கனடாவில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக லிபரல் கட்சி ஆட்சி 2025 பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதமர் மார்க் கானி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கு ‘இலக்கு ஆசிரியர் குழுமம்’ இலங்கைத் தீவுக்கு வெளியே அதிக அளவான ஈழத்தமிழர்கள் வாழும் கனடாவின் பிரதமர் என்ற உரிமையுடன் தனது வாழ்த்தைத் தெரிவிப்பதில் பெருமையடைகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கொன்சர்வேடிவ் கட்சியே லிபரல் கட்சியை விட 20 வீதம் அதிக வாக்குப் பலம் கொண்டு திகழ்வதாகவும் தேர்தல் இடம்பெற்றால் அவர்களே வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் கருத்துக் கணிப்புக்களாக இருந்தன. ஆனால் முன்னாள் கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் திடீர் பதவிவிலகலை அடுத்து மார்ச் மாதத்தில் கனடாவின் லிபரல் கட்சியின் தலைவராகவும் கனடாவின் பிரதமராகவும் பதவியேற்ற மார்க் கானி திடீரென கனடாவின் பொதுத்தேர்தலை அறிவித்து தனது அரசாங்கத்தை உறுதியுள்ள அரசாங்கமாக நிலைப்படுத்தக் கொன்சேர்வேடிவ் கட்சியுடன் பலமான தேர்தல் போட்டியை எதிர் கொண்டார்.
ஆயினும் அமெரிக்க அரசத்தலைவர் ட்ரம்ப் அவர்களின் கனடாவை அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாற்றும் நோக்கு கனடியர்களுக்கு தாயகப் பற்றாக எழுச்சியுற்றது. மார்க் கானி கனடாவை அமெரிக்கா தனதாக்க அனுமதிக்காது கனடாவைப் பலப்படுத்த லிபரல் கட்சிக்கு வாக்களியுங்கள். லிபரலின் வெற்றி கனடாவை உடைக்கும் ட்ரம்பின் திட்டத்தை உடைக்கும் என்று விடுத்த வேண்கோளுக்கு பெருமளவு மக்கள் செவிசாய்த்துள்ளதைக் கனடாவின் 2025 ம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் 343 தொகுதிகளில் 169 தொகுதிகளில் எப்ரல் 28 இல் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளமை உலகுக்குத் தெளிவாக்கியுள்ளது. அளிக்கப்பட்ட வாக்குகளில் 43.7 வீத வாக்குகளை பெற்று 4வது தடவையாக லிபரல் கட்சி பிரதமர் மார்க் கானி தலைமையில் ஆட்சி அமைக்கின்றது. ஆட்சி அமைப்பதற்கான 172 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 உறுப்பினர்களே குறைவான நிலையில் அதற்கான சிறிய கூட்டு ஒன்றை மற்றைய கட்சிகளுடனோ அல்லது உறுப்பினர்களுடனோ ஏற்படுத்துவது மூலம் ஆட்சி அமைக்கும் ஆற்றல் உடையதாக லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 2021க்குப் பின்னர் லிபரல் கட்சி 11.1 வீத வாக்காளர் அதிகரிப்பை பெற்றுள்ளமைக்கு ட்ரம்பினை எதிர்ப்பதற்கான மக்களின் தேசப்பற்றே காரணமாகியுள்ளதென ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு நாட்டின் மக்களுடைய தலையாய கடமை தங்கள் நாட்டின் இறைமையைப் பேணுதலே என்கின்ற செய்தியை கனடா மக்கள் உலகுக்கு மிகத்தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஈழத்தமிழர் தாயகத்துக்கு வெளியே அதிக அளவாக வாழும் நாடான கனடாவின் மக்களின் தாயகப்பற்றுடனான இந்த உள்ள உறுதி ஒவ்வொரு ஈழத்தமிழருக்கும் ஒரு சிறப்புச் செய்தியை அளிக்கிறது. ஈழத்தமிழர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாகத் தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் தங்களின் வரலாற்றுத் தாயகமான யாழ்ப்பாண அரசினதும் வன்னியரசினதும நிலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் நிலத்தின் இறைமையையையும் கனடிய மக்களைப் போன்றே, தங்களை உறுதியின் உறைவிடமாக்கி தாயகத்தின் ஒரு மண்துகள் கூட இழக்கப்படாது பேணவேண்டும் என்பதே அந்தச் செய்தி.
அத்துடன் கனடாவின் பிரதமர் மார்க் கானி அவர்கள் தன்னுடைய தேர்தல் வெற்றிச் செய்தியில் “டொனால்ட் ட்ரம்ப் கனடியர்களான எங்களை உடைக்க முயல்கிறார். அமெரிக்காவினுடையதாக மாற்ற முயல்கிறார். அதனை ஒரு பொழுதும் அனுமதிக்கவே மாட்டோம்” என்றார். இதுதான் மக்களின் இந்தத் தேர்தல் முடிபு என ஆணித்தரமாக
எடுத்துரைத்தார். இந்த அரசியல் நேர்மை உறுதி ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஒவ்வொருவருக்கும் வர வேண்டும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணம். இதனை ஈழத்தமிழர்கள் தங்கள் அரசியல்வாதிகளுடன் நேரடியாக இது குறித்த அழுத்தங்களைக் கொடுத்தே அவர்களை இவ்விடயத்தில் முறைமையாகச் செயற்பட வைக்க வேண்டும். ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் “இந்த மண் எங்களின் சொந்த மண்” என வெளிப்படையாகப் பேசமறுப்பதே ‘பிரிவினை கேட்கிறார்கள் ஈழத்தமிழர்கள்’ என்ற அரசியல் பரப்புரை உலகை வலம்வரக் காரணமாக உள்ளது. இதுவே தேசிய பாதுகாப்புக்கு என்ற பெயரில் சிறிலங்கா ஈழத்தமிழரை இனஅழிப்பு செய்ததற்கு அனைத்துலக சட்டத்தில் இருந்து தான் தப்புவதற்கு உபயோகப்படுத்தும் மூலகாரணமாகவும் உள்ளது.
இருபது வருடங்களாக ஒன்ராறியோவின் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து இருந்து வந்த கொன்சர் வேடிவ்கட்சியின் தலைவர் பியர் பொலியவ் (Pierre Poilievre) அவருடைய சொந்தத் தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றார். லிபரல் கட்சியைச் சேர்ந்த புருஸ் பான்ஜோய் 51 வீத வாக்குகளைப்பெற்று கடந்த தேர்தலை விட 19 வீத அதிகரிப்பைப்பெற பியர் பொலியவ் கடந்த முறையை விட 6 வீதம் குறைவான வாக்குகளைப் பெற்று 41 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆயினும் கொன்சர்வேடிவ் கட்சி 41.3 வீதமான வாக்குகளைப் பெற்று 144 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக மீளவும் வந்துள்ளது. கொன்சர்வேடிவ் கட்சியினர் கடந்த தேர்தல்களை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாக கூறி பியர் பொலியவ் தனது கொன்சர்வேடிவ் கட்சித் தலைமைப்பதவியை விட்டு விலக மறுத்துள்ளார். இதனைக் கொன்சர்வேடிவ் கட்சியினர் எவ்வாறு ஏற்கப் போகின்றார்கள் என்பதிலேயே அவரின் எதிர்காலம் தங்கியுள்ளது. இவரே ஈழத்தமிழர்கள் கனடாவுக்கு அரசியல் புகலிடம் தேடிச்சென்ற காலத்தில் அவர்களுக்குப் பலவிதங்களில் சாதகமாக உதவியவர் என்பது வரலாறு. தற்போது ஈழத்தமிர்கள் வாக்குகளைக் கணிசமாகக் கொண்டுள்ள ஒன்ராறியோவில் இவரது தோல்வி ஈழத்தமிழர்கள் லிபரல் கட்சியில் அதிக அக்கறை செலுத்துவதைக் காட்டுகிறது. அதற்கேற்ப லிபரல் கட்சியின் நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியும் ஜெனிட்டாநாதன் என்னும் ஈழத்தமிழ் பின்னணி கொண்டவரும் இன்னுமொரு இந்தியத் தமிழ்ப்பெண் வேட்பாளரும் லிபரல்கட்சியில் இம்முறை வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் தாயகத்துக்குக் கடமை செய்கின்ற அதேவேளை ஈழத்தமிழர்க்கு என்ன விதத்தில் உதவ வேண்டுமென்பதை கனடிய ஈழத்தமிழர்கள் தெளிவாக தெரியப்படுத்தினாலே இவர்களின் தெரிவு ஈழத்தமிழர்களுக்கு பயன்உடையதாக ஈழத்தமிழர்களுக்கான அனைத்துலக நீதியை பெறக்கூடியதாக அமையும்.
மேலும் பிரஞ்சு மொழி பேசுபவரின் மாநிலமான கியூபெக் தனியான அரசாக அமையவேண்டுமென்ற அரசியல் விருப்புடைய புளக் கியூபேகுவா கட்சி கடந்த தேர்தலை விட 1.3 வீதம் குறைவான வாக்குகளைப் பெற்று மொத்தமாக 6.3 வீதமான வாக்குகளைப் பெற்று 22 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மூன்றாவது கட்சியாக வந்துள்ளது. அமெரிக்க அதிபரின் கனடாவை அமெரிக்க மாநிலமாக்கும் முயற்சி மாநிலத்தனியாட்சி கோருபவர்களைக் கூட அதனைக் கடந்து தாயகப்பற்றுடன் செயற்பட வைத்துள்ளது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதுவும் ஈழத்தமிழர்களுக்கு மண்ணின் இறைமையைப் பேணுவதில் அரசியல் வேறுபாடுகள் கடந்த நிலை தேவை என்பதை உணர்த்துகிறது. அதே வேளை சிங்களவர்களுக்குத் தங்களின் தேசத்தின் இறைமையைப் பேணுவதற்கு இருக்கும் ஒருமைப்பாட்டுச் சிந்தனையை வெளிப்படுத்தும் வகையில் பிலிதுருஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினருமாகிய உதய கம்மன்பில இந்தியாவுடன் அநுரகுமார அரசாங்கத்தினர் செய்த ஒப்பந்தங்களில் கருத்திட்டங்களின் செயற்பாட்டுக்காக இலங்கை வரும் இந்தியர்களுக்கு மட்டுமல்ல இந்தத் திட்டங்களில் ஈடுபடும் அரசாங்கத்தின் தேசிய பிரதிநிதிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய இயலாது என்னும் விதிகள் சிறிலங்காவின் அரசியலமைப்புக்கு எதிரானதாகையால் இவைகள் சட்டவிரோத ஒப்பந்தங்கள் என தெரிவித்துள்ளார். சிங்களத் தலைவர்கள் தங்கள் இறைமையை நிலைப்படுத்துவதில் காட்டும் அக்கறை ஈழத்தமிழ் அரசியல்வாதிகளுக்கு இல்லையென்பதே கவலைக்குரியவொன்றாக உள்ளது.
மேலும் கனடியத் தேர்தலில் நியூடெமோகிரெடிட் கட்சி கடந்த தேர்தலை விட 11.5 வீதமான வாக்குகளைக் குறைவாக 6.3 வாக்குளைப் பெற்று 7 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அத்துடன் கிறீன் கட்சியும் கடந்த தேர்தலை விட 1.1 வீதம் குறைவாக வாக்குகளைப் பெற்று மொத்தமாக 1.2 வீத வாக்குகளைப் பெற்று 1 பாராளுமன்ற உறுப்பினரைப் பெற்றுள்ளது. அந்த வகையில் லிபரல் கட்சியின் 169 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் கூட்டு மொத்தமாக 174 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எனவே கனடாவின் இம்முறை அரசாங்கம் சிறுபான்மைப் பலமுள்ள அரசாங்கமாகவே விளங்க இருப்பதால் சட்டவாக்கங்களில் சிக்கல்களை எதிர்நோக்கலாம் என்னும் கருத்துப் பரவலாக உள்ளது. ஆயினும் பிரித்தானிய மத்திய வங்கியின் வரலாற்றில் 300 ஆண்டுகளில் பிரித்தானியக் குடியாக இல்லாத ஒருவர் இயக்குனராகச் செயற்பட்டதென்றால் அது இன்றை கனடாவின் பிரதமர் மார்க் ஆனியே தான். இதனால் கனடிய பிரித்தானிய மத்திய வங்கிகளை மிக இக்கட்டான காலங்களில் இயக்கிய மார்க் ஆனி தனது ஒக்ஸ்வேர்ட்டில் படித்த பொருளாதாரச் சிந்தனைப் பலத்திலும் பிரித்தானியா கனடா யப்பான் நாடுகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையிலும் கனடாவுக்கான பலமான அரசாங்கமாக தனது அரசாங்கத்தை முன்னெடுத்து அமெரிக்க அதிபரின் வர்த்தகப் போரில் வெற்றி பெறுவார் என்பது ஆய்வாளர்கள் கருத்தாக உள்ளது.
ஆசிரியர்