மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆனாலும் ராஜபக்சர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் தங்களின் அதிகாரத்தை தக்கவைக்கவே நினைக்கிறார்கள் என திருகோணமலை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (08) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்துரைக்கையில், “தற்போது நாட்டில் அவசர கால சட்டம் நடை முறைப்படுத்தப்பட்டிருப்பது புதிய விடயமல்ல தமது சகோதரை பாதுகாக்க அரசியல் அமைப்பை மாற்றிய இவர்களுக்கு இது ஒரு விடயமல்ல. தனது குடும்பத்தை பாதுகாக்கவே இந்ந அரசியல் நாடகம் அரங்கேற்றப்படுகிறது பிரதமர் பதவி விலகுவார் என்ற செய்திகளையும் மக்களை போராட்டத்தில் இருந்து திசை திருப்பவும் நாடகமாடுகிறார்கள்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 52 நாள் சூழ் நிலையில் பெரும்பான்மை இல்லாமலே இந்த ராஜபக்சாக்கள் பின் கதவால் ஆட்சியை தக்க வைக்க முயன்றவர்கள் 2/3 பெரும்பான்மை இருக்கும் நிலையில் எப்படி இருக்கப்போகிறார்கள்.
இடைக்கால அரசாங்கம் என்பது ராஜபக்சர்களினதும் மொட்டுக் கட்சியினதும் கீழ் பிரதமரை ஏற்று அமைப்பதை ஐக்கிய மக்கள் சக்தி விரும்பாது மீண்டும் விமல் உதய கம்மன்பில போன்றவர்களுடன் ஆட்சியை கொண்டு செல்வதா ? என்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடாத்துவது என்ற கோரிக்கையே ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடகவுள்ளது” என்றார்.