுத்துப்பூர்வ அறிக்கையில் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

பிரதிவாதியை விடுவிப்பதற்கான முடிவு தொடர்பான செய்திகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, சிறைச்சாலைகள் திணைக்களம் இந்த விடயத்தை தெளிவுபடுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
மேலும் இந்த பொது மன்னிப்பு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்றும், பொதுவாக கைதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தது.

இருப்பினும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதற்கு நேர்மாறான அறிக்கையை வெளியிட்டது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தால் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்ட பொது மன்னிப்புக்கு தகுதியான கைதிகளின் பட்டியலில் 388 பெயர்கள் இருந்தன என்றும், அனுராதபுரம் சிறைச்சாலையில் நடந்த நிதி மோசடி தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட நபரின் பெயர் அந்தப் பட்டியலில் எங்கும் சேர்க்கப்படவில்லை என்றும் கூறியது.

பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியது,
இதன் விளைவாக, அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் நேற்று (08) கைது செய்யப்பட்டார்.
மேலும், சம்பவம் தொடர்பாக வாக்குமூலங்களை வழங்க சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இரண்டு முறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டார்.

இதற்கிடையில், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் நேற்று ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டிருந்தது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி, இந்த பொது மன்னிப்பை பயன்படுத்தி பல கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.