கோத்தபாயாவின் மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்தது

சிறீலங்காவின் முன்னள் பாதுகாப்புச் செயலாளரும், தற்போது அரச தலைவர் வேட்பாளராக போட்டியிடுபவருமான கோத்தபாயா ராஜபக்சா தனது வழக்கை சிறப்பு உயர் நீதிமன்றம் விசாரணை செய்வதற்கு எதிராக மேற்கொண்ட மனுவை சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் இன்று (11) நிராகரித்துள்ளது.

33.9 மில்லியன் ரூபாய்கள் செலவில் டி ஏ ராஜபக்சா அரும்பொருள் காட்சியகம் அமைப்பது தொடர்பில் முறைகேடுகளை மேற்கொண்டிருந்ததாக கோத்தபாயா உட்பட மேலும் ஆறு நபர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

மேலதிக ஆதாரங்கள் தொடர்பில் விசாரணைகளை ஓக்டோபர் மாதம் 1 ஆம் நாள் வரை நிறுத்துமாறு உயர் நீதிமன்றம் சிறப்பு உயர் நீதிமன்றத்திற்கு முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் ஒக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் இருந்து இந்த வழக்கு விசாரணையை தினமும் நடத்துவதற்கு கடந்த மாதம் 30 ஆம் நாள் சிறப்பு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சிறீலங்காவில் இடம்பெறவுள்ள அரச தலைவர் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் இடம்பெற்றுவரும் மோதல்களில் கோத்தபாயாவின் வழக்கும் அடங்கும்.