மே 18 வீடுகளில் இருந்து நினைவு கூருங்கள் -மாவை சோ சேனாதிராசா

“உயிர் நீர்த்தவர்களை வீடுகளில் இருந்து நினைவு கூருங்கள், முள்ளிவாய்க்கால் நினைவிக்கல் அகற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு பொறுப்புக் கூறியேயாக வேண்டும்“ என தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சோ சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

மேலும் “இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை நினைவு கூறுமாறும் அவர் அழைிப்பு விடுத்துள்ளார்.

 இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வாழும் இடங்களிலும் குடியிருக்கும் குடில்களிலுங் கூட நினைவு கூர்ந்து மாலை 6.00 மணிக்கு மணி ஒலியெழுப்பிச் சுடரேற்றி விளக்கேற்றி திடசங்கற்பத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவலைகளை பாரெல்லாம் பரப்புவோம்.  இராணுவம் சூழ்ந்திருக்க முள்ளிவாய்க்கால் நினைவிக்கல் அகற்றப்பட்டமை தொடர்பாக இலங்கை அரசு பொறுப்புக் கூறியேயாக வேண்டும்.

இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் தேசத்தினதும் மக்களினதும் விடுதலைக்காக, தங்களைத் தாங்களே ஆளுவதற்காக இறைமை கொண்ட மக்கள் கடந்த எழுபதாண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தங்கள் உயிர்களைப் பறிகொடுத்த மக்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரவும், அஞ்சலி செய்யவும், ஆத்மசாந்திக்கான ஈமக்கடன்களில் ஈடுபடவும் உள்ள உரிமை பண்பாடு நாகரிகம் இங்கையில் மறுக்கப்பட்டுள்ளது.

தமிழர் தேசமும் மக்களும் அழிக்கப்பட்ட வரலாறுகளையெல்லாம் தாங்கி நிற்கும் முள்ளிவாய்க்கால் நினைவையும் அழிக்க இன்றைய அரசு இராணுவ ஆளுகைக்கூடாகச் செயல்பட்டு நிக்கின்றது.

இத்தகைய வரலாற்றைப் பிரதிபலிக்கும் முள்ளிவாய்க்காலில் இருந்துதான் தமிழ்த் தேச மக்களின் எழுச்சி எதிர்கால சந்ததியின் விடுதலை வரலாற்றைப் படைக்கப் போகின்றது” என்றார்.