மன்னாரில் தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை -சிறிதரன் அந்தோனியம்மா குற்றச்சாட்டு

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தனிமைபடுத்தபடுகின்ற குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் வழங்கப்படுவதில்லை என மன்னார் நகர சபை உறுப்பினர் சிறிதரன் அந்தோனியம்மா குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தனிமைப்படுத்திவிட்டு அவர்களை வெளியே செல்லவேண்டாம் என தெரிவிக்கின்றனர். அதனால் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்படுகின்றது. அவ்வாறு தனிமைப்படுத்தினாலும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உலருணவு பொருட்களை கூட உரிய அதிகாரிகள்  வழங்குவதில்லை.

அரச சார்பற்ற நிறுவனங்களும் பொது அமைப்புக்களும்  அரசாங்கத்தினால் தனிமை படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொருட்கள் கிடைப்பதாக நினைத்து தனிமை படுத்தப்பட்ட குடும்பங்களை கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட எத்தனையோ குடும்பங்கள் பசி பட்டியினால் வாடி வருகின்றனர்.

DSC 0543 மன்னாரில் தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை -சிறிதரன் அந்தோனியம்மா குற்றச்சாட்டு

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்குவதாக வானொலியிலும் செய்திகளிலும் அறிவித்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் மன்னார் மாவட்டத்தில் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்களே வழங்கி கொண்டு இருக்கின்றார்கள். அதுவும் தனிமைப்படுத்தப்பட்டு பத்து  நாட்கள் கடந்த பின்னரே வழங்குகின்றனர். முதல் வாரத்திலேயே தனிமைபடுத்தபட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமலும் வாங்க முடியாமலும் மிகவும் கஸ்ரத்திலேயே இருக்கின்றனர்.

எனவே மன்னார் மாவட்டத்தில் உள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி, அரசினால் வழங்கப்படுகின்ற ஐயாயிரம் ரூபா  பொருள் அல்ல பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்களை வழங்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும்   தனிமைப்படுத்தல் ஆரம்பிக்கின்ற முதல் வாரத்திலேயே குறித்த அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வர வேண்டும்” என கேட்டுகொள்வதாக தெரிவித்துள்ளார்.