பாகிஸ்தானில் மழை, வெள்ள பாதிப்புகளால் கடந்த 3 வாரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் பஞ்சாப், கைபர் பக்துன்வா, ஜில்ஜிட்-பால்டிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் இஸ்லாமாபாத், இராணுவ தலைமையகமான ராவல்பிண்டி உட்பட பல்வேறு நகரங்கள், கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.ஜீலம், சிந்து, சட்லஜ், ஜில்ஜிட், ஸ்வாட் உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முழுவதும் அவசர நிலை அமல் செய்யப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அந்த நாட்டு மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசிக்கின்றனர். இதன் காரணமாக இயற்கை பேரிடரின்போது பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. பருவநிலை மாறுபாட்டை சமாளிக்க பாகிஸ்தான் அரசு போதிய நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே வெள்ள பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.