தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு படகில் வர முயன்ற பிரித்தானியர் – கடற்கரையில் வைத்து கைது

தமிழகத்தின் தூத்துக்குடி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் வருவதற்கு முயன்ற பிரித்தானியர் ஒருவர் நேற்று மாலை தூத்துக்குடி கடற்பகுதியில் வைத்து தமிழக கியூ பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி அருகே உள்ள தாளமுத்துநகர் முத்தரையர் கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க குறிப்பிட்ட பிரித்தானியர் சந்தேகப்படும்படியாக சுற்றி வருவதாக கியூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு சுற்றிக் கொண்டு இருந்தவரை மடக்கி பிடித்து கியூ பிரிவு பொலிஸ் அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவரிடம் பிரித்தானிய கடவுச்சீட்டு மற்றும் இந்திய, இலங்கை பணமும் இருந்துள்ளது.

விசாரணையில், பிடிபட்டவர் பிரித்தானியாவைச் சேர்ந்த ஜோனாதன் தோர்ன் (வயது 47) என்பது தெரியவந்தது. இவர் இந்தியா வாழ் வெளிநாட்டினருக்கான, ஓ.சி.ஐ. என்ற அட்டை வைத்திருந்தார். இவர் கோவாவில் இருந்து விமானம் மூலம் பெங்களுருக்கு வந்து உள்ளார். அங்கிருந்து வாடகைக்கு கார் எடுத்துக் கொண்டு கடந்த 9 ஆம் திகதி தூத்துக்குடிக்கு வந்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள பிரபல ஓட்டலில் தங்கி இருந்தாராம். பின்னர் தூத்துக்குடியில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல திட்டமிட்டு இருந்தாராம். இதற்காக கடற்கரையில் நின்றபோதுதான் அவர் பிடிபட்டுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை மற்றும் கோவா பகுதிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 226 கிலோ கேட்டமைன் போதை பொருளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் ஜோனாதன் தோர்ன் கைது செய்யப்பட்டார். இதற்காக 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை சிறையில் இருந்துள்ளார். பின்னர் பரோலில் வெளியில் வந்தவர், இதுவரை 60 நாடுகளுக்கு சென்று இருப்பது தெரியவந்து உள்ளது.

இதைத் தொடர்ந்து கியூபிரிவு பொலிஸார் ஜோனாதன் தோர்ன் மீது கடவுச்சீட்டு முறைகேடு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் தூத்துக்குடி முதலாவது நீதிமன்றில் நீதிபதி எம்.ராஜகுமரேசன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.