இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை  – அந்நாட்டு அரசு எச்சரிக்கை

வேறு நாடுகளின் விமான வழித்தடத்தை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் பிற நாடுகள் வழியாக அவுஸ்திரேலியர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து அவுஸ்திரேலியா திரும்பும் அவுஸ்திரேலியர்களுக்கு சிறை தண்டனை அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா பரவலின் 2வது அலை இந்தியாவை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. தினந்தோறும் இலட்சக்கணக்கில் பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருவதும், பலி எண்ணிக்கை 4,000ஐ நெருங்கியுள்ளதும் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு பயணத் தடை விதித்துள்ளது.

அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவும் இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை துண்டித்துள்ளது. இருப்பினும் வேறு நாடுகளின் விமான வழித்தடத்தை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து நேரடியாக இல்லாமல் பிற நாடுகள் வழியாக அவுஸ்திரேலியர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

 இந்நிலையில் இந்தியாவிலிருந்தும் இந்தியாவுக்கு 14 நாட்களுக்குள் சென்று திரும்பிய யாரும் அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யக் கூடாது என அந்நாடு அறிவித்துள்ளது.

வரலாற்றிலேயே முதல் முறையாக தங்கள் சொந்த குடிமக்களே அவுஸ்திரேலியாவுக்கு பயணம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது $66,000 என்ற கடுமையான அபராதம் விதிக்கப்படும் என   அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

இந்தியாவில் கண்டறியப்பட்ட SARS-CoV-2 என்ற வகை கொரோனா வைரஸ் அங்கு பரவிவிடக்கூடாது என்ற அடிப்படையிலேயே இந்த முடிவை அவுஸ்திரேலிய அரசு மேற்கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய அரசின் கூற்றுப்படி இந்தியாவில் 9,000 அவுஸ்திரேலியர்கள் வசித்து வருகின்றனர், இவர்களில் 600 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.