குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன்-சி.வி.விக்னேஸ்வரன்

பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் முதல் படியாக அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை கருதுகிறேன். ஆகவே குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூல வரைபு முற்போக்கான விடயங்களை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஜனநாயக இலட்சினங்களை கொண்டிருந்தது.

22ஆவது  திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படவில்லை. அமைச்சரவை நியமனம், அமைச்சின் செயலாளர் நியமனம் உள்ளிட்ட முக்கிய பல நியமனங்கள் ஜனாதிபதிக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.

ஒருசிலரின் அபிலாசைகளையும், கோரிக்கைகளையும் நிறைவேற்றும் வகையில் 22ஆவது திருத்த வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் 22ஆவது திருத்தச் சட்ட நிறைவேற்றம் தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு முதல் படியாக அமையும்.

1978ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் சாதக மற்றும் பாதகமான விளைவுகள் குறிப்பிடப்படுகின்றன.

ஒட்டுமொத்த மக்களாலும் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதி நாட்டு மக்கள் அனைவருக்கும் பொறுப்பு கூற வேண்டும். அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட வகையில் ஜனாதிபதி செயற்படுவது அவசியமாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எந்தளவுக்கு காப்பீடாக அமைந்தது என்பது கேள்விக்குறியானதே.

அரசியலமைப்பு திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ள பின்னிணியில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் முழுமையாக இரத்து செய்யப்படும். அவ்வாறு நீக்கப்பட்டால் 13ஆவது திருத்தம் ஊடாக தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் கூட இல்லாமல் போகும்,ஆகவே 13ஆவது திருத்தம் குறித்து இந்தியா அவதானம் செலுத்த வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

ஆகவே 20ஆவது திருத்தத்தில் காணப்படும் ஒருசில குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி அதற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளேன் என்றார்.