இலங்கையில் தற்போது கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸ் காரணமாகவே இலங்கையில் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்த சவேந்திரசில்வா,
“முன்னரை போல இல்லாமல் தற்போது நோய் தொற்றிற்கு ஆளாகி பத்து முதல் 14 நாட்களிற்குள் பொதுமக்கள் கடும் பாதிப்பை வெளிப்படுத்துகின்றனர்.
முன்னைய கொரோனா வைரஸ்களிடமிருந்து மாறுபட்ட விதத்தில் தற்போதைய வைரஸ் செயற்படுகின்றது. அதிகளவானவர்கள் தொற்றிற்குள்ளாகின்றனர். இதன் காரணமாக உயிரிழப்புகளும் அதிகரிக்கின்றன.
முன்னர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் பத்து முதல் 14வது நாளில் குணமடையத் தொடங்கினார்கள். இதன் காரணமாக உயிரிழப்புகள் குறைவாக காணப்பட்டன. ஆனால் புதிய வைரஸ் வேறுவிதத்தில் செயற்படுவதால் நாளாந்தம் ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதற்கு சமாந்திரமாக உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன” என்றார்.