மீன்பிடிப் படகில் வந்து புத்தளத்தில் மறைந்திருந்த தாயும் இரு பிள்ளைகளும் கைது

இந்தியப் பிரஜைகள் மூவர் புத்தளம் பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் நேற்று புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தாயும் இரண்டு பிள்ளைகளுமான மூவரே சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுளைந்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளனர். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டு உரிமையாளரும் கைதாகியுள்ளார்.

கைதான பெண் 34 வயதானவர் எனவும், அவரது பிள்ளைகள் 13 மற்றும் 4 வயதானவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சென்னையிலிருந்து கடந்த வாரம் மீன்பிடிப்படகு ஒன்றில் புறப்பட்ட இவர்கள் நேற்றைய தினம் புத்தளத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில், கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட இவர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர்.

குடிவரவு, குடியகல்வுச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த வீட்டு உரிமையாளரான பெண்ணும் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.