கல்முனையைக் காப்பாற்றவே களமிறங்கியுள்ளேன்-செல்வராஜா கணேஸ்

”இன்றைய கல்முனையின் துர்ப்பாக்கியமான நிலைமையினை கருத்திற்கொண்டு அம்பாறை மாவட்ட எனது இனிய தமிழ் மக்களே இம்முறை எமது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தினை கல்முனைத்தொகுதிக்கு தாருங்கள் என மன்றாட்டமாகக் கேட்கிறேன்”என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான பொறியிலாளர் கலாநிதி செல்வராஜா கணேஸ்  பெரியநீலாவணையில் நடைபெற்ற தனது தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கூட்டம் நேற்றுமுன்தினம் த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில்   த.தே.கூட்டமைப்பு ஒரேயொரு பெண் வேட்பாளரும் காரைதீவு பிரதேசசபை உறுப்பினருமான திருமதி சின்னையா ஜெயராணி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்:

தமிழ்மக்கள் பூர்வீகமாக வாழ்ந்துவந்த கல்முனையைக் காப்பாற்றவே நான் துணிந்து களமிறங்கியுள்ளேன். எனவே இறக்குமதி செய்யப்பட்ட கருணாவோ இனவாதத்தை கக்கும் ஹரீசோ தேவையில்லை.

இன்றைய கல்முனையின் துர்ப்பாக்கியமான நிலைமையினை கருத்திற்கொண்டு  அம்பாறை மாவட்ட எனது இனிய தமிழ்மக்களே இம்முறை எமது தமிழ்ப் பிரதிநிதித்துவத்தினை கல்முனைத்தொகுதிக்கு தாருங்கள் என மன்றாட்டமாகக் கேட்கிறேன்.

கடந்த காலங்களில் அனைத்து தமிழ்மக்களும் இணைந்து தொடர்ச்சியாக பொத்துவில் தொகுதியைச்சேர்ந்த பெருமக்களுக்கே அந்த பிரதிநிதித்துவத்தினை வழங்கிவந்திருக்கிறோம்.

கடந்த 43வருடகாலமாக தெரிவுசெய்யப்பட்ட அமரர் எம்.சி.கனகரெத்தினம் தொடக்கம் கோடீஸ்வரன் வரையான சகல பிரதிநிதிகளும் பொத்துவில் தொகுதியைச்சேர்ந்தவர்களே.இதுவரை கல்முனை அல்லது சம்மாந்துறைத் தொகுதியிலிருந்து ஒருவரும் பிரதிநிதியாக வரவில்லை .

இது பிரதேசவாதமல்ல. நியாயமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தர்க்கநியாயம்.

எனது சேவை மாவட்டம் பூராக இருக்கும். அதற்குநான் உத்தரவாதம்.அதுமட்டுமல்ல மாதமொருமுறை கிராமம் கிராமமமாகச்சென்று மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிவேன்.

உரிய நடவடிக்கை எடுப்பேன்.அம்பாறை மாவட்டத்தின் முகவெற்றிலையாகக்கருதக்கூடிய கல்முனையின் இன்றைய ஆபத்தான துரதிஸ்டநிலையை சகலரும் நன்கறிவோம்.

எனவே இம்முறை அந்த வாய்ப்பை கல்முனைத் தொகுதிக்கு வழங்கவேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும்  ஒவ்வொரு தமிழரிடத்திலுமுள்ளது.