வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது கல்வீச்சு

வவுனியா முருகனூர் பகுதியில் ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டு இளைஞர் குழுவொன்று தப்பிச் சென்றுள்ளது.

முருகனூர் பகுதியில் இன்று (12.06.2021)  சிதம்பரபுரம் பகுதியிலிருந்து வவுனியா இராசேந்திரகுளம் ஆடைத்தொழிற்சாலை நோக்கி ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்தினை முருகனூர் விவசாய பண்ணைஅருகே முகங்களை மறைந்தவாறு நின்ற இளைஞர்கள் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கல்வீச்சு தாக்குதலையடுத்து பேருந்தினை சாரதி நிறுத்திய போது பேருந்தினுள் புகுந்த அவ் இளைஞர் குழுவினர் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா காவல்துறையினர் குற்றத்தடுப்பு பிரிவினரின் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த பேருந்தின் அனைத்து கண்ணாடிகளும் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ஊழியர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

வடபகுதியில் கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு ஆடை தொழிற்சாலைகள் காரணமாக இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆடை தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொது மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.