பொருளாதார நெருக்கடி- பாகிஸ்தானியர்கள் தேனீர் அருந்துவதை குறைக்க வேண்டும்- அமைச்சர் ஆசன் இக்பால்

மக்கள் தேநீர் குடிப்பதை குறைத்துக் கொண்டால் அந்நாட்டு அரசுக்கு உண்டாகும் இறக்குமதிச் செலவு குறையும் என்று பாகிஸ்தானின் திட்டம், வளர்ச்சி மற்றும் சீர்திருத்தங்களுக்கான மூத்த அமைச்சர் ஆசன் இக்பால் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு தற்பொழுது மிகவும் குறைவாக உள்ளது.

தற்போது அந்நாட்டு அரசிடம் இருக்கும் வெளிநாட்டு பணத்தை வைத்து இரண்டு மாத காலத்துக்கும் குறைவான தேவையை பூர்த்தி செய்யும் அளவிலேயே இறக்குமதி செய்ய முடியும் என்பதால் பாகிஸ்தான் தற்போது அந்நிய செலாவணியை திரட்டுவதற்கான அவசரத் தேவையில் உள்ளது.

உலகிலேயே அதிகமான அளவு தேயிலைத் தூளை இறக்குமதி செய்யும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள டீத்தூளை பாகிஸ்தான் இறக்குமதி செய்துள்ளது.

இந்நிலையில் ”நாம் கடன் வாங்கித்தான் டீத்தூளை இறக்குமதி செய்கிறோம் என்பதால் நீங்கள் குடிக்கும் தேநீரின் அளவில் ஒன்று அல்லது இரண்டு கப்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என நாட்டு மக்களுக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்,” என அமைச்சர் இக்பால் கூறியுள்ளார்.

Tamil News