குற்றச்செயல்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்த எல் சல்வடோர் அதிபர்

எல் சல்வடோர் அதிபர் Nayib Bukele குற்றச்செயல்களை ஒடுக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். 

குற்றத்திற்கு எதிரான போர் என தனது நடவடிக்கைகளுக்கு பெயரிட்டிருக்கும் அதிபர் Nayib Bukele, குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 2000 பேரை புதிதாக கட்டப்பட்டுள்ள சிறைக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார்.

இந்த மிகப்பெரிய சிறை (Mega Prison) குற்றச்செயல்களை ஒடுக்க சுய பிரகடனம் செய்துள்ள அந்நாட்டின் அதிபர் Nayib Bukele-இன் மையப் புள்ளியாக பார்க்கப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அடைக்க முடியும்.

இது வடக்கு, தெற்கு, மத்திய அமெரிக்க நாடுகளில் இருக்கும் சிறைகளிலேயே மிகப்பெரிய சிறை என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

எல் சல்வடோரில் கொலைகளும்  வன்முறைக் குற்றங்களும் அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, பல்லாயிரக்கணக்கானவர்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.

பச்சை குத்தப்பட்டவர்களை வெறுங்காலுடனும் பிணைக்கப்பட்ட சங்கிலிகளுடனும் புதிதாக திறக்கப்பட்ட சிறைக்கு கொண்டு செல்லும் புகைப்படங்களை எல் சல்வடோர் அரசு வெளியிட்டுள்ளது.

கைதிகள் தங்கள் அறைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, மொட்டையடிக்கப்பட்ட தலைகளுடன், பின்னால் கைகளை கட்டிக்கொண்டு நெருக்கமாக அமர வைக்கப்பட்டுள்ளனர்.

விடியற்காலை வேளையில், ஒரே தடவையில் 2000 கைதிகள் பயங்கரவாத தடுப்பு மையமான குறித்த சிறைக்கு மாற்றப்பட்டதாக அதிபர் Nayib Bukele ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“இது அவர்களின் புதிய வீடாக இருக்கும், இங்கு அவர்கள் பல ஆண்டுகளுக்கு வாழ்வார்கள், இதனால் மக்களுக்கு மேலும் எந்த தீங்கும் ஏற்படுத்தப்படாது” என அவர் தனது பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலைநகர் சான் சல்வடோருக்கு தென்கிழக்கே 74 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெகோலுகாவில் உள்ள இந்த மெகா சிறை 8 கட்டிடங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் சுமார் 100 சதுர மீட்டர் (1,075 சதுர அடி) கொண்ட 32 அறைகளைக் கொண்டுள்ளன. இவற்றில் “100 க்கும் மேற்பட்ட” கைதிகளை அடைத்து வைக்க முடியும் என்று அரசு கூறுகிறது.

இந்த அறைகள் ஒவ்வொன்றிலும் தலா இரண்டு முகம் கழுவும் தொட்டி மற்றும் இரண்டு கழிவறைகள் மட்டுமே இருக்கும்.

அதிபர் புகேலே கடந்த வருடம் மார்ச் மாதத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களுக்கு எதிரான போரை அறிவித்து, அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அவசரகால நிலை பல தடவைகள் நீட்டிக்கப்பட்டன.

எனினும், அவசரகால அதிகாரங்கள் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தன. அவை சில அரசியலமைப்பு உரிமைகளை மறுப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்த வண்ணம் உள்ளன.

குற்றத்தடுப்பு நடவடிக்கையில் 64,000-க்கும் மேற்பட்ட சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பல்களை “முற்றிலுமாக காணாமல் போகச்செய்வதே”  கைதுகளின் நோக்கம் என்று அரசு கூறுகிறது.

அரசின் இந்த கொள்கையில் அப்பாவி மக்கள் சிக்கியுள்ளதாகவும், கைது செய்யப்பட்டவர்களில் சிலர் “கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தைக்கு” உட்படுத்தப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் வாதிடுகின்றன.

ஆனால் Nayib Bukele-வின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் முயற்சி எல் சால்வடார் மக்களிடையே பிரபலமாக உள்ளது.