“கிவுல் ஓயா” திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக நெடுங்கேணியில் தெளிவூட்டல் மற்றும் கூட்டுக்கலந்துரையாடல்

மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்தினால் ஏற்படவுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் கூட்டுக்கலந்துரையாடல் ஒன்று 01.09.2026 அன்று வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது.

அந்தவகையில் குறித்த தெளிவூட்டல் மற்றும் கூட்டுக் கலந்துரையாடலானது, நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் “இயற்கையை பாதுகாப்பது எமது உரிமை” எனும் தொனிப்பொருளில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்துகலந்துரையாடலில் கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்தினை முன்னெடுக்கின்றபோது ஏற்படப்போகின்ற இயற்கை வளங்களின் பாதிப்புக்கள் மற்றும் வனஜீவராசிகளின் பாதிப்பு நிலைகள் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட்டதுடன், குறித்த கிவுல் ஓயா திட்டத்தினால் வவுனியா வடக்கு பிரதேச மக்கள் எதிர்நோக்கவுள்ள மக்களின் பாதிப்பு நிலை குறித்தும் கவனஞ்செலுத்தப்பட்டது.

மேலும் குறித்த தெளிவூட்டல் மற்றும் கூட்டுக் கலந்துரையாடலில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வவுனியா பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். விஜயமோகன், வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்களான செல்வராசா சுசீலன், சரவணமுத்து கருணாநிதி, கணேஸ் சரோஜாதேவி, புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியாவடக்கு பிரதேசக்கிளையின் தலைவர் வைரமுத்து பூபாலசிங்கம் மற்றும் செயலாளர் சண்முகராசா தவேந்திரராசா, நீதிக்கான மக்கள் அமைப்பின் பிரதிநிதிகள், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.