மியான்மரின் நிலைமை சிரியா உள்நாட்டு போர் தொடக்கத்தை எதிரொலிக்கிறது – ஐ.நா.

இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கவலை வெளியிட்டுள்ளது.

மியன்மாரின் தற்போதைய நிலைமை 2011ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டு போர் தொடங்கியதை எதிரொலிப்பதாக சர்வதேச மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதர் மைக்கேல் பேச்லெட் கவலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சிரியாவில் 2011ஆம் ஆண்டு அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டது சில தனிநபர்கள் ஆயுதங்களை எடுக்க வழி வகுத்தது. பின்னர் அது நாடு முழுவதும் விரிவடைந்து உள்நாட்டு போராக மாறியது.

அப்போது சர்வதேச சமூகம் முறையான பதிலை வழங்காதது சிரியாவுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. தற்போது மியன்மாரின் நிலைமை ஒரு முழுமையான மோதலை நோக்கி நகர்கிறது. சிரியா மற்றும் பிற இடங்களில் கடந்த காலங்களில் நடந்த கொடிய தவறுகளை செய்ய சர்வதேச சமூகம் மீண்டும் அனுமதிக்கக்கூடாது’ என கூறினார்.