ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரும் கடும் நிபந்தனையுடன் அனுப்பப்பட்டனர் – சட்டத்தரணி புகழேந்தி

667 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட மூவரும் கடும் நிபந்தனையுடன் அனுப்பப்பட்டனர் - சட்டத்தரணி புகழேந்திஇந்தியாவின் முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கைக்குக் கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாட்டுடனேயே அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில், “கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 33 வருடங்களின் பின்னர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றரை வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் சாந்தன் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இருந்தார். ஏனைய நால்வரும இலங்கைக்குச் செல்வது தமக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கூறி தாம் வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வந்திருந்தனர். அதற்கு இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இலங்கைத் துணைத் தூதரகமும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டை வழங்க மறுத்தது.

இந்நிலையில், கடந்த மாதம் சாந்தன் உயிரிழந்தமையால் சிறப்பு முகாமில் இருந்த ஏனைய மூவரின் மனநிலை பாதிக்கப்பட்டது. அதனால் அவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. சிறப்பு முகாமில் தொடர்ந்து இருந்தால் தாமும் உயிரிழந்து விடுவோம் என்ற பயம் அவர்களிடம் ஏற்பட்டமையால் இலங்கை திரும்ப சம்மதித்தனர். இலங்கை திரும்ப யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்வதற்கு விமானச் சீட்டு எடுக்க முயன்றவேளை “ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்” விமானம் மூலமே பயணிக்க முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

குறித்த விமானம் சென்னையில் இருந்து கொழும்புக்கே இருந்தமையால் அதில் பயணிக்க வேண்டி ஏற்பட்டது. அதேபோன்று சென்னை விமான நிலையில் வரையில் மூவருக்கும் பாதுகாப்பு வழங்கும் முகமாக அதிகாரிகள் செயற்பட்டனர். அனைத்துப் பயணிகளும் விமானத்தில் இருந்து இறங்கிய பின்னரே இறங்க வேண்டும் போன்ற சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஒருவரை நாடு கடத்தும்போது முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இலங்கை வந்து இறங்கியதும் அதிகாரிகள், இவர்கள் மூவரின் கடவுசீட்டையும் மூவரையும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இரு மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்தனர். எவ்வாறு நாட்டை விட்டு வெளியேறினீர்கள்? எதற்காக நீங்கள் இந்தியா சென்றீர்கள்? நீங்கள் எப்போது சென்றீர்கள்? போன்ற பல்வேறு கேள்விகளைக் கேட்டு அவற்றைப் பதிவு செய்தனர்.

பின்னர் இவர்கள் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியமையால் இவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதிமன்றில் தாம் வழக்குத் தாக்கல் செய்யப் போகின்றோம் என்று தெரிவித்தனர். பிறகு உயர் அதிகாரிகளுடன் நாம் கலந்துரையாடி, இவர்களுக்கு எதிராக இலங்கையில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லை என்பதாலும், 33 வருடங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு சட்டவிரோதமான முறையில் வெளியேறியமை பற்றி வழக்குத் தொடர்வதில் உள்ள சிக்கல் குறித்தும் எடுத்துரைத்தோம். அதன்பின்னர் வழக்குத் தொடராது மூவரையும் விட்டனர்.