எசினோபார்ம் தடுப்பூசி அனுமதி: இலங்கை அரசின் தகவலை மறுத்த WHO

‘இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் விளைவாக சினோபார்ம் தடுப்பூசி பாவனைக்கு அனுமதி கிடைத்தது’ என்ற தகவலை உலக சுகாதார ஸ்தாபனம் மறுத்துள்ளது.

இலங்கையின் கொரோனா நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க நேற்று மேற்படி கருத்து வெளியிட்டிருந்த நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் அதனை மறுத்துள்ளது.

“இலங்கைக்கு 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி கிடைத்திருந்தாலும், அவற்றைப் பயன்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி வழங்கப்படவில்லை என்பதை ஜனாதிபதி உலக சுகாதார ஸ்தாபன தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். உலக சுகாதார ஸ்தாபனத் தலைவர் – ஜனாதிபதி கோட்டாபய சந்திப்பின் விளைவாக சினோபார்ம் பாவனைக்கு அனுமதி கிடைத்தது” என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், இருவருக்கும் இடையிலான சந்திப்புக்கும் தடுப்பூசி அனுமதி வழங்கப்பட்டதற்கும் தொடர்பில்லை என்று உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.