புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிராமத்தில் இருந்து நேற்று 09.06.21 இரவு நந்திக்கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்கு சென்றவர் இன்று மாலை பச்சைப் புல்மோட்டைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த 44 அகவையுடைய 5 பிள்ளைகளின் தந்தையான வேலு கணேஸ் என்ற குடும்பஸ்தரே நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்காக நேற்று(09.06.21) இரவு வீட்டில் இருந்து சென்றுள்ளார். இன்று நண்பகலாகியும் அவர் வீடு திரும்பாத நிலையில், நந்திக்கடலில் தொழில் செய்யும் பகுதிக்கு சென்று தேடியும் அவரைக் காணவில்லை. பின்னர் அவரது குடும்பத்தினரால் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதனையடுத்து இவர் இன்று மாலை பச்சைப் புல்மோட்டை வயல் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் பயணித்த உந்துருளியும் அருகில் இருந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இவரது உயிரிழப்பு தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.