அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான சந்திப்பை மேற்கொள்ள விரும்பினால் 2015ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட அணுசக்தி உடன்படிக்கையைப் பேணி ஈரானிய மக்களுக்கு எதிரான பொருண்மிய பயங்கரவாதச் செயற்பாட்டில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் மொஹமட் ஜாவத் ஸரீப் நேற்று வியாழக்கிழமை வலியுறுத்தியுள்ளார்.
மலேசிய கோலாலம்பூர் நகருக்கு விஜயம் செய்துள்ள அவர் அங்கிருந்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணுசக்தி நடவடிக்கைக்கு கடிவாளமிடும் வகையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலிருந்து தனது நாட்டை கடந்த வருடம் வாபஸ் பெற்றது முதற்கொண்டு இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றநிலை அதிகரித்துள்ளது.
அமெரிக்கா அந்த உடன்படிக்கையிலிருந்து விலகி ஈரானுக்கு எதிரான தடைகளை மீள நடைமுறைப்படுத்தியமைக்கு பதிலடி கொடுக்கும் முகமாக ஈரான் அந்த உடன்படிக்கையின் கீழான உறுதிப்பாடுகளிலிருந்து படிப்படியாக விலகும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது.
மேற்படி தடைகள் தொடர்பான நிவாரணம் அளிக்கப்படாவிட்டால் அந்த அணுசக்தி உடன்படிக்கை தொடர்பான மேலும் பல மீறல்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
அமெரிக்கா ஈரானிய மக்களுக்கு எதிரான பொருளாதார போரொன்றில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா ஈரானிய மக்களுக்கு எதிராக பொருளாதார தீவிரவாதத்தில் ஈடுபட்டு தடைகளை விதிக்கும் போரோன்றை முன்னெடுத்துள்ளதை நிறுத்தாதவரை எமக்கு அமெரிக்காவுடன் சந்திப்பை மேற்கொள்வது சாத்தியமில்லை” என ஜாவத் ஸரீப் தெரிவித்தார்.
அவர் கோலாலம்பூரில் இடம்பெற்ற இஸ்லாமிய உலகிலான பாதுகாப்பு குறித்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னரே ஊடகவியலாளர்களுடனான இந்த சந்திப்பை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆகையால் அவர்கள் (அமெரிக்கர்கள்) பேச்சுவார்த்தை இடம்பெறும் அறைக்குத் திரும்ப வேண்டுமானால் அவர்கள் ஒரு அனுமதிச்சீட்டை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளது. அந்த அனுமதிச் சீட்டு அந்த உடன்படிக்கையை (2015ஆம் ஆண்டு அணுசக்தி உடன்படிக்கையை) பேணுவதாகும்” என அவர் தெரிவித்தார்.
நாம் சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காக சந்திப்பை மேற்கொள்ள விரும்பவில்லை. எமக்கு சந்திப்பை மேற்கொள்ள அது தொடர்பில் ஒரு பெறுபேறு தேவையாகவுள்ளது” என அவர் கூறினார்.
ஜாவத் ஜரீப் நேற்று மாலை மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட்டுடன் சந்திப்பை மேற்கொண்டார்.