Home Blog Page 107

கச்சதீவை எக்காரணத்துக்காகவும் இந்தியாவிடம் மீள வழங்க முடியாது – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

இராஜதந்திர ரீதியிலும் சட்ட ரீதியாகவும் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்ச தீவு எக்காரணத்துக்காகவும் இந்தியாவிடம் மீள கையளிக்கக்கப்பட மாட்டாது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் ஏற்படுத்தும் அழிவினால் எதிர்காலத்தில் பாரிய பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சில் சனிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியாவில் தேர்தல் அண்மிக்கும் போது குறிப்பாக தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கைகளிலெடுக்கும் முதலாவது ஆயுதம் கச்சதீவாகும். கச்சதீவினை இலங்கைக்கு வழங்கியது தவறு என்றும், அதனை நாம் மீளப் பெற்றுக் கொள்வோம் என்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுவது வழமையான ஒன்றாகும்.

இது அவர்கள் தமது வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் உத்தியாகும். இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரும் இவ்விடயம் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது தவறு என்றும், அந்த சந்தர்ப்பத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாகவே இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்திய மீனவர்களின் ஆழ்கடல் மீன்பிடி நடவடிக்கைளால் எமது மீன்வளம் மாத்திரமின்றி முழுக்கடல் வளமும் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். இந்த அழிவு தொடருமானால் வரும் 15 – 20 ஆண்டுகளில் இலங்கையின் கடல் பாலைவனமாகும் அபாயத்தை தவிர்க்க முடியாது. தமிழ்நாட்;டு அரசியல்வாதிகளின் சதித்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என ஜெய்ஷங்கரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

சர்வதேச சட்டத்துக்கமைய சட்ட ரீதியாக ஜனநாயகமான முறையிலேயே நாம் கச்சதீவினைப் பெற்றுக் கொண்டோம். எனவே அதனை மீண்டும் வேறு எவரும் கையகப்படுத்துவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. நாம் இது குறித்து இந்திய மத்திய அரசாங்கத்திடமும், தமிழ்நாட்டு அரசாங்கத்திடமும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கின்றோம். எனவே இந்த பிரச்சினை தொடர்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்றார்.

இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்க இரகசிய நடவடிக்கை: மெதகொட அபேதிஸ்ஸ தேரர்

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர்  மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 ராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியா  குறிப்பிடுகிறது. இந்து பிராமண சூழலில் பௌத்த மதம் பாதுகாக்கப்படாது. இதனால் தான். இந்தியாவில் பௌத்த மதம் இல்லாதொழிந்தது. இவ்வாறான நிலை இலங்கையில் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் நட்பு நாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஊடாக தமது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்திக் கொள்ளவே இந்தியா முயற்சிக்கும்.

திருகோணமலை துறைமுகம் பற்றி தற்போது எவரும் கவனம் செலுத்துவதில்லை. திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்தியா பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.இந்த செயற்திட்ட வலயத்துக்குள் புராதன கோயில்கள் மற்றும் பௌத்த விகாரைகள் உள்ளன.

இலங்கை – இந்திய ஒப்பந்தம் இந்திய ஆட்சியாளர்களால் பலவந்தமான முறையில் இலங்கைக்கு திணிக்கப்பட்டது.இந்த ஒப்பந்தத்தால் பல விளைவுகள் ஏற்பட்டன.நீதிமன்ற உத்தரவினால் தான் இந்த ஒப்பந்தம் இன்றும் இழுபறிநிலையில் உள்ளது.இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை செயற்படுத்துமாறு இந்தியா இன்றும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கிறது.

இந்தியாவுடன் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் எதிர்காலத்துக்கும் தாக்கம் செலுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.இந்தியாவுடன் அண்மையில் பாதுகாப்பு, வலுசக்தி மற்றும் டிஜிட்டல் துறை தொடர்பில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்களின் உள்ளடக்கத்தை அரசாங்கம் இதுவரையில் பகிரங்கப்படுத்வில்லை.

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தத்தில் இலங்கை இராணுவத்தை இரண்டாம் நிலையாக்கும் வகையில் பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.கனடா, பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பை இலங்கை இராணுவத்தினர் இல்லாதொழித்தார்கள். மகாநாயக்க தேரர்கள் மற்றும் இராணுவத்தினர் இலங்கையின் காவல் தெய்வங்கள் என்பதை ஆட்சியாளர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

வலுசக்தி தொடர்பில் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் இலங்கையில் சுயாதீனம் மற்றும் இறையான்மையை பாதிக்கும் வகையில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பங்களாதேஷ் நாட்டின் வலுசக்தியை இயக்கும் அதிகாரம் இந்தியாவிடம் உள்ளது. ஆகவே வலுசக்தி துறையின் இறையாண்மையை இந்தியாவிடம் விட்டுக்கொடுத்து நாட்டைக் காட்டிக்கொடுக்க முடியாது.இந்தியாவுடன் இந்த அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களுக்கு நாட்டு மக்கள் அனுமதியளிக்கவில்லை.மக்கள் விடுதலை முன்னணி தான் அனுமதியளித்துள்ளது.

சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக  இலங்கையில் 21 இராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியாகுறிப்பிடுகிறது. இந்து பிராமண சூழலில் பௌத்த மதம் பாதுகாக்கப்படாது. இதனால் தான் இந்தியாவில் பௌத்த மதம் இல்லாதொழிந்தது.இந்நிலைமை இலங்கையில் ஏற்பட இடமளிக்க முடியாது.

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால்  ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும். ஆகவே ஆட்சியாளர்கள் தாம் தற்காலிக உரிமையாளர்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டும்.

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கருத்து தங்களுக்கு ‘இடி விழுந்தது போல்’ இருப்பதாக காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கவலை

தாம் கலப்புப்பொறிமுறை கூட வேண்டாம் என வலியுறுத்திவரும் நிலையில், சர்வதேச தரத்துக்கு அமைய உள்ளகப்பொறிமுறையைப் பலப்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் கூறியிருப்பது ‘எமது துன்பத்தைக் கடவுளிடம் முறையிடுவதற்காகக் கோயிலுக்குச் சென்ற வேளையில், கோயிலுக்குள் வைத்து இடி விழுந்தது போல’ இருப்பதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

அவர் இவ்வாறு கூறினாலும், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளிவரும் உயர்ஸ்தானிகரின் அறிக்கை மிகக் காத்திரமானதாக அமையக்கூடும் என்ற நப்பாசை தம்மத்தியில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்  வோல்கர் டக்ர், கொழும்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர், பிரதம நீதியரசர், பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை நடாத்தியிருந்தார்.

திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு விஜயம் செய்து, அங்கும் பலதரப்பட்ட குழுக்களையும் அவர் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். அதுமாத்திரமன்றி செம்மணி மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்ட உயர்ஸ்தானிகர், அவரது விஜயத்தின் நிறைவு நாளன்று கொழும்பில் நடாத்திய ஊடக சந்திப்பில், சர்வதேசத்தின் ஆதரவுடன் உள்ளகப்பொறிமுறையை வலுப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் உயர்ஸ்தானிகரின் விஜயம் மற்றும் அவரது வலியுறுத்தல்கள் என்பன தொடர்பில் கருத்துரைத்துள்ள வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா, தாம் யாழ்ப்பாணத்தில் உயர்ஸ்தானிகரைச் சந்தித்துக் கலந்துரையாடிய போது, தங்களின் கோரிக்கைகளையும் உயர்ஸ்தானிகர் புரிந்துகொண்டிருப்பார் என நம்பியதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் உள்ளகப்பொறிமுறை தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்தைப் பார்க்கும்போது, தமது நம்பிக்கை தவறு என்ற எண்ணம் ஏற்படுவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களவர்கள் வாழாத பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்படுகின்றன. இவ்விடயத்தில் முன்னைய அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய அரசாங்கத்தின் போக்கு இன்னமும் மோசமானதாக இருக்கின்றது’.

அதனைப் பார்க்கும்போது தமிழர்களின் அடையாளங்கள் மிகவேகமாக அழிக்கப்பட்டுவிடும் என்றே தோன்றுகின்றது. இருப்பினும் போராட்டக்குழுவாக இருந்த மக்கள் விடுதலை முன்னணியின் உண்மையான போக்கினை உயர்ஸ்தானிகர் வொல்கர் ரெக் புரிந்துகொள்ளவில்லை போல் தெரிகிறது’ என்றும் லீலாதேவி ஆனந்தநடராஜா குறிப்பிட்டார்.

மேலும் தாம் கலப்புப்பொறிமுறை கூட வேண்டாம் என்றும், சர்வதேசப் பொறிமுறையே வேண்டும் என்றும் வலியுறுத்திவரும் நிலையில், சர்வதேச தரத்துக்கு அமைய உள்ளகப்பொறிமுறையைப் பலப்படுத்தவேண்டும் என உயர்ஸ்தானிகர் கூறியிருப்பது ‘எமது துன்பத்தைக் கடவுளிடம் முறையிடுவதற்காகக் கோயிலுக்குச் சென்ற வேளையில், கோயிலுக்குள் வைத்து இடி விழுந்தது போல’ இருப்பதாகவும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.

உரிமை கோரப்படாத காணிகளை மீண்டும் அரசுடமையாக்கும் வகையிலேயே புதிய வர்த்தமானி வெளியீடு : சுமந்திரன்

காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக் கூடிய வகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,941 ஏக்கர் காணிகளை 3 மாதகாலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவற்றை அரச காணிகளாகப் பிரகடனப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் (27) இரவு வெளியிடப்பட்ட 2443 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
‘வர்த்தமானியில் உள்ளடக்கப்பட்டுள்ள வரைபடப் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளையும், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்குப் போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதையும் கருத்திற்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத் தீர்மானத்துக்கு அமைவாக மார்ச் 28ஆம் திகதியிடப்பட்ட 2430 எனும் இலக்க வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படுகிறது’ என நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் காணிகளைக் கையகப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச்செய்யப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் எனினும், அவ்வர்த்தமானி அறிவித்தலை மீண்டும் வெளியிடக்கூடியவகையில் பொறிவைத்தே அரசாங்கத்தினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் காணி உரித்தாளர்களுக்கு போதுமான சந்தர்ப்பத்தை வழங்குவதைக் கருத்திற்கொண்டு அவ்வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்வதற்கான கொள்கைத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருப்பதானது, மீண்டும் இவ்வாறானதொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவதற்கான சாத்தியப்பாடு உண்டு என்பதையே காண்பிக்கிறது என சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்கீழ் இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்படுவதைத் தாம் முழுமையாக எதிர்ப்பதாகவும், ஆகவே எதிர்வருங்காலத்தில் அரசாங்கம் மீண்டும் இத்தகைய வர்த்தமானியை வெளியிடக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் உள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை பாதுகாப்பதற்கான பரிந்துரைகள் முன்வைப்பு

நாட்டிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கு, அவர்களது உரிமைகள் தொடர்பில் தேசிய ரீதியில் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முன்னெடுக்கவேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அகதிகள், புகலிடக்கோரிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகத்தின் அதிகாரிகள் மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய முக்கிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களின் உண்மையான நிலைவரத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளல், அவர்களது பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதிப்படுத்துவதற்கான முன்னேற்றகரமான வழிமுறைகள் குறித்து ஆராய்தல், அவர்கள் சார்ந்து தற்போது நிலவும் சவால்களுக்கான நிலையானதும் யதார்த்தபூர்வமானதுமான தீர்வுகளை அடையாளங்காணல் என்பனவே இச்சந்திப்பின் பிரதான நோக்கங்களாகும்.

இச்சந்திப்பில் இலங்கையிலுள்ள அகதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயன்முறையை மேலும் வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு ஆணைக்குழுவினால் பிரதானமாக 4 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

1951ஆம் ஆண்டு அகதிகள் பிரகடனத்தையும் 1967ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அதன் கூறுகளையும் ஏற்று அங்கீகரித்தல், புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளின் உரிமைகள், பாதுகாப்பு உள்ளிட்ட சகல விடயங்கள் தொடர்பிலும் பரந்துபட்ட கொள்கையை வகுத்தல், அகதிகள் மற்றும் அவர்களது உரிமைகள் தொடர்பில் சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அகதிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை இலக்காகக்கொண்டு செயலாற்றிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களைப் பாதுகாத்தல் என்பனவே அப்பரிந்துரைகளாகும்.

பரிசோதனைகளுக்காக செம்மணி மனித புதைகுழியில் மண் மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக தகவல்

செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் (29) வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதேநேரம், புதைகுழியில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன
இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் (29) முன்னெடுக்கப்பட்டன.

இன்றைய அகழ்வு பணிகளின் போது மேலும் ,  மனித சில எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்புகூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், மீண்டும் நாளைய தினம் (30) அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

யாழ்.செம்மணி புதைகுழி – சர்வதேச விசாரணையை கோரும் கனேடிய எம்.பி விஜய் தணிகாசலம்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் செம்மணி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிப்பதாக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க், யாழ்ப்பாணத்திலுள்ள செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழியைச் சென்று பார்வையிட்டிருந்தார்.

செம்மணி மனிதப்புதைகுழியானது கடந்தகாலக் காயங்கள் மக்கள் மத்தியில் இன்னமும் ஆறாமல் இருப்பதை உணர்த்துவதாகவும், அம்மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்களிப்புடன் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை வெளிப்படுத்தப்படவேண்டும் எனவும் உயர்ஸ்தானிகர் வலியுறுத்ததியிருந்தார்.

அதேவேளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின்போது குழந்தை உட்பட 3 மனித சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் கனடாவின் ஒன்ராரியோ மாகாணப் பாராளுமன் உறுப்பினர் விஜய் தணிகாசலம்,

ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் ஸ்காபரோ-ரக்பார்க் பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் என்ற ரீதியில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான வலியுறுத்தலை தானும் மீளவலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ‘உயர்ஸ்தானிகரின் செம்மணி மனிதப்புதைகுழி விஜயமானது தமிழினப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காலப்பகுதியில் பதிவான மிகமோசமான மீறல் சம்பவங்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற, சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்படவேண்டியதன் உடனடித் தேவைப்பாட்டைக் காண்பிக்கின்றது’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரி கொண்டுவரப்பட்ட பிரேரணை செங்கலடி பிரதேச சபையில் நிறைவேற்றம்

யாழ். செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடாத்துமாறு கோரி கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் முதலாவது அமர்வில் எந்தவித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கன்னி அமர்வு கடந்த 26 ம் திகதி நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தவிசாளர் முத்துப்பிள்ளை முரளிதரன் தலைமையில் நடைபெற்ற மேற்படி அமர்வின் போது தமிழரசுக் கட்சியின் உப தவிசாளர் சர்வானந்தன் அவர்கள் விசேட பிரேரணை ஒன்றை கொண்டு வந்திருந்தார்.

அதாவது யாழ் செம்மணி புதைகுழியில் தற்போது வரை பல மனித எலும்புக் கூடுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் குறித்த எழும்புக் கூடுகள் யாருடையது? எந்த காலத்திற்குரியது என்பதை கண்டுபிடிப்பதற்கு சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்த வேண்டியது அவசியமாகும்.

தற்போது வடகிழக்கில் செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட செம்மணி புதைகுழி குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணையை இந்த சபையில் நிறைவேற்றி அதனை இலங்கை அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமை ஆணையாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

மூவின மக்களின் பிரதிநிநிகளை கொண்ட ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்தி, கிழக்கு தமிழர் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி, மற்றும் சுயேட்சை குழுக்கள் என தமிழ், முஸ்லீம், சிங்களம் உட்பட 32 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் மேற்படி பிரேரணை எந்த வித எதிர்ப்பும் இன்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன் படி வடகிழக்கில் தமிழரசுக் கட்சியின் ஆட்சியமைத்துள்ள உள்ளூராட்சி சபைகளில் செம்மணி குறித்து நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானமாக இத் தீர்மானம் கருதப்படுகிறது. இதன் மூலம் இலங்கையின் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட அரச கட்டமைப்பு ஒன்றின் ஊடாக  செம்மணி புதைகுழிக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு தப்பிச் சென்ற மூன்று இலங்கையர்கள் தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காவது மணல் திட்டில் வைத்து இந்திய கடலோர  காவல் படையினரால் கைது செய்யப்பட்டு   காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை (27)  இருந்து தனுஷ்கோடி முதல் சர்வதேச கடல் எல்லை வரை உள்ள மணல் திட்டு பகுதிகளில் இந்திய கடலோர படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து படகில் இந்திய கடலோர பொலிஸ் படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போதுதனுஷ்கோடிக்கு அருகிலுள்ள நான்காம் மணல் திட்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற மூன்று பேரையும் சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து கொடுப்பனவு அட்டை, கடன் அட்டை மற்றும் இலங்கை பணம் 46,000 உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.

இதன்போது சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர் சந்தேக நபர்களை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு அழைத்து வந்து  காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 34,43 மற்றும் 33 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மூவரும் தமிழகத்திற்குள் சென்ற பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாக காவல்   விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வழிபட மீண்டும் தடை

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட  இராணுவத்தினர் நேற்று வெள்ளிக்கிழமை (27) அனுமதி வழங்கியுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை (28) மீள ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.

கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , இதுவரை காலமும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ,விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக வெள்ளிக்கிழமை (27) முதல் மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் சனிக்கிழமை (28) ஆலயத்திற்கு செல்லும் பிரத்தியோக பாதையை இராணுவத்தினர் மூடி முட்கம்பி வேலி அமைத்திருந்ததுடன், இரு இராணுவத்தினர் கடமையிலும் ஈடுபடுத்தபட்டிருந்தனர்.

ஆலயத்திற்கு சனிக்கிழமை வழிபட சென்ற மக்கள், இராணுவத்தினர் அனுமதிக்காததால் முட்கம்பி முன்பாக தேங்காய் உடைத்து கற்பூரம் கொளுத்தி பூப்போட்டு வழிப்பட்டனர்.