நெருக்கடியை தீர்க்க மஹிந்த அழைத்த கூட்டத்தில் சலசலப்பு – வாசு, விமல், கம்பன்பில வெளிநடப்பு

மொட்டுக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளிடையே ஏற்பட்ட குழப்பத்தைத் தணிக்கும் விதத்தில் இன்று முற்பகல் பிரதமர் தலைமையில் கூடிய கூட்டம் பிசுபிசுத்துப் போனது. பல்வேறு சிறிய கட்சிகளையும் சேர்ந்த பல டசின் பிரதிநிதிகளை இந்தக் கூட்டத்துக்கு பஸில் ராஜபக்ஷ கூட்டி வந்தமையால், பிரதான கூட்டத்தில் பங்குபற்றாமல் விமல் வீரவன்ஸ, உதய கம்பன்பில்ல, வாசுதேவ நாணயக்கார போன்றோர் வெளியேறியமையால் கூட்டம் பிசுபிசுத்துப் போனது.

இன்றைய கூட்டத்துக்கு மொட்டுக் கூட்டணியின் பிரதான பத்துக் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்லாமல், சிறிய சிறிய கட்சிகள், அமைப்புகள், குழுக்களைச் சேர்ந்த பல டசின் கணக்கானோரும் அழைக்கப்பட்டிருந்தனர் என்பதை அறிந்த விமல் வீரவன்ஸ, உதயகம்மன்பில்ல போன்றோர் அது குறித்து பிரதமரின் அலுவலக ஆளணி அதிகாரியான பிரதமரின் மகன் யோஷித ராஜபக்ஷவுடன் தொடர்பு கொண்டு கேட்டனர். இதனையடுத்து, பஸில் ராஜபக்ஷவின் வழிகாட்டலில் இவ்வாறு பலர் அழைக்கப்பட்டிருக்கின்றமையை யோஷத உறுதிப்படுத்தினர்.

இதன் பின்னர் நேரத்துடன் பிரதமரின் அலுவலக இல்லத்துக்கு வருகை தந்த விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில்ல, வாசுதேவ நாணயக்கார போன்றோர் பிரதமர் மஹிந்த ராபக்ஷவைச் சந்தித்துத் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துவிட்டு வெளியேறினார்கள். எனினும் அவர்களுடன் வந்த சு.க.தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன மற்றும் சிலர் இருந்து பிரதமருடன் பேசி விட்டுச்சென்றனர்.

ஆயினும், மொட்டுக் கட்சிக் கூட்டணியின் உள்வீட்டுக் குழப்பத்தைத் தீர்க்க இன்று எடுக்கப்பட்ட கூட்ட முயற்சி பஸில் தலைமையில் பல சிறு கட்சிகள், அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கு பற்றியகாரணத்தால் பிசுபிசுத்துப் போனதாகச்சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.