சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் பொறிமுறையொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்த திட்டம்

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் போன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
குறித்த சிறுமியின் மரணத்தை பாராளுமன்றில் இன்று (09) சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறுமிக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி குறித்த சிறுமி தமது உயிரை மாய்த்து கொண்டார்.
கடந்த ஆண்டு இறுதியில் குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதுடன் பின்னர் அழுத்தங்களை அடுத்து அவர் வேறு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தொடர்ந்து தனியார் வகுப்பில் இந்த விடயத்தை ஆசிரியர் ஒருவர் பலரது முன்பாகவும் சுட்டிக்காட்டியதன் விளைவாக குறித்த சிறுமி தமது உயிரை மாய்த்து கொண்டார் என்று சஜித் பிரேமதாச பாராளுமன்றில் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஆசிரியருக்கு பல மாதங்களுக்கு பின்னர் நேற்றைய தினமே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக பெற்றோர் அல்லது பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து முறைப்பாடு கிடைக்கும் வரையில் காத்திருக்காமல் சுயமாக இயங்கும் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமல் செயற்படவேண்டும் என தெரிவித்தார். குறித்த சிறுமியின் விடயத்தில் முதலாவது சம்பவம் இடம்பெற்ற உடனேயே அது தொடர்பில் உரிய முறையில் தகவல் பதிவாகவில்லை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

அதேநேரம் எதற்காக இந்த விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை என்பது தொடர்பிலும் சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தொடர்பில் எதற்காக உரிய முறையில் தகவல் வழங்கவில்லை என்பது தொடர்பிலும் கொட்டாஞ்சேனை சிறுமி பயின்ற பம்பலப்பிட்டியில் உள்ள மகளிர் பாடசாலையின் அதிபரிடமும் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான சம்பவங்கள் மீள நிகழாமல் தடுப்பதற்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, கல்வி அமைச்சு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, காவல்துறை ஆகிய தரப்புகள் அடங்கும் வகையிலான செயற்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.