ஆலோசனைகளையும், உதவிகளையும், தந்துதவுங்கள்: புலம்பெயர் மக்களிடம் செல்வச்சந்திரன் ஸ்ரீமன் கோரிக்கை

“நான் Hybrid துவிச்சக்கர வண்டி மட்டுமல்ல எமது சமூகத்துக்கு தேவையான வேறு சில உபகரணங்களையும் சிறு வயது முதல் உருவாக்கியிருக்கின்றேன். எனவே இத்துறை தொடர்பான நாட்டமுள்ள புலம் பெயர்ந்த மக்கள் எனக்கு உங்கள் ஆலோசனைகளையும், உதவிகளையும்,  உற்சாகத்தையும் தந்துதவுங்கள்” என Hybrid துவிச்சக்கர வண்டியைக் கண்டுபிடித்துள்ள மாணவன்  செல்வச்சந்திரன் ஸ்ரீமன் கேட்டுக்கொண்டுள்ளார்.

1 1 ஆலோசனைகளையும், உதவிகளையும், தந்துதவுங்கள்: புலம்பெயர் மக்களிடம் செல்வச்சந்திரன் ஸ்ரீமன் கோரிக்கைஇன்றைய நிலையில் இணைய கலாசாரத்திற்குள் மூழ்கித் தம் வாழ்க்கைப் பாதையில் திசைமாறிப் போகும் இளைய தலைமுறையினர் மத்தியில் பலர் இன்றும் சாதித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதற்கான ஒரு எடுத்துக் காட்டாகத்தான் மாணவர்களாகிய செல்வச்சந்திரன் ஸ்ரீமன் மற்றும் ஜெகதீஸ்வரன் விஜிதா  ஆகியோர் விளங்குகின்றனர்.
3 1 ஆலோசனைகளையும், உதவிகளையும், தந்துதவுங்கள்: புலம்பெயர் மக்களிடம் செல்வச்சந்திரன் ஸ்ரீமன் கோரிக்கை
யாழ்ப்பாணம்,  வடமராட்சியில் அல்லையம்பதி எனும் கிராமத்தில் வசிக்கும் மாணவனான  செல்வச்சந்திரன் ஸ்ரீமன், யாழ்  ஹாட்லிக் கல்லூரியில் உயர்தர தொழிநுட்ப பிரிவில் கற்று வருகின்றார்.

தற்பொழுது இலங்கையில் நாடுதழுவிய ரீதியில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் துவிச்சக்கர வண்டியில் மோட்டார் ஒன்றினை பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை பயன்படுத்தியும் கலப்பு முறையிலான துவிச்சக்கரவண்டியினை காலத்தின் தேவைக்கேற்ப உருவாக்கியுள்ளார்.

இது தொடர்பாக இலக்கு ஊடகத்திற்கு  அவர் வழங்கிய செவ்வி…..

கேள்வி: நீங்கள் வெளிப்படுத்திய ஆற்றல் என்ன?

பதில்: நான் Hybrid Bicycle துவிச்சக்கர வண்டி ஒன்றை  தற்போதைய நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்துள்ளேன். ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ளதை விட சற்று வித்தியாசமானது.  நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையால் எரிபொருள் பற்றாக்குறைக்கான  மாற்று வழித் தீர்வு. இது  சூழலின் நண்பனாக அமைகின்றது. அதாவது இதனைப் பயன்படுத்துவதால் சூழலுக்குப் பாதகம் இல்லை.   சூரிய சக்தியை மின் சக்தியாக மாற்றிப்  பயன்படுத்த முடியும்.

கேள்வி: என்ன தடைகளை எதிர் கொண்டுள்ளீர்கள்?

பதில்: இதைத் தயாரிப்பதற்கான கூறுகளைப் புதிதாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் பழைய பாகங்களிருந்தே பெற்றுக் கொண்டேன்.  இந்த துவிச்சக்கர வண்டியை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கான அறிவு, ஆற்றல் திட்டங்கள் இருக்கின்ற போதிலும் பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளது.

கேள்வி: புலம் பெயர் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? அவர்களிடம் இருந்து என்ன உதவிகளை எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: எனது இப் பொருளின் அறிமுக நிகழ்வைப் பார்த்து புலம் பெயர்ந்த மக்கள் பாராட்டு தெரிவித்திருக்கின்றார்கள். அதற்கு நான் முதலில் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன். மேலும் நான் Hybrid துவிச்சக்கர வண்டி மட்டுமல்ல சமூகத்துக்கு தேவையான வேறு சில  உபகரணங்களையும் சிறு வயது முதல் உருவாக்கியிருக்கின்றேன். எனவே இத் துறை தொடர்பான நாட்டமுள்ள புலம் பெயர்ந்த மக்கள் எனக்கு உங்கள் ஆதரவை அளிப்பதுடன் மேலும் இவ்வாறான கண்டுபிடிப்புக்களுக்கு நிதி உதவி செய்தால் என்னால் மேலும் சாதிக்க முடியும் எதிர்காலத்தில்.

அதே நேரம், சாதனைக்கு வறுமையை காரணம் காட்டி தப்பிப்பவர்கள் மத்தியில் வறுமை என்பது சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு  பொருட்டல்ல என்பதை, முல்லைத்தீவை சேர்ந்த  ஜெகதீஸ்வரன் விஜிதா கிக்ஸ் பாக்ஸ்சிங்கில்  சாதனை படைத்துள்ளார்.

2 1 ஆலோசனைகளையும், உதவிகளையும், தந்துதவுங்கள்: புலம்பெயர் மக்களிடம் செல்வச்சந்திரன் ஸ்ரீமன் கோரிக்கைமுல்லைதீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் வசிக்கும் ஜெகதீஸ்வரன் விஜிதா, கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கற்று வருகின்றார். அகில இந்திய ரீதியாக நடைபெற்ற கிக்ஸ் பாக்சிங் போட்டியில் தங்க பதக்கத்தினை வென்று முல்லைத்தீவு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

தனது சாதனை தொடர்பாக இலக்கு ஊடகத்திற்கு அவர் வழங்கிய செவ்வி,

கேள்வி: புலம் பெயர் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?   என்ன உதவிகளை எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: புலம்பெயர் தமிழர்களுக்கு நான் கூற விரும்புவது நிச்சயமாக ஒரு தமிழச்சியாக இந்தியாவின் தமிழ் நாட்டில் நடைபெற்ற தெரிவுப் போட்டிகளில் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன். எங்களுடைய விளையாட்டானது இலங்கை அரசின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விளையாட்டு. பல நாடுகளில் அங்கீகாரம் பெற்று விளையாடப்படுகின்ற விளையாட்டு. உதாரணமாக சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அனுசரணையினை பெறாத ஒரு விளையாட்டான கிரிக்கெட்டு விளையாட்டிலேயே பல முக்கியத்துவங்களை கொடுத்து சீர்தூக்கும் நாடு, கிரிக்கெட் விளையாட்டிலும் பார்க்க ஒலிம்பிக் குழுவின் அனுசரணையுடன் பல சர்வதேச நாடுகள் இணைந்து பல சர்வதேச நாடுகளில் விளையாடப்படுகின்ற மிக்ஸ் பாக்சிங் என்கின்ற இந்த விளையாட்டினை  இலங்கை அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை.

அதற்குக் காரணம் இச்சங்கத்தின் தலைமை அதிகாரிகள் தமிழர்களாக இருப்பதே. ஒரு தமிழச்சியாக எவ்வாறு எங்களுடைய தமிழ் இனத்தைப் புறக்கணித்தார்களோ அவ்வாறே இன்று நமது விளையாட்டையும் புறக்கணிக்கின்றார்கள் என்று நான் கருதுகின்றேன். அந்த வகையில் இவ்விளையாட்டு சார்பாக அனுசரணைகளைக் கோருகின்ற சந்தர்ப்பத்திலே இந்த விளையாட்டு இலங்கை அரசின் அங்கீகாரம் பெற்றதா?  என்ற கேள்வியை கேட்காதீர்கள்.  நாங்கள் தமிழர்களாக இந்த விளையாட்டினை எங்களால் முடிந்த வரை அங்கீகாரம் பெற வைப்பதற்கு முயற்சிப்போம். அதுவரை உங்களது ஆதரவைத் தந்து உதவுங்கள்.

மேலும் நடைபெற்று முடிந்த போட்டியிலே என்னைப் போன்று வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற போரின் வடுக்கள் இன்னும் அவர்களை விட்டு நீங்காத குடும்பத்தைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளார்கள். அவர்களையும் கருத்தில் கொண்டு நடைபெற இருக்கின்ற உலகக்கிண்ண போட்டியிலே பங்கு பெறுவதற்கு உங்களால் இயன்ற உதவிகளை வழங்குங்கள்.

நேர்கண்டவர் : பாலநாதன் சதீஸ்