யாழ்ப்பாணம், மட்டக்களப்பிற்கு புதிய அரசாங்க அதிபர்கள் நியமனம்

யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான புதிய அரசாங்க அதிபர்கள் நேற்று பிரதமரிடம் தமக்கான நியமனக் கடிதங்களை பெற்றுக்கொண்டனர்.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நேற்று அவர் அதற்கான நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளராகவும் திறைசேரியின் வரவு செலவுத் திட்ட உதவி பணிப்பாளராகவும் வட மாகாண சபையின் பிரதி பிரதம செயலாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இருந்து நேற்று அவர் பெற்றுக்கொண்டார்.

இவர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக 2020 ஆம் ஆண்டு பணியாற்றியிருந்ததுடன், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக இறுதியாக பணியாற்றியிருந்தார்.