‘ஈரான் போரை முடிக்க பரிசீலனை’ : அதிபர் ட்ரம்ப் கருத்து

ஈரான் உடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.

‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் மற்றொரு புறம், தரைப்படை வீரர்களை இறக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“ஈரானில் உள்ள பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் நாங்கள் மேற்கொண்டு வரும் எங்களது முக்கிய இராணுவ நடவடிக்கைகளை படிப்படியாக முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம். ஏனெனில் எங்களது இலக்குகளை அடைவதற்கு மிக நெருக்கமாக நாங்கள் இருக்கிறோம்,” என்று போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அவர் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். போர் தொடங்கிய நாள் முதல் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹோர்முஸ் நீரிணை குறித்துப் பேசிய ட்ரம்ப், “அதைக் (ஹோர்முஸ் நீரிணை) கண்காணிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான பொறுப்பை அதனைப் பயன்படுத்தும் நாடுகளே ஏற்க வேண்டும்,” என்றார்