தொல்லியல் திணைக்களம் மதவாதமாக செயற்படுகின்றது என்பதை ஏற்றுகொள்ள முடியாது-சஜித்

தொல்பொருள் திணைக்களத்தின் மீது தமிழ் மக்கள் சந்தேகம் கொள்வதாக நீங்கள் கூறிய காரணி மிகவும் வருத்தமளிக்கும் விடயமாகும். இனவாத, மதவாதமாக செயற்படுகின்றனர் என கூறுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியோயாது. அதிகமானவர்கள் நடுநிலையாகவே செயற்பட்டு வருகின்றனர். நாம் இனவாத மதவாத அடிபடையில் சிந்திக்காது நடுநிலையாகவே செயற்பட்டு வருகின்றோம்.

அதேபோல் சட்ட விரோதமாக வன பாதுகாப்பு திணைக்கள பகுதியில் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் எனது அதிகாரங்களின் கீழ் வரவில்லை. எனினும் இது குறித்து நான் கவனம் செலுத்துகின்றோம் என அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார் .

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தொல்பொருள் திணைக்களம் தொடர்பில் ஏற்கவனே எழுப்பியிருந்த கேள்விக்கு பதில் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

எவ்வாறு இருப்பினும் உங்களின் பிரச்சினைகள் குறித்து முறையாக அதிகாரிகள் குழு முன்னிலையில் ஒப்படையுங்கள். உங்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை நியாயமாக  தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நான் தயாராகவே உள்ளேன். வடக்கு கிழக்கில் குறிப்பாக வடக்கின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி பிரச்சினைகளை தீர்க்க நான் தயார் என்றார்.

குறிப்பு

இங்கு படத்தில் கட்டப்பட்டுள்ள தொல்லியல் திணைக்களத்தின் இலச்சினை முழுமையான பௌத்த மதவாத அடிப்படையில் அமைந்திருப்பதையும் ‘இலங்கை’ என தமிழில் வரவேண்டிய இடத்தில் ஸ்ரீ லங்கா என சிங்கள பெயரில் எழுதியிருப்பதையும் நாம் காணமுடியும்.

பௌத்தத்திற்கு,சிங்களத்துக்கு முந்திய நூறுக்கணக்கான தமிழர் வரலாறு சார்ந்த தொல்லியல் ஆதாரங்கள் இலங்கைத்தீவெங்கும் பரவிக்கிடக்க அவற்றை முற்றுமுழுதாக புறந்தள்ளி
இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதுவே தொல்லியல் திணைக்களம் இனவாத மதவாத அடிப்படையிலானது என்பதற்கு மிகவும் வெளிப்படையான ஆதாரமாகும்.