எனக்கு எதிராக குற்றம் சுமத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் – சிறி. இராணுவத்தளபதி

தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எதிர்வரும் நாட்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என புதிய இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்கள் இயற்கையின் சட்டமொன்று உள்ளது என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இராணுவத் தளபதியாகப் பதவியேற்ற சவேந்திர சில்வா நேற்று ஸ்ரீதலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்குச் சென்று நல்லாசிகள் பெற்றார். அதன் பின் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

தொடர்ந்துரையாற்றிய இராணுவத்தளபதி ,குற்றச்சாட்டுக்களை எவரும் முன்வைக்கலாம்.

ஆளால் அது பற்றி எதிர்காலத்தில் வெளிநாட்டு அமைச்சு விசாரணைகளை முன்னெடுக்கும். நாட்டுக்காக முன் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை தான் நேர்மையாகவும்சரியாகவும் முன்னெடுத்தேன்.கடந்த காலங்களிலும் இது போன்ற குற்றச்சாட்டுக்களை பலர் முன்வைத்தார்கள். அவை அனைத்தையும் தாண்டி முன்நோக்கி வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எதிர் காலத்திலும் தன் உயிரைப் பணயம் வைத்தேனும் நாட்டுக்காக உழைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்ட போதும் ஜனாதிபதி தனக்கு இப்பதவியை வழங்கியமை பாராட்டத்தக்கது என்றும் கூறினார். நவீன மற்றும் எதிர்கால இராணுவ சக்தியாக இலங்கை இராணுவம் முன்னேறி வருகிறது என்று அவர் மேலும் கூறினார்.