கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலை : பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்ப்பு போராட்டம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் !

கறுப்பு யூலை 1983 தமிழினப்படுகொலையினை நினைவேந்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வணக்க நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 21-07-2019 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் வாயில்தளத்தில் கவனயீர்பு போராட்டம் இடம்பெறுகின்றது. பின்னர் யுலை 23ம் நாள் செவ்வாய்கிழமை லண்டன் அலுவலத்தில் சுடறேற்றி அகவணக்கத்துடன் வணக்கம் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை யுலை 21ம் நாளன்று பிரான்சில் கறுப்பு யுலை நினைவேந்தலும், உரையாடலும் நா.த.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, கனடாவில் கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்புதலும் முன்னெடுக்கபடவுள்ளதாக அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைத்தீவில் சிறிலங்கா ஆட்சியாளர்களினால், சிங்கள அரசினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கறுப்பு யூலை – 1983 தமிழினப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள் தொட்டு விட்டன.

காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு யூலை நினைவுகள் விதைத்திருக்கின்றன.

கறுப்பு யூலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல. அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.

1983 கறுப்பு யூலை இனப்படுகொலை ஈழத்தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச்  சொல்லியிருக்கிறது. இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த இன மேலாதிக்க அரசிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர அரசை அமையுங்கள் என்பதுதான் அந்தச் செய்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.