யாழ்ப்பாணத்துக்கு அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளதாக பலரும் குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 14 ஆயிரத்து 459 வீடுகள் தெரிவு செய்யப்பட்டு தலா 25,000 ரூபாய் வீதம் மொத்தமாக 36 கோடியே 14 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த எண்ணிக்கை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வெளியிட்டு வரும் நிலையில் இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் யாழ்ப்பாணத்தில் 59 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்ட நிலையில் இப்போது 8 முகாம்களில் மக்கள் தங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் 8.48 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல். கிளிநொச்சியில் மொத்த சனத்தொகையில் 20.8 வீதமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் ஒரே விதமாக ஜனாதிபதி சேவை செய்கின்றார்.
அனைத்துப் பிரதேசங்களுக்கும் ஜனாதிபதி சமமாக நிதி ஒதுக்கியுள்ளார். நாங்கள் மக்களின் பணத்தை ஒரு சதத்தையேனும் வீண்விரயமாக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.



