மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட எந்தச் சூழலிலும் இடமளிக்கப் போவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்காசிய மோதல்களினால் உலகில் சில நாடுகள் தற்போது எரிபொருள் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஆனால், இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எந்த நேரத்திலும் வழங்க சீனா தயாராக உள்ளது.
ஒருவேளை நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானால், இலங்கையில் இயங்கி வரும் சீனாவின் ‘சினோபெக்’ நிறுவனம் ஊடாக அந்த நிலைமையை வெற்றிகரமாகக் கையாள முடியும்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைச் சுட்டிக்காட்டிய அவர், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சீன அரசாங்கம் தொடர்ந்து ஆதரவளிக்கும் .
மேற்காசியாவில் தற்போது ஏற்பட்டுள்ள போர்நிறுத்தம் நீடிக்க வேண்டும் என சீனா விரும்புவதாகவும், எவ்வாறாயினும் வருங்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளவும் இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கவும் சீனா விழிப்புடன் இருப்பதாகவும் தூதுவர் தெரிவித்துள்ளார்.



