மட்டு: மயிலத்தமடு-மாதவனை பகுதிகளில் தொடரும் மேய்ச்சல் நில அபகரிப்பு குறித்து உரிய தரப்பு மற்றும் அரசியல்வாதிகள் எந்தவித கரிசனையும் அற்ற நிலையில் இருப்பதாக கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மயிலத்தமடு-மாதவனையில் கடந்த 2020ஆம் ஆண்டு கிழக்கு மாகாண ஆளுரின் ஏற்பாட்டில் பெரும்பான்மையினத்தவர்களைக் கொண்டு நில அபகரிப்புகள் சேனைப் பயிர்ச் செய்கை என்ற அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களும் மேய்ச்சல் தரை காணிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், குறித்த பகுதியில் உள்ளவர்கள் அங்கிருந்து சென்று விடுவார்கள் என்றும் சட்ட விரோத குடியேற்றவாதிகளின் சார்பில் ஆஜரான சட்டத்தரணியினால் உறுதியளிக்கப்பட்டது.
ஆனாலும் இன்னும் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேய்ச்சல் நிலப் பகுதியில் உள்ளதாகவும் தற்போது இந்தப் பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.